பொய்யெனப் பெய்யும் மழை….
யுகநிதி, மேட்டுப்பாளையம்
என் முற்றத்து மடியில்
எப்போதும்
வசந்தத்தின் தூறல்கள்..
வசிப்பதற்கு வீடு..
வயிறு நிறைந்திட தானியங்கள்..
சமைப்பதற்கு அடுப்பு
இமை விரித்துப் பார்ப்பதற்குத்
தொலைக்காட்சிப் பெட்டி..
பிள்ளைக்குப் படிப்பு..
பள்ளியில் மதிய உணவு..
வீட்டுக்கு மின்விளக்கு
விவசாயத்திற்கு மின்சாரம்..
பெண்ணுக்குச் சீர்வரிசை
பிரசவச் செலவு..
அரைக்க, துவைக்க
வங்கிக் கடன் வஞ்சியர்க்கு..
வாங்கிய கடன்
வட்டியுடன் தள்ளுபடி
விவசாயிக்கு..
நான் எதற்கு
உழைக்க வேண்டும்..
நாட்டைப் பற்றிச்
சிந்திக்க வேண்டும்..?
தேர்தலின் போது மட்டும்
திறந்தால் போதுமே
தாழ்பட்ட வாயிலை..!