தமிழர் பண்பாடு
ஆன்மிகத்தில் மேன்மைகண்ட அருங்குணத்தார் – தம்
அகத்திலென்றும் அன்புநிறை நல்மனத்தார்
நானென்ற நச்சகந்தை நாளுமின்றி – என்றும்
நாடுயர நலம்தேடும் நல்இனத்தார்
வள்ளுவனார் வகுத்தளித்த வாழ்நெறியில் – இவ்
வையகமே வாழ்த்திநிற்கும் வான்குணத்தார்!
அள்ளத்தான் குறையாதஅருங்; கவியால் – பல
கள்ளத்தனம் கரைத்திட்ட கண்ணியத்தார்!
வந்தோரை வாழவைக்கும் செந்தமிழர் – இவர்
விருந்தோம்பல் பண்பினுக்கோர் உதாரணத்தார்!
நொந்தோரும் நிமிர்ந்திடவே நேயங்காட்டி – தினம்;
இல்லார்க்கு ஈந்துதவும் இரக்கத்தார்!
நாகரீகத் தொட்டில்களின் நாற்றமுணர்ந்து – அதை
நாடாதுநல் லறங்காக்கும் நற்பண்பாளர்!
மோகத் தேடல்களில் மூழ்கிக்கிடக்கும் – மேலைக்
கலாச்சாரந் தனைவெறுக்கும் கனிமனத்தார்!
பக்தியிலக்கியப் பரவசங்களில் பண்பாடுகண்டு – அதைப்
பாரெங்கனும் பறைசாற்றும் பாரம்பரியத்தார்!
முக்திகண்ட மூத்தோர் வழிநடந்து – பல
வித்தைகளை வெளிக்கொணர்ந்த சித்தரினத்தார்!
ஓங்குதமிழர் பண்பாட்டுக்கோர் ஒப்பீடேது – இதை
உணர்வுள்ளோர் மறுத்திடவே இயலுமாகூறு!
ஈங்கிதனை உணர்ந்திடணும் இத்தலைமுறையும் – அவர்
இயன்றவரை காத்திடனும் இன்னுயிரீந்து!
படத்திற்கு நன்றி
முன்னைப் பெருமை பாடி
மூத்தோர் மகிமை பாடி,
கன்னல் தமிழது கொண்டே
கடலென கவிதை மூலம்
இன்னல் வராது காக்க
இளையோர் அறியச் சொல்லும்
மின்னல் கவியாம் முகிலோன்,
முயற்சி வெல்க வெல்கவே…!
-செண்பக ஜெகதீசன்…