கீர்த்தித் திருவகவல், திருவாசகத் திருவுலா தொடர் சொற்பொழிவு

0

பாஸ்கர் சேஷாத்ரி

இன்று மாலை மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களின் திருவாசகம் சொற்பொழிவுக்குச் சென்று இருந்தேன். இடம் – ஆர்கே அரங்கம், லஸ், மயிலாப்பூர்.

அடடா, என்ன அருமையான விளக்கவுரை. அவரின் தமிழ்ப் பேச்சும், மொழிப்புலமையும் அபாரம். ஒவ்வொரு ஊரைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல அவர் நம்மை அங்கே இட்டுக்கொண்டு செல்வது போல உணர்ந்தேன். அவரின் தமிழ் வீச்சும், பேசும் நேர்த்தியும், ஒரு பிரவாகமாக வெளிப்படும் வேகமும் பெரிய பிரமிப்பு. இப்படி மூச்சு விடாமல் ஒன்றரை மணி நேரம் பேசுவதும், இம்மி அளவு கூடப் பிசகாமல் சொல்ல வந்த விஷயத்தை நயம்பட உரைத்ததும் மிக அற்புதம்.

அவரின் சொல்லாட்சி, உரை மீது அவருக்கு இருந்த அந்த அதீதப் பற்று மெச்சத் தகுந்தது. ஒரு விஷயத்தைச் செய்யும் போது அந்தப் புள்ளியின் மேல் இருக்கும் பெருங்கவனம் அவரைக் கடைசி வரை அந்த இடத்தை விட்டு நகர்த்தவில்லை. ஒரு பொம்மைக்குச் சாவி கொடுத்தது போல அவர் பிரசங்கத்தை நகர்த்திக்கொண்டு போனது பெரும் லாகவம்.

உடன் பாடிய பாவ்யா ஹரியின் குரல் உன்னதம். ஒரு பெரிய அர்ப்பணிப்பு இல்லையெனில் இது போலப் பாடி, பாடலுக்கு உயிர் கொடுக்க முடியாது. இருவருக்கும் எனது வந்தனம். இதற்கு வசதி செய்து கொடுத்த ஆர்கே அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும். அவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. முக நூலில் அரசியல் பேசி கட்சிகளை கொண்டாடி, வைது கிடைத்ததைத் தின்று எப்போதும் போலப் பொழுதைக் கழித்திருக்கும் இந்த மாலையை மிக நற்பொழுதாக ஆக்கிய மூவருக்கும் எனது அன்பு மரியாதை. வாழ்க வாழ்க. இந்தத் தொடரின் அடுத்த கூட்டம் பற்றிய விவரங்களை முகநூலில் பதிவு செய்கிறேன். அவசியம் வந்து ஆனந்தக் கூத்தாடுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *