பிரான்ஸில் பத்தாம் கம்பன் விழா – செய்திகள்
பிரான்ஸ் கம்பன் கழகம் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழாவை, 12மற்றும் 13 நவம்பர் 2011 ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடுகிறது. 12 நவம்பர் 2011 (சனி)அன்று பிற்பகல் 14:00 மணியிலிருந்து இரவு 20:30 மணிவரையும், 13 நவம்பர் 2011 (ஞாயிறு) அன்று காலை 10:00 மணியிலிருந்து இரவு 20:30 மணிவரையும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கம்பன் தமிழ் பாடும் பணியைச் சிறப்புறச் செய்யத் தமிழகத்திலிருந்து தமிழ் அறிஞர் பலர் வருகின்றனர். சிறப்புரை, ஆய்வுரை, தேனுரை, எழிலுரை, பட்டிமன்றம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம், கவியுரை, கவிமலர், தமிழிசை மற்றும் நாட்டியம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் சிறப்புச் சொற்பொழிவாளர்களாக திரு. தமிழருவி மணியன், நகைச்சுகைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம், முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.