ரியாத்தில் இலக்குவனார், வ.உ.சி. விழா
– ஆல்பர்ட், அமெரிக்கா
ரியாத்(சவுதி அரேபியா), சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் வ.உ.சி. நினைவேந்தல், முருசேசன் தலைமையில், தேனி செயராமன் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
2010 அக்டோபர் 8ஆம் நாள் காலையில் மிகச் சரியாக 10 மணிக்குத் தொடங்கிய விழா இரவு 8 மணி வரை விறுவிறுப்பாக தொடர்ந்தது. ஆண்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்ச் சொல் விளையாட்டுகள்- இவற்றில் அனைவரும் பெருமகிழ்வோடு பங்கு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வில்லுப் பாட்டு
நாட்டுப்புறப் பாடல்கள், பரத நாட்டியம், இராச ராச சோழன் கோவிலின் 1000 ஆண்டுகள் பற்றிய உரை, ‘தமிழ் மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் கி.வை.இராசா குழுவினரின் வில்லுப் பாட்டு ஆகியவை, பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்திருந்தன.
ருசிகரமான போட்டிகள்
விழாவில் பெண்களுக்கான கோலப் போட்டி,உப்பல் ஊதி உடைத்தல் (பலூன் ஊதி உடைத்தல்), ஆகுல மங்கையர் யார்? போன்ற போட்டிகளும்,தமிழறிவை வளர்க்கும் விதயமாகக் குறுக்கும் நெடுக்கும்,நாத் திரிபுச் சொற்கள், பழமொழி கண்டறிதல், சொற்சமைத்தல் போன்ற தமிழார்வலர்களுக்கான ருசிகரமான போட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பிரான்சிலிருந்து
இலக்குவனார் பற்றிய உரையை பிரான்சிலிருந்து பேராசிரியர் பாவலர் பெஞ்சமின் லெபோ அவர்கள், பேரா.இலக்குவனாரின் தமிழ்த் தொண்டுகள் குறித்தும்,சமூகச் சிந்தனைகள் குறித்தும் மிக விளக்கமான உரையை மின்னூடகம் வழியாக வழங்கியது, செவிக்கினிய சேதியாக அமைந்தது.
சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவனும், வ.உ.சி. பற்றிய செய்திகளைத் தஞ்சையிலிருந்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசும் வழங்கிச் சிறப்பித்தனர்.
சிலம்புச் செல்வர் பொறிஞர் நாக.இளங்கோவன், பொறிஞர் சபாபதி, இரமேசு, கி.வை.இராசா, காமராசு, சீ.ந.இராசா உள்ளிட்ட ‘வசந்தம்’ குழுவினர், இரு விழா ஏற்பாடுகளையும் வெகு சிறப்பாக ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர்.