தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-15)

0

முகில் தினகரன்

“வாங்க.. வாங்க.. சீக்கிரம் கட்டிலுக்கு வாங்க!. எல்லாமே இப்ப நல்லா ஞாபகம் வந்திடுச்சு.. ”என்று சொல்லி, அவன் கையைப் பிடித்துப் பலவந்தமாய் கட்டிலுக்கு இழுத்துச் சென்ற ரேணுகா, அவன் பார்த்துக் கொண்டிருக்கவே உடைகள் ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்தாள்.

“அய்யய்ய.. என்ன.. என்னம்மா இது?” சுந்தர் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ள,

“அட.. இப்படித்தான் பண்ணனுமாம்!. நீலவேணி அத்தை சொல்லிச்சு!” என்றவள் அவன் வேட்டியையும் உருவ முயற்சித்தாள்.

விலகி ஓடியவன், “த பாரும்மா.. இதெல்லாம் இப்ப பண்ணக் கூடாது!. மொதல்ல நீ பொடவையைக் கட்டு!” என்றான் சற்றுக் காட்டமாய்.

“அய்யோ.. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை!. நீலவேணி அத்தை உங்களுக்கு சொல்லித் தரலையா”

“எனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலை!. நீ இப்பப் பொடவையைக் கட்டப் போறியா இல்லையா?” விழிகளை உருட்டி மிரட்டினான்.

அந்த மிரட்டலில் பயந்து போன ரேணுகா, திடீரென்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

தர்ம சங்கடத்துக்கு ஆளாகிப் போன சுந்தர், அவளைச் சமாதானப் படுத்தும் விதமாய் அவளை நெருங்கி வர, அவன் எதிர்பாராத வேளையில் சட்டென்று ஓடிப் போய் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் நடுக் கூடத்தில் நின்று கொண்டு “ஓ..”வென்று அவள் கத்தி அழ, ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களெல்லாம், என்னவோ?. ஏதோ?வென்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து அவளிடம் வந்து நின்றனர்.

அவள் கோலத்தைப் பார்த்த அவளுடைய தாய் எங்கிருந்தோ ஒரு போர்வையைக் கொண்டு வந்து அவள் மீது போர்த்தி விட்டுத் தன் கணவன் பக்கம் திரும்பி, “என்னங்க நீங்க சும்மா பார்த்துக்கிட்டு நிக்கறீங்க?. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு என்ன? ஏது?ன்னு விசாரிங்க!”

கூனிக் குறுகியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் சுந்தர்.

“என்ன மாப்பிள்ளை.. என்ன ஆச்சு?. ஏன் ரேணுகா அழறா?”

பதில் சொல்ல முடியாமல் தவித்தான் சுந்தர். அவன் தவிப்பைத் தவறாகப் புரிந்து கொண்ட மற்றவர்கள், “அட.. புதுப் பொண்ணுல்ல அதான் மெரண்டிருக்கு!. மாப்பிள்ளை கொஞ்சம் மொரடு போலிருக்கு!” சொல்லியவாறே அங்கிருந்து குறுஞ்சிரிப்புடன் கலைந்து சென்றனர்.

எல்லோரும் சென்றதும், சுந்தரை நெருங்கி வந்து, அவன் தோளில் கை போட்ட ரேணுகாவின் தந்தை, “என்ன மாப்பிள்ளை இப்படிப் பண்ணிட்டீங்க!. நான்தான் சொன்னேனில்ல.. “அவள் வயசுதான் இருபது.. ஆனா இன்னும் குழந்தை மாதிரி”ன்னு அதனால.. மொரட்டுத்தனம் வேண்டாம்!. கொஞ்சம் சாந்தமா.. பக்குவமாக் கையாளுங்க மாப்பிள்ளை.. உங்க பொஞ்சாதிதானே.. எங்க போயிடப் போறா?”

செத்து விடலாம் போலிருந்தது சுந்தருக்கு, “நானா?. நானா?. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்?”

“சரி.. சரி.. ரேணுகாவைக் கூட்டிக்கிட்டு உள்ளார போங்க!” என்றபடி அவளை மீண்டும் அறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனாள் மாமியார்க்காரி.

கதவைத் தாழிட்டு விட்டு வந்த சுந்தர், படுக்கையில் விழுந்து வாயைப் பிளந்தபடித் தூங்கும் ரேணுகாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். “அடிப்பாவி.. ஒரே நிமிஷத்துல தூங்கிட்டாளே!”

தலையணையை மட்டும் எடுத்துக் கொண்டு அறையின் மூலைக்குச் சென்று தரையில் படுத்தான். மறுநாள் காலை எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிக்கப் போகிறோமோ?. என்கிற கவலையில் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான்.

தன் தங்கையின் நிம்மதிக்காக ரேணுகாவைக் கைப்பிடித்ததில் தன் வாழ்க்கையின் நிம்மதியைத் தொலைத்து விட்டிருந்தான் சுந்தர். திருமணம் செய்தால் ரேணுகா குணமாகி விடுவாள் என்ற கூற்று பொய்யாகிப் போனது. நாளுக்கு நாள் அவளது ரகளை அதிகமாகிக் கொண்டே போனது. சில நாள் சமையலறையில் புகுந்து “நான் சமைக்கிறேன்.. அத்தை!” என்று சொல்லி மொத்தத்தையும் பாழாக்கி அனைவரையும் விரதமிருக்கச் செய்து விடுகின்றாள்.

திடீர் திடீரென்று அர்த்தமேயில்லாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதும், வீட்டுப் பொருட்களை உடைத்தெறிவதும், துணிமணிகளைக் கிழித்தெறிவதும் அவளது வாடிக்கையான வேடிக்கைகள்.

தன் மகனின் நிலையை நினைத்து லட்சுமி கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. “ஹூம்.. இந்தப் பையனுக்கும் ஒரு நல்ல நாள் வராமலா போய்டும்?” என்று தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அந்த முதிய ஜீவனால்.

 

(தொடரும்)

படத்திற்கு நன்றி: http://thedipaar.com/news/news.php?id=15413

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.