இங்கிலாந்து அரசின் அடுத்த அரண்!

0

தலையங்கம்

வெளிநாட்டவரின் குடியேற்றத்தை மிகவும் கட்டுப்படுத்துவதற்கோ அன்றி தடுத்து நிறுத்துவதற்கோ இங்கிலாந்து அரசு தொடர்ந்து பல்வேறு விதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இன்று , எவர் ஒருவர் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புகிறாரோ அவர் பெரும் செல்வச் சீமானாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதாவது ஆண்டொன்றிற்கு 31 ஆயிரம் பவுண்டுகளிலிருந்து 49 ஆயிரம் பவுண்டுகள் வரை சம்பாதிப்பவராக இருக்க வேண்டுமாம். இந்த விதியில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் டாமியன் கிரீன் தெரிவித்துள்ளார். அதாவது நம் நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்கள் மட்டுமே அங்கு சென்று குடியுரிமைப் பெற முடியும். மேலும் அவர் கூறுவது, குடியேறப் போகிறவர்கள் உள்ளே நுழைந்த அன்றிலிருந்தே வசதி வாய்ப்புகளை அனுபவிப்பதற்காகவே வரவில்லை என்பதை அவர்கள் அறிய வேண்டுமாம். இதைவிடத் தங்கள் நாட்டிற்கு குடியேறப் போகிற வேற்று நாட்டவரை வேறு எப்படி அவமானப்படுத்த இயலும்? மருத்துவர்கள், கணினி வல்லுநர்கள், விஞ்ஞானிகள் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே வெளிநாட்டிற்குச் செல்கிறார்கள் என்றாலும், குறிப்பிட்ட அந்த நாட்டிற்கு இதனால் எந்தப் பலனும் இல்லாமலா அவர்களை வரவேற்கிறார்கள்? இவர்களின் சேவைகள் அவர்களுக்கும் அத்தியாவசியம் என்பதனால் மட்டும் தானே விசா அளித்து வரவேற்கிறார்கள். அப்படி இருக்க வருபவர்கள் தங்கள் நாட்டின் சுகங்களை அனுபவிப்பதற்காக வருபவர்களாக இருக்கக் கூடாது என்று சொல்வது கீழ்த்தரமான வாதமாக அல்லவா இருக்கிறது? இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் என்னவென்றால், பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்களே ஆண்டிற்கு 25000 பவுண்டுகளே சம்பாதிக்கிறார்கள் என்பதுதான்.

வெளிநாட்டுப் பெண்களை ம்ணந்து கொள்ளும் இங்கிலாந்து நாட்டவர், தம் மனைவியின் வருமானம் ஆண்டிற்கு 25 ஆயிரம் பவுண்டுகளாகக் குறிப்பிட்டு விசா பெறுகிறார்கள். அதாவது இவர்கள் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த வகையான நிதி உதவியும் பெற முடியாத வகையில் வெகு சாமர்த்தியமாக விதிக்கப்பட்ட புதிய விதி. இப்பெண்களுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கல்வி கற்பதற்காகச் செல்லும் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர், படிப்பு முடிந்தவுடன் அங்கேயே பணிபுரிவதற்கான விசாவையும் ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியர்கள் மட்டுமல்லாது மற்ற ஆசிய நாட்டவர்களும்தான். இலட்சக் கணக்கில் செலவு செய்து படித்து விட்டு அங்கேயே வேலை பார்த்து சம்பாதித்து சரிகட்டி விடலாம் என்ற தைரியத்தில், வங்கிக் கடனையோ, பாட்டன், அப்பன் சொத்தை விற்றோ கல்வி கற்க செல்ல முடியாது. செல்வச் சீமானின் குழந்தைகள் மட்டும் பெருமைக்காகச் சென்று படித்து விட்டு வரலாம். இந்தியர்களை குறிவைத்துத் தாக்கும் இனவாதம் துள்ளி விளையாடுவது வெளிப்படையாகத் தெரிகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் இரண்டு கைபேசிகள் மற்றும் கைக்கடிகாரங்களுக்காக ஒரு இந்திய கணவன், மனைவியரை கொலை செய்திருப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. மனித உரிமைகளில் தலையிடக் கூடிய இது போன்ற சட்டங்கள் நாளடைவில் கல்விக்காகவும், பணிக்காகவும் செல்வோரின் எண்ணங்களில் ஓர் கசப்புணர்வை ஏற்படுத்துவது இங்கிலாந்து அரசாங்கத்திற்கும் ஊறு விளைவிக்கக் கூடியதுதான்.

இவ்வாறு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு ஒரு சட்டம், அல்லாதவர்களுக்கு ஒரு சட்டமென்ற நிலை ஏற்படுமானால் காமன்வெல்த் என்ற ஓர் அமைப்பு எதற்கு என்று கேட்கத் தோன்றுகிறது.

படத்திற்கு நன்றி :

http://www.workpermit.com/uk/uk.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.