தமிழ் வருமோ சொல்!

சத்தியமணி
தேவாரம் படிக்காது திருவாசகம் பிடிக்காது
பூவாரம் தொடுக்காது ஓதுவார்பண் கேட்காது
தாவாரச் சிவன்கோயில் இடிப்போரைத் தடுக்காது
நாவோரம் துவேசத்தால் நற்றமிழ் வருமோசொல்
அருட்பாவைத் திவ்விய பிரபந்தங்கள் பாடாமல்
கருப்பாவைக் கம்பன்தன் ராமகதைக் கேளாமல்
திருப்பாவை ஆண்டாளை வேசியெனச் சொல்லிக்
கொடும்பாவி எரித்தாலே கனித்தமிழ் வருமோசொல்
பக்திக்கு விழையாமல் பண்பாட்டைக் குறைகூறி
புத்திக்கு ஏற்றாமல் வழிபாட்டைக் கறையாக்கி
சித்திக்கு மூடமெனும் பழக்கமென முடக்கித்தன்
யுத்திக்கு வேடமிடின் பைந்தமிழே வருமோசொல்
உருவில் சிவனாக அருவில் சிவனாக
திருவில் சிவனாகக் குருவில் சிவனாக
இருளில் சிவனாக எதிலும் இவனாக
அருளில் சிவனேதான் மறையில் சிவனான்
அவனைப் புரியாது எதுவும் தெரியாது
தவணைத் தவறுக்கு கர்மவினை புரியாது
தமிழ் வளர்த்த ஆன்மீகம் தர்மநெறியோடு
தமிழ் வளர்த்த ஆண்டவர் அறம்பொருளோடு
தமிழ் வளர்த்த இன்பவீடு பேரளித்தான்றோரின்
தமிழ் வளர்த்த சேவையைப் பழித்தால் தமிழ்வருமோ?