உலகளாவிய கல்விக்கு வித்திடும் சேவாலயா மற்றும் லண்டன் கல்வி முறை
உலகளாவிய கல்விக்கு வித்திடும் சேவாலயா மற்றும் லண்டன் கல்வி முறை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேநிலைப்பள்ளியில் 06.02.2012 அன்று காலை 10 மணியளவில் பிரிட்டிஷ் கவுன்சிலின் மூலம் உலகளாவிய கல்விக்கு வித்திடும் பாடப் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் லண்டனைச் சார்ந்த கன்னிகாம் ஹில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ரிச்சர்ட் டாசன் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சேவாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்க்ள் சிறப்பு விருந்தினர்களை இந்திய கலாச்சார முறையில் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சேவாலயாவிற்கு இரண்டாவது முறையாக வருகை தரும் சிறப்பு விருந்தினர் திரு.ரிச்சர்ட் டாசன்(கன்னிகாம் ஹில் பள்ளியின் தலைமையாசிரியர்) அவர்கள் பேசுகையில் உலகளாவிய கல்வி முறை என்பது ஒவ்வொரு நாட்டினரும் பிற நாடுகளில் கொண்டாடப்படும் விழாக்கள், உண்ணும் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், அந்நாடுகளின் வரலாறு மற்றும் கல்வி முறையில் உள்ள புதுமைகளைப் பற்றி பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதே ஆகும் என்று கூறினார். 2009 ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இத்திட்டமானது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது எனவும் ஒவ்வொரு வாரமும் இப்பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளிக் குழந்தைகளுடன் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் தொடர்பு கொள்ளும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர் எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இரு நாட்டவர்களின் கலாச்சாரத்தை இணைக்கும் வகையில் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட காலண்டர் மற்றும் படங்கள் வரையப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டது மேலும் இந்தியக் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், கருணையைப் போற்றும் கருணா கிளப்பிற்கான பரிசளிப்பு விழா ஆகியவைகள் நடைபெற்றது.
ஏற்கனவே சேவாலயா பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேர் லண்டன் சென்று அங்குள்ள கல்வி முறையைப் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.V.முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்க சேவாலயா பள்ளித் தலைமையாசிரியை திருமதி.அன்னபூர்ணா அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
சேவாலயாவுக்காக,
(வி.முரளிதரன்)
நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்