கதவுகள்
கவிதையும் படமும்: ரேவதி நரசிம்ஹன்
திறக்கும் கதவுகளுக்குப் பின் நிற்கும் விழிகள்
சில சமயம் அன்பு
சில சமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சில சமயம் வரவேற்பு.
எல்லாவற்றுக்கும் மௌன சாட்சி.
கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத மனங்கள்.
பாட்டியின் காலத்தில் கதவை மூடிய நாள்கள் இல்லை
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.
அவள் மன உரமே
அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலைவாசலை விட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன
வெள்ளியும் வைரமும் தங்க ஒட்டியாணமும்.
இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.
பக்கத்து வீட்டுப் பழனி மேலும் காவல்.
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
”அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.”
இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஓர் அதிர்ச்சி