சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம்!

7

பவள சங்கரி

தலையங்கம்

‘நான்கு குருடர்களும், ஒரு யானையும்’ என்ற கதையை பள்ளியில் படித்தது நினைவிருக்கும் இல்லையா? ஒரு ஊரில் நான்கு குருடர்கள் இருந்தார்கள். பிறவிக் குருடர்களான அவர்களுக்கு யானையைப் பார்க்க ஆசை. எதிர்பாராத விதமாக ஒரு யானை அங்கேயே வந்து பிளிருகிறது.. சத்தம் கேட்டு நான்கு பேரும், ‘அட யானை வந்துடிச்சின்னு’ சந்தோசப்படுகிறார்கள். சத்தம் கேட்டாச்சு. தொட்டுப் பார்த்து எப்படி இருக்கிறதென்று தெரிஞ்சுக்கலாம் என்ற ஆவலில் ஒரு குருடன், காலைத் தொட்டுப்பார்த்து, ‘தூணாட்டம் இருக்கு’ என்கிறான்.. வாலைத் தொட்டுவிட்டு, ‘யானை கயிறு போல இருக்கு’ என்கிறான் மற்றொருவன். தும்பிக்கையைத் தொட்டவன், ‘யானை நீட்டமா உலக்கையாட்டம் இருக்குது’ என்கிறான்.. நான்காவதாக வந்தவன் வயிறைத் தொட்டுப்பார்த்து ‘யானை மலையாட்டம் இருக்கு’ என்கிறான்.. நான்கு பேரும் சொன்னது ஒவ்வொரு விதத்தில் சரிதான் என்றாலும், மொத்தமாகப் பார்த்தால் யானையின் உருவத்திற்கான இந்த விளக்கம் சரிதானா?

இன்று நம் இந்திய நாட்டின் பொருளாதாரம்தான் யானை.. நம்மோட ரிசர்வ் வங்கி கவர்னர், நிதியமைச்சர், பாரதப் பிரதமர், (பொருளாதார வல்லுநர்) மத்தியில் உள்ள பொருளாதாரச் செயலாளர் என இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான கருத்துக்களையல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் திட்டமிட்டு செய்த செயல்களால்தான் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்து, தங்கத்தின் இறக்குமதியும் குறைந்ததா? தெளிவற்ற அணுகு முறைகளும், திறமையற்ற நிர்வாகமும் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கும், அதன் தொடர்பாக நடந்த மற்ற நிகழ்வுகளுக்கும் காரணம் இல்லையா? இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் சரியாகத்தான் திட்டமிடப்பட்டது என்றால் இதை ஏன் முன்னமேயே செயல்படுத்தவில்லை? இப்படிப்பட்ட கேள்வி சாமான்யனுக்கும் தோன்றக்கூடிய ஒன்றுதானே? துக்ளக் தர்பார் போன்றல்லவா இருக்கிறது இது. 2 மாதம் முன்னால் பஞ்சை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார்கள். மீண்டும் திடீரென்று டன்னுக்கு 10,000 ரூபாய் வரி விதித்தார்கள். இது யாரை திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது என்று புரியவில்லை. நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்ததற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியால்தான் அல்லவா, நம்முடைய அன்னியச் செலாவணி பெருமளவில் கரைகிறது? இதற்காக என்ன திட்டங்களைத் தீட்டி, செயல்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறோம்? நேற்று மாலை தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தபோது, படிப்பறிவில்லாத இருவர் சர்வ சாதாரணமாக பேசிக்கொண்டு போவதைக் கேட்க முடிந்தது. “சிங்கப்பூர்ல இருக்கற மாதிரி நகருக்குள் எந்த வாகனமும் ஓட்டக்கூடாது என்று சட்டம் போட்டால் இவ்வளவு நெரிசல் இருகாதில்லையா, முக்கியமான இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அரசு போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தலாமே. இப்படியே போனால், சாதாரண நகரங்களில் கூட நாளடைவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு செல்லும் நிலை அல்லவா ஏற்படக்கூடும்? ” என்று அவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது. உண்மைதானே இது. இப்படிச் செய்வதால் அன்னிய செலாவணியும் பாதிக்குப் பாதியாகக் குறையக்கூடிய வாய்ப்பும் இருக்கிறதே. இதையெல்லாம் விட்டுவிட்டு, பஞ்சை ஏற்றுமதி செய்து , உள் நாட்டில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகப்படுத்திக் கொண்டல்லவா இருக்கிறோம்?

தங்கத்தை இறக்குமதி செய்யத் தடை விதித்தது நல்ல திட்டம் என்றாலும்.. ஏற்றுமதி செய்ய என்ன திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது? தங்க நகை ஏற்றுமதிக்கு எந்த விதமான ஊக்குவிப்பும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லையே. யானை போன்ற பொருளாதாரத்தை சரியான நோக்கில் கண்டறிந்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் இன்று. நாளுக்கு நாள் குறைந்து கொண்டுவரும், நம்முடைய ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கும் மற்றும் இரஷ்யாவில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும், இந்திய ரூபாயை பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது போல, மற்ற இறக்குமதி பொருட்களுக்கும் பரிவர்த்தனைப் பொருளாக நம்முடைய பணத்தையேக் கொடுப்பதாக இருந்தால் மட்டுமே ரூபாயின் மதிப்பு உயரக் கூடிய வாய்ப்பு இருக்கும் அல்லவா? நெஞ்சு பொறுக்குதில்லையே!

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம்!

  1. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் public transport அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்படுகிறது.

    ஈரான் நாடு கச்சா எண்ணெயை நேரடியாக இந்திய ரூபாய் மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளத் தயார் என்று அறிவித்தது. ஆனால் அதற்கு இந்தியாவின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

    சாமானிய மனிதனின் தலையில் கை வைப்பதையே தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது இந்த அரசு.

  2. நான் பல நாட்டு மனிதர்களுடன் வேலை செய்பவன் குறிப்பாக அதிகமான ஆங்கிலேயர்களுடன். மன்மோகன் சிங் மீது அவர்களுக்கு மரியதை இருக்கிறது அத்ற்கு காரணம் பொருளாதாரத்தில் அவர் உலக நிபுனர்.இப்படி உலகறிந்த குறிப்பிட்டு சொல்லக்கூடிய பொருளாதார நிபுனர் சிலரில் நம் மன்மோகன் சிங்கும் ஒருவர். இவர் நம் நாட்டின் பிரதமர்.

    இந்தியாவிலேயே முதல் ஸ்தான பொருளாதார நிபுனராக இருப்பவர் மதிப்பிற்குரிய சிதம்பரம் அவர்கள். இவர் நிதியமைச்சர். இப்படி உலக நிபுனர்கள் இருவரின் ஆட்சியின் ஆளுமையின் கீழ் தான் இந்திய இந்த கேவலமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது எனும் போது இவர்கள் எப்படி உலக, இந்திய முதல் நிலை நிபுனர்கள் என ஒத்துக்கொள்ள முடியும்.

    சிங்கையைப்பற்றி கட்டுரையில் வந்த கருத்தும் கவனிக்கவேண்டியது. பெட்ரோல் டீசல் கட்டுப்பாட்டுக்கு மிக எளிய வழி.

    ஒரு நபருக்காக ஒரு வாகனம் இயங்ககூடாது.குறைந்தது மூவர் இருக்கவேண்டும். ஒரு நபர் என்றால் அவர் பஸ், ரயில் பிடித்து பயனிக்கவேண்டும்.இந்த ஒரு எளிய கட்டுப்பாட்டை கொண்டுவந்தாலே சாலை நெரிசல், பெட்ரோல் பயன்பாடு யாவும் குறைந்துவிடும், பெட்ரோல் பயன் பாட்டால் வீழ்சியடையும் பொருளாதாரமும் நிலை நின்று ரூபாயின் வீழ்ச்சி நிற்கும்.கவனிப்பார்களா?

  3. கடைசி வரியை நானும் ஆமோதிக்கிறேன். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’. இது எங்கு போய் எப்படி முடியும் என்று நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. 

    ////சிங்கப்பூர்ல இருக்கற மாதிரி நகருக்குள் எந்த வாகனமும் ஓட்டக்கூடாது என்று சட்டம் போட்டால் இவ்வளவு நெரிசல் இருகாதில்லையா, முக்கியமான இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அரசு போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தலாமே. இப்படியே போனால், சாதாரண நகரங்களில் கூட நாளடைவில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு செல்லும் நிலை அல்லவா ஏற்படக்கூடும்? ////

    போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள பெங்களூரில்,  அரை மணி நேரத்தில் போக வேண்டிய இடத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாகிறது. நானும் இது போல் சிந்திப்பதுண்டு. திரு.தனுசுவின் கருத்தையும் ஆமோதிக்கிறேன்.

  4.  ///நம்முடைய ரூபாய் மதிப்பு குறைந்ததற்கான மூல காரணம் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியால்தான் அல்லவா, நம்முடைய அன்னியச் செலாவணி பெருமளவில் கரைகிறது? இதற்காக என்ன திட்டங்களைத் தீட்டி, செயல்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறோம்? ///

    மாற்று எரிபொருளைப் பற்றிய திட்டம் எது வகுத்த்தது உண்டா?
    சூரிய சக்தியை பற்றிய சிந்தனை எங்கே? 

    அன்றாடம் காய்ச்சிகளைப் போல நாட்டை நடத்துவது அறிவார்ந்த சமூகத்திற்கு அழகா?

    தூரப் பார்வை ஏதும் வேண்டாமா?

    “வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் 
    மையத்து நாடுகளிற் பயிர் செய்குவோம்” 

    நதி நீர் இணைப்பு பற்றிய எண்ணம் உண்டா?

    நீர், மின் சாரம், போக்குவரத்து இவைகள் எந்த பிரச்சனைகளும் இல்லாத அமைப்பு தான் தொழிலில் அபார அபிவர்த்தியை கொடுக்கிறது என்பதை உலகம் காட்டுகிறது… ஆக அதைப் பற்றிய சிந்தனை உண்டா?

    ஐ.ஐ.டி… ஐ.ஐ.எம் போற்றவைகளில் படிக்கும் மேதாவிகளை வெளியே வந்த உடன்.. சரியான முறையில் அரசாங்கம் கையாண்டு நாட்டுக்கு அவர்களின் பங்களிப்பை அரசாங்கம் உறுதி செய்கிறதா?

    “அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
    ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
    ——————————————————
    உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
    உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
    எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!
    இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே!
     
    இவைகள் யாவையும் இன்னும் பிறவும் இன்றைய உலகில் அவசியமானவைகளை உற்பத்தி செய்து சீனாவை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்ற பல நாடுகளைப் போல ஏற்றுமதி செய்து பொருளீட்டலாம் அப்படி செய்யும் பொது அந்நிய செலாவணி வருமே.

    பழைமைப்  பெருமையைப் பேசியே சோம்பிக் கிடக்கும் ஒரு சமூகம் எப்படி சாதிக்க முடியும்.. என் பாட்டன் அப்படி, என்தாத்தன் அப்படி.. என் அப்பா அப்படி.. எல்லாம் சரி தான் தம்பி நீயென் இப்படி நீ என்னத்த மட்டைக்கு இரண்டு கீத்தாய் கிழித்தாய்?

    விசாலமானப் பார்வை இல்லை… அறிவாளிகளின் கருத்து எடுபடுவதில்லை…. தூரப் பார்வை இல்லை… மண்ணு முட்டிகளாய் மலையை முட்டிக் கொண்டே நேரம் கழிப்பதை விட வேறு ஒரு சரியான பாதை காண முயல்வதில்லை… கேட்டால் இது பெரிய நாடு நீ நினைப்பது பல இல்லை தம்பி என்ற சாக்குப் போக்கு வேறு…

    இயற்கையை சரியாக கையாளத் தெரியாத பொழுது… இலவசங்களைத் தந்து சோம்பேறிகளை வளர்த்து விடும் பொது… இந்தியன் என்ற ஒரேத் தகுதிப் போதும் வேறெந்தத் தகுதியும் பண்டம் என்று வரியில்லாமல் சமூக ரவுடிகளையும்… கூத்தாடிகளையும் பாராளு மன்றம் சட்ட மன்றங்கலில் கூட்டி அரசு நடத்தும் பொழுதும்…

    அடுக்கினால் நீளும்…. இது போன்ற அவலங்கள் தொடரும் வரை இப்படித் தான் இருக்கும்.

    இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
    வகுத்தலும் வல்ல தரசு.

    அறிவாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அதிகாரம் இல்லை… 
    எதுவுமே ஒழுங்கு இல்லை… மாற்றம் கிராமத்துப் பள்ளியில் இருந்து தொடங்கி.. மேல் நோக்கி செல்லல வேண்டும்… முப்பது வருடம் ஆகும்… அது இப்போது தொடங்கி சரியான பாதையில் பயணித்தால்.. அது இப்போது பிறந்த குழந்தைகளிடம் ஆரம்பிக்க வேண்டும். பெண் கல்வி வேண்டும்…. எல்லோரும் சமமாக கருத வேண்டும்….

    சூழலை கொண்டு சட்டத் திருத்தம்… சமூக ஒழுங்கு, நல்ல கல்வி, தூரப் பார்வையோடு கூடிய புதிய திட்டங்கள்… அதுவும் விரிவாக் செய்ய வேண்டும். அதிலே தசிய நதி நீர் இணைப்பு முதன்மைப் பெற வேண்டும் அதற்கு இந்திய ராணுவம் தலை தாங்கி நடத்திட வேண்டும். விடியலுக்கு தூர மில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.  (பிழைகள் சரி பார்க்க வில்லை பொறுத்தருள்க)

  5. இயற்கையை சரியாக கையாளத் தெரியாத பொழுது… இலவசங்களைத் தந்து சோம்பேறிகளை வளர்த்து விடும் பொது… இந்தியன் என்ற ஒரேத் தகுதிப் போதும் வேறெந்தத் தகுதியும் வேண்டாம் என்று சமூக ரவுடிகளையும்… கூத்தாடிகளையும் பாராளு மன்றம் சட்ட மன்றங்கலில் கூட்டி அரசு நடத்தும் பொழுதும்… 

    சட்ட மன்ற பாராளுமன்றங்களுக்கு செல்ல முதலில் தகுதி சான்றிதல் தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப் பட வேண்டும் அதற்கு சரியான தகுதிகளையும் வரையறைகளையும் சோதனைகளையும் கொண்டு அவர்களுக்கு வழங்கப் பட வேண்டும் அப்படி நடக்கும் மாயின்  நல்ல அறிவாளிகள அவைகளில் கூட முடியும்.. நடக்குமா?

  6. அற்புதமான கட்டுரை, பவள சங்கரி அவர்களே.
    திரு. தனுசு மற்றும் ஸ்ரீமதி. பார்வதி இராமச்சந்திரன்அவர்களின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.
    மேனாடுகளில் car pooling மிகவும் ஊக்குவிக்கப் படுகின்றது.
    நமது ஊர்களில் – குறிப்பாக பெங்களூர் மற்றும் திருவனந்தபுரத்தில் வாகன நெரிசல் அப்பப்பா. ஒரு ஆளுக்காக ஒரு sedan கார். அநியாயம். புருஷன் பெண்டாட்டி ரெண்டுபேருக்கும் ஆளுக்கு ஒரு கார் என்றால்…… இருக்கிற சாலை என்னாவது? என்கிட்ட காசிருக்கு நான் வாங்கறேன் என்ற மனப்பாங்கு மாரத்தான் வேண்டும்.பெங்களூருக்கு வெளியே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்து பேருந்தில் பெங்களூருக்கு வர ஒரு மணி நேரம். ஆனால் பெங்களூர் majestic இல் இருந்து பெங்களூர் ராமமூர்த்தி நகருக்கு செல்வதற்கு இரண்டரை மணி நேரம் பிடிக்கிறது! அத்தனை வாகன நெரிசல்.

    பி. கு:
    கனடா நாட்டில் டொரோண்டோ நகர் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் நம்மை விட மோசம். நின்று நின்று நின்று நின்று ஊருக்குள் போவதற்குள் சீ என்றாகிவிடும். ஆனால்…… அங்கே கார் பூலிங் பன்னுபவர்களுக்கேன்றே தனி lane எட்டு வழி சாலையில். அதாவது பலர் கூடி ஒரு வாகனத்தில் சென்றால், அதை ஊக்குவிக்க, அவர்களுக்கு வாகன நெரிசல் இல்லாமல் இருக்க தனி lane.

    நம்மூரில் வருமா?

    அந்த ஊரில் பஸ் இந்த மணி இத்தனை நிமிஷத்துக்கு வரும் என்றால் வந்து நிற்கும். இந்த சுட்டியைப் பார்க்கவும். http://www.ltconline.ca/webwatch/prediction.aspx?mode=a

    நம்மூரில் என்று வரும்?

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  7. இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல ஆதாரம் ஆதாரமின்றி  , சரிந்து என்பதைவிட வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது
    என்றே சொல்லலாம்……இணையங்களில் சொல்லும் கோஷங்கள்  வீதிகளில் வந்தால் தான்  விடிவு. ஜனநாயகத்தின் ஓட்டைகள் ஓட்டுகளில் தான் ஒழுங்கு செய்யலாம் என்று நம்பினாலும் நரிகள் நாலுபக்கமும் சிங்கத்தை விழுங்கி கொண்டிருக்கிறது……அரசியல் சாதுர்யத்தால்….செய்திதாட்களும் தொலைக்காட்சிகளும் மக்களை குழப்பி முட்டாளாக்கும் முயற்சிகள்….எங்கே போகிறது காலம்……என் கவிதையின் க்ளைமாக்ஸ் வருட இறுதியில்… பார்த்து கொண்டிருப்பதில் பயனில்லை……ஒன்று பட்டால் உண்டு வாழ்வு……அவர்கள் ஒன்றாகி விட்டார்கள்…நாம்? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *