பஞ்சாபிகளின் போர்த் தந்திரம்

2

(நினைவுகளின் சுவட்டில் – பாகம்  II – பகுதி  14)

வெங்கட் சாமிநாதன்

Venkat_swaminathanபுர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்குக் கல்கத்தாவிலிருந்து ஆங்கில தினசரி பத்திரிகைகள் வரும். புர்லாவுக்கு வந்தவை அம்ரித் பஜார் பத்திரிகாவும், ஸ்டேட்ஸ்மனும். ஸ்டேட்ஸ்மன் ஆங்கிலேயர் நடத்தும் பத்திரிகையாச்சே என்று அம்ரித் பஜார் பத்திரிகை பக்கம் மனம் சென்றது. அது ஒரு பெரிய ஸ்தாபனம். அநேகமாக ஆனந்த பஜார் பத்திரிகா என்னும் வங்காளி மொழிப் பதிப்பையும் அது வெளியிட்டு வந்தது. பெரும்பாலும் வங்காளிகள் இந்த இரண்டு பத்திரிகைகளில் ஒன்றைத்தான் விரும்பிப் படிப்பார்கள். துஷார் காந்தி கோஷ் அதன் ஆசிரியர். அது நம்மூர் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், சுதேசமித்திரன், தினமணி தினசரிகள் போன்று தேசிய உணர்வு மிக்க பத்திரிகை. சுதந்திரப் போராட்டத்தோடு தம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்கள்.

ஜுகாந்தர் என்று வங்காளி பத்திரிகையும் கூட வந்தது. இன்னொரு பத்திரிகையும் ஆங்கில பத்திரிகைதான், கல்கத்தாவிலிருந்து வந்துகொண்டிருந்தது. பெயர் சரியாக நினைவில் இல்லை. ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதை இப்போது நினைவுகொள்ளக் காரணம் இடையிடையே அந்தப் பத்திரிகையும் வாங்கிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் அதில் எம்.என். ராய் தன் நினைவுகளை அவ்வப்போது எழுதிக்கொண்டிருப்பார். எம்.என். ராய், லெனின் காலத்திலிருந்து அவர் காலத்திய தலைவர்களுடன் உறவாடியவர். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்கு என்று அல்லது கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் கொமின்டெர்ன் சார்பில் தொடர்பு வைத்துக்கொள்ள அனுப்பப்பட்டவர் என்று படித்த ஞாபகம். எந்த நாட்டுக்கு அவ்வாறு அனுப்பப்பட்டார் என்பது நினைவில் இல்லை. பெரிய மேதை. சிந்தனையாளர். ஸ்டாலின் அதிகார உச்சத்தை அடைந்த காலத்தில் அவர் ஒதுக்கப்பட்டார் என்றும் படித்த நினைவு. ஐம்பதுகளில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றவராக, கல்கத்தாவில் வாழ்ந்துகொண்டு பழைய வரலாறுகளை அவ்வப்போது எழுதி வந்தார்.

M.n. royமாவோ, சீனாவைக் கைப்பற்றி கம்யூனிஸ்ட் ஆட்சியை ஸ்தாபித்ததும் ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்த மாஸ்கோ சென்றார். அப்போது எம்.என். ராய் எழுதினார், ஸ்டாலின் மற்ற நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல மாவோவையும் தம் கைக்குள் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்தான். ஆனால் அது மாவோ விஷயத்தில் நடக்காது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றி, முழுக்க முழுக்க மாவோவின் சாதனையேயாகும். அதில் ஸ்டாலினுக்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை என்று எழுதினார். அப்போது அது எனக்கு, என்ன இப்படி எழுதுகிறாரே என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் இப்போது அவர் சொன்னது எவ்வளவு தீர்க்கதரிசனமான பார்வை என்று ஆச்சரியப்பட வைக்கிறது. கம்யூனிஸ்டுகளில் தீர்க்க தரிசியாகவும் சிந்தனையாளராகவும் ஒருத்தர் இருப்பது வியக்க வைக்கும் விஷயம்தானே. அதனால்தான் அவர் ஸ்டாலினோடு சண்டை போட வேண்டி வந்ததோ, கம்யூனிஸ்ட் இண்டர்னேஷனிலிருந்து விலக்கப்பட்டாரோ என்னவோ.

இத்தோடு இன்னொன்றும் சேர்ந்துகொண்டது. அது இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா. நான் வீக்லி படிக்கத் தொடங்கிய காலத்தில் சி.ஆர். மண்டி என்பவர் ஆசிரியராக இருந்தார். அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் அதிகம் தெரியாது. ஆனால் வீக்லியில் என்னை மிகவும் கவர்ந்தது அதில் வரும் ஓவிய அச்சுப் பதிவுகள். வீக்லியிலிருந்து தான் சூஸா, ஹுஸேன், ஜமினி ராய், ஹல்தார், ரஸா, கோபால் கோஷ், அம்ரித் ஷேர் கில், இப்படி அநேகரின் ஓவியங்கள் அச்சில் பார்க்கக் கிடைத்தன. கட்டாயம் யாராவது ஒருவரின் ஓவியம் முழுப் பக்கத்துக்கு அச்சாகியிருக்கும். சில சமயங்களில் அந்தந்த ஓவியரைப் பற்றிய அறிமுகமும் விமர்சனமும் கூட யாராவது எழுதியிருப்பார்கள். வீக்லியில் வெளியிடப்படும் ஓவியர்கள் பெரும்பாலும் பம்பாயைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். வங்க ஓவியர்களும் அவ்வப்போது இடம் பெறுவார்கள். தென் பிராந்தியத்திலிருந்து யார் பெயரையும் அறிந்துகொண்டதாக எனக்கு நினைவில் இல்லை.

இரண்டு பெயர்கள் மிக முக்கியமாக நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வீக்லி தான் எனக்கு இவர்களை அறிமுகப்படுத்தியது. ஒருவர் ஆனந்த குமாரஸ்வாமி. இன்னொருவர் இலங்கைக்காரர், ஜார்ஜ் கீட். (GEORGE KEYT) அவரை அக்காலத்தில் ‘கீழைத் தேசத்து பிக்காஸோ’ என்று குறிப்பிட்டுப் பேசியது எனக்கு நினைவில் இருக்கிறது. வீக்லியில் வரும் ஓவியங்களைப் பார்ப்பதும் அதில் தரப்பட்டிருக்கும் அறிமுகக் கட்டுரைகளைப் படிப்பதுமாக இருந்ததுதான் எனக்கு அதில் ருசி ஏற்பட்டது. பின் இரண்டு வருடங்கள் கழித்து, கல்கத்தா போனபோது அங்கு விக்டோரியா மெமோரியல் ஹாலில் இன்னும் ஒரு பெரிய விஸ்தாரமான உலகத்துடன் அச்சில் அல்ல, நேரடிப் பரிச்சயம் காணக் கிடைத்தது.

பின்னும் அடுத்த இரண்டு மூன்று வருஷங்கள் கழித்துச் சென்ற போது, நேஷனல் எக்ஸிபிஷன் ஆஃப் ஆர்ட்டில் போட்டிக்கு வந்த ஒவியங்கள், பரிசு பெற்றவை என, தில்லியில் தொடங்கியது கல்கத்தாவுக்கும் கொண்டு வரப்பட்ட சமயம், நான் வேலை தேடி இண்டர்வியூக்கு அங்கு சென்ற சமயமாக இருந்தது. அப்போதுதான் நான் வீக்லியில் அச்சில் பார்த்த ஓவியர்களின் படைப்புகளை அவற்றின் ஒரிஜினலில் பார்க்கக் கிடைத்தது, பரவசம் நிறைந்த ஓர் அனுபவமாக இருந்தது. அது பற்றிப் பின்னர். ஆனால் அதற்கெல்லாம் வித்தாக இருந்தது, அந்த ஒரிய மாநில ஒதுங்கிய முகாமில் என்னை வந்தடைந்த வீக்லி பத்திரிகை என்று சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன்.

V._Shantaramஇன்னொன்று சொல்ல வேண்டியது பாபுராவ் படேலின் மதர் இந்தியா. எனக்கு அது மிகவும் சுவாரஸ்யம் தருவதாக இருந்தது. அதன் விலை ரூ.3 அந்தக் காலத்தில் மிக அதிகம். ஆர்ட் பேப்பரில்தான் முழுவதும் அச்சிடப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் ஷாந்தா ராம், நம்மூர் பாஷையில் இயக்குநர் சிகரம். ஹிராகுட் போன உடனேயே எனக்கு அவருடைய தஹேஜ் சம்பல்பூர், விஜயலக்ஷமி டாகீஸில் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு என்னவோ அவரிடம் அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படவில்லை. அதற்கும் முன்னால் கும்பகோணத்தில் படித்துக்கொண்டிருந்த போது ஷாந்தா ராமின் படம் ஒன்று அப்னா தேஷ்-ஓ என்னவோ, புஷ்பா ஹன்ஸ் என்ற ஒரு புதுமுக நடிகை தான் கதாநாயகி. பள்ளிக்கூடப் பாடப் புத்தக ரகத்தில் அதில் நம்மூர் பாஷை மெஸேஜ் மண்டையிலடிப்பது போல் சொல்லப்பட்டிருக்கும். எனக்குப் பிடித்ததில்லை. ஆனால் ஷாந்தா ராம் ஒரு பெரிய, ரொம்ப பெரிய தலை. அந்தக் பெரிய தலையையே பாபு ராவ் படேல் மிகக் கடுமையாகத் தாக்குவார். அது எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் விட அதில் வரும் கேள்வி பதில்கள் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் பாபுராவின் கேள்வி பதில்களை ஓசியில் படிக்க, என் இடத்துக்கு வந்து விடுவார்கள்.

baburao patelஇந்தப் பாபுராவ் படேல் காரணமாக எனக்கு ஒரு பெரியவரின் சிநேகமும் கிடைத்தது. அவர் 30 மைல்கள் என்னவோ தள்ளி, சிப்ளிமாவா, பர்கரா, எது என்று நிச்சயமாக நினைவில் இல்லை. அங்கு இருந்த எக்ஸிக்யூடிவ் என்ஜினீயர் ஆஃபீஸில் டிவிஷனல் அக்கௌண்டண்டாக வேலை பார்த்தார். அவர் புர்லாவில் தலைமை அலுவலகத்துக்கு வந்து சில நாள்கள் தங்குவார். எப்படியோ என்னுடன் அறிமுகமாக, என் வீட்டில்தான் தங்குவார். தங்கும் போது அவர் செலவில்தான் நாங்கள் சம்பல்பூர் போவோம். அவர் செலவில்தான் சாப்பாடு எல்லாம். வேறு யாரையும் செலவு செய்ய விடமாட்டார்.

முதல் தடவை என்னிடம் இருக்கும் மதர் இந்தியாவைப் பார்த்து, ‘எனக்கு இதைப் படிக்கக் கொடு, எடுத்துப் போகிறேன்’ என்றார். பழைய இதழ்களையும் ஒன்று விடாமல் எடுத்துக்கொண்டார். உடனே அவ்வளவுக்கும் இதழுக்கு ரூபாய் மூன்று என்று கணக்குப் பண்ணி என் பையில் திணித்தார். ‘இனிமேல் நீயே வாங்கி வை. நான் வந்து எடுத்துப் போகிறேன்’ என்று எங்களுக்குள் ஒரு ஒப்பந்தமும் வாய் வார்த்தையாக பதிவாகியது.

பின் நண்பன் ஒருவன் சொன்னான். “ரொம்ப தங்கமான மனுஷன்டா. நிறைய சம்பாதிக்கிறார். கண்டிராக்டர்கள் எல்லாம் வந்து பில் பாஸ் பண்ணப் பணம் கொடுப்பான். அவர் தன் கீழே இருக்கும் ஒவ்வொருவனுக்கும் பணம் கொடு என்று எல்லாருக்கும் பணம் பட்டுவாடா நடக்கும். ஊர்லே ஒரு பொண்ணு அவருக்கு. ரொம்பப் பாசம் அந்தப் பொண்ணுகிட்டே. இங்கே எப்படி அவங்களை அழைச்சிண்டு வரது? ஒண்ணும் வசதியே இல்லையே. பொண்ணும் படிக்கிற பொண்ணு” என்று மன வேதனையோடு சொல்வார்” என்று செய்தி சொன்னான். நாங்கள் அவரை இது பற்றி எல்லாம் துருவி எதுவும் கேட்பதில்லை. அவர் எங்களுடன் இருக்கும் போது ஜாலியாகப் பொழுது போகும். அவருக்கும் எங்கள் சிநேகம் ஏதோ விதத்தில் வேண்டித்தான் இருந்தது என்று தோன்றியது.

அவர் இல்லாத போது இன்னொரு இரட்டையர் என் அறைக்கு அடிக்கடி வந்து பேசிச் செல்வார்கள். இருவரும் ரொம்ப வருஷங்கள் மலாயாவில் இருந்தவர்கள். மலாய் பாஷையில் பேசி எங்களைக் குஷிப்படுத்துவார்கள். நான் வேலை பார்த்த செக்‌ஷனிலும் இரண்டு வங்காளிகள் மேல்நிலை கிளர்க்குகளாக வேலை பார்த்தார்கள். வயதானவர்கள். அவர்களும் பர்மாவில் முதலில் வேலை பார்த்தவர்களாம். பின்னர் இரண்டாம் யுத்த காலத்தில் பர்மாவை ஜப்பானியர் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பி வந்ததாகக் கதை சொல்வார்கள். காடு மலைகளைக் கடந்த துக்கக் கதைகள் சொல்வதில்லை. ‘முன்னால் போபாலில் இருந்தோம். பின்னர் கல்கத்தாவுக்கு வந்தோம்’ என்று சொல்லும் பாணியில்தான் அவர்கள் பர்மாவிலிருந்து தப்பி வந்த கதையைச் சொன்னார்கள். எங்கள் செக்சன் ஆஃபிஸராக இருந்த மலிக் முரளீதர் மல்ஹோத்ராவும் அவர்களை தன் கீழ் வேலை செய்பவர்களாக நடத்துவதில்லை. மிகுந்த மரியாதை அளிப்பார் அவர்களுக்கு.

அதே போல தான் இன்னும் இரண்டு முதியவர்கள், பஞ்சாபிகள், ஹரிசந்த், உத்தம் சந்த் என்று. இருவரும் முல்தானியர்கள். சக்கர் அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அங்கு அணைக்கட்டு முடிந்ததும் ஹிராகுட்டுக்கு வந்தார்கள். இந்த முதியவர்கள் எல்லோரும் மிக அமைதியாக, கட்டுப் பாடாக, மிகுந்த ஈடுபாட்டோடு தம் வேலையில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் இளையவர்கள் போடும் சத்தத்தை, ரகளைகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள். சிறு வயதில் இப்படித்தான் இருக்கும் என்று சிரித்து ஒதுக்கி விடுவார்கள்.

எனக்கு இந்தப் பெரியவர்கள் உலகம் மிக ஆச்சரியமாகவும் அதே சமயம் மரியாதைக்கு உரியதாகவும் பட்டது. நாலைந்து இளம் வயதினர் என்னைவிட நான்கைந்து வயது மூத்தவர்கள். எப்போதும் ரகளை செய்துகொண்டிருப்பார்கள். முரளீதர் இல்லாத போதுதான். ஒரு சமயம் ஏதோ விஷயத்தில் பெரும் வாக்கு வாதம். எனக்கும் குப்தா என்னும் இன்னொருவனுக்கும். அவன் என்னைவிட படித்தவன். அவனுக்குப் பஞ்சாபி, ஹிந்தி தவிர கொஞ்சம் இங்கிலீஷ். எனக்கு அவர்களுடன் தொடர்ந்து பேசுவது என்பது இங்கிலீஷில்தான் சாத்தியம். நான் ஒரு முறை ரொம்ப சூடான வாக்கு வாதத்தில் என்னமோ இங்கிலீஷில் படபடப்புடன் சத்தமிட்டுச் சொல்லி நிறுத்தினேன். தொடர்ந்து காட்டமாக இங்கிலீஷில் பேசியதும் எல்லோரும் ஒரிரு நிமிடம் வாயடைத்து நின்றனர்.

இனி இவர்களுக்குப் பேச ஏதுமில்லை என்று வாதத்தில் வென்று விட்டதான மிதப்பு எனக்கு. ஆனல் சற்றுத் திகைத்த குப்தா, உடனே பஞ்சாபியில் ‘அரே ஜா ஜா படா ஆயா அங்க்ரேஸ் தா புத்தர்” (டேய் போடா நீ, என்னமோ இங்கிலீஷ்காரன் பெத்தாப்பல தான் வந்துட்டான் இங்கிலீஷ்லே பொளக்கறதுக்கு) என்று கைகளை வேகமாக வீசி, தன் இடத்துக்குப் போய் உட்கார்ந்தான்.

அவ்வளவுதான். ஒரே கூச்சல், குப்தாவைப் பாராட்டி “ஹா க்யா பாத் ஹை. கமால் கர் தித்தா குப்தா சாப். கமால் கர் தித்தா” (ஆஹா, பிரமாதம், குப்தா, என்ன வசமான பிடி பிடித்தாய். கொன்னுட்டியேப்பா ஆளை, இனி எங்கே அவன் எந்திரிக்கிறது? என்பது போல) என்று சத்தமாகக் கும்மாளமிட்டுக்கொண்டே குப்தா இருக்கும் இடம் சென்று, அவன் கைகளைக் குலுக்கிக்கொண்டே இருந்தார்கள்.

குப்தா எனக்கு என்ன பதில் சொன்னான், எப்படி என்னை அவன் வாதில் வென்றான் என்பதெல்லாம் எனக்குப் பிடிபடவே இல்லை. ஆனால் அன்று தோற்றது நான்தான். வெற்றி வீர வாகை சூடி, பெருமிதப் புன்னகையில் இருந்தது குப்தா சாப் தான். இவர்கள்தான் பஞ்சாபிகள். எந்த பிரசினையையும் கையாண்டு வெற்றி பெறும் உத்தி. நானும் கொஞ்ச நேரம் திகைத்தாலும் பின்னர் அவர்கள் கும்மாளத்தில் கலந்துகொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். குப்தாவுக்கும் எனக்கும் பகைமை ஏதும் இல்லை. இது அவர்களது போர்த் தந்திரம். தமாஷாகத் தான் இருந்தது….

(நினைவுகள் தொடரும்….

===========================================

படங்களுக்கு நன்றி: வி்க்கிப்பீடியா 1 | 2http://gallimafry.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பஞ்சாபிகளின் போர்த் தந்திரம்

  1. நினைவுகள் ஊற்றுப்போல் கொட்டுகின்றன அல்லவா!

  2. Where we can get the books published by Akal Pathipakam ? The phone number 044-28115584 is continuously ringing  and no one picked up.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *