5

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(485)

திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

       – திருக்குறள் – 157 (பொறைடைமை)

புதுக் கவிதையில்…

தகுதியற்ற கொடியவற்றைப்
பிறர்
தனக்குச் செய்தாலும்,
அதனால் விளையும்
அல்லல் கண்டு நொந்து
அறனல்லாதவற்றை
அவர்க்குச் செய்யாதிருப்பது
அனைத்திலும் நன்று…!

குறும்பாவில்…

தனக்குப் பிறர் தகாதனவற்றைச்
செய்தாலும், அதுதரும் துன்பத்தால் அறனல்லாதவற்றை
அவர்க்குச் செய்யாதிருப்பது நன்று…!

மரபுக் கவிதையில்…

தகுதி யற்ற கொடியவைதான்
     தனக்குப் பிறரால் வந்தாலும்
மிகுதி யாக வருந்துன்பம்
     மீது கொண்ட கருத்தாலே
தகுதி யில்லா அவர்மீது
     தாங்க வியலா வகையினிலே
புகுந்தே அறமே யிலாச்செயலைப்
     புரியா திருத்தல் நன்றாமே…!

லிமரைக்கூ…

தனக்குப்பிறர் செய்தாலும் கெடுதலே,                    
தரணியில் நன்றாகும் தாம்நொந்தாலும் அவர்க்குத்
தீங்கு செய்யாமல் விடுதலே…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
பொறும வேணும்,
ஒலக வாழ்க்கயில
ஒசந்த கொணமான
பொறும வேணும்..

தாங்கமுடியாத கெடுதல
அடுத்தவன் நமக்குச் செஞ்சாலும்
அதுனால துன்பப்பட்டத நெனச்சி
நொந்துபோயி நாமளும்
அவனுக்குக் கெட்டத
செய்யாம இருக்கதுதான்
எல்லாத்திலயும் நல்லது..

அதால,
வேணும் வேணும்
பொறும வேணும்,
ஒலக வாழ்க்கயில
ஒசந்த கொணமான
பொறும வேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.