46 தனித் தொகுதிகளில் 413 தலித்துகள் போட்டி
நடைபெற உள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 46 எஸ்சி / எஸ்டி தனித் தொகுதிகளில் 413 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 369 பேரும், பெண் வேட்பாளர்கள் 44 பேரும் களத்தில் உள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தொகுதிகள் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டவை. எஞ்சியுள்ள தனித் தொகுதிகள், எஸ்சி பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
அரியலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தனித் தொகுதிகள் ஏதுமில்லை.
காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.
மொத்தம் உள்ள 46 தனித் தொகுதிகளில் சென்னை மாவட்டம் திருவிக நகர் சட்டப் பேரவை தொகுதியில் அதிகபட்சமாக 16 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 2 பெண் வேட்பாளர்களும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதியிலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஐந்து பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தனித் தொகுதியில்தான் பெண் வேட்பாளர்கள் அதிகமாகப் போட்டியிடுகின்றனர். இங்கு போட்டியிடும் மொத்தம் 14 வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள் ஆவர்.
மேலும் 46 தனித் தொகுதிளில் 15 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
=============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://www.bharatonline.com