இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் பாராட்டு
பிஎஸ்எல்வி சி16 ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எந்தவிதத் தவறும் நிகழாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதன் மூலம் செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களில் இஸ்ரோவின் மேம்பட்ட திறன் வெளிப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார்.
விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் “பிஎஸ்எல்வி சி 16 ராக்கெட் மூலம் இந்தியாவின் ரிசோர்ஸ் சாட் -2, இந்திய- ரஷ்ய யூத்சாட், சிங்கப்பூரின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ் சாட் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களையும் இன்று (2011 ஏப்ரல் 20) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தச் செயற்கைகோள்களை எந்தவிதத் தவறுமின்றிச் செலுத்தியிருப்பதன் மூலம் செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களில் இஸ்ரோவின் மேம்பட்ட திறன் வெளிப்பட்டுள்ளது. இந்தச் சாதனையைச் செய்ததற்காகவும், நாட்டின் தொடர் சேவையில் ஈடுபட்டு வருவதற்காகவும் இஸ்ரோவுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுடைய எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
===============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா