சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 5

0

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

கட்டுரையின் பகுதி 4 -இல் கூறியதை நினைவில் கொள்வோம் :

சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்

“அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

திருமூலர் காலத்தில் இருந்து இன்றுவரை சைவப் பெரியார்கள் கருத்து இதுவே..ஒன்றை அறிந்தால் மற்றதை அறியலாம். இதனைத்தான் திருமூலர்,

“பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே” என்கிறார்.

அண்டம் என்ற பிரபஞ்சத்தின் பின்புற வாசலாகப் பிண்டம் என்ற உடம்பு இருக்கிறது. இப் பிண்டத்தை மீண்டும் மீண்டும் ஆய்ந்தால் – அதில் தியானித்தால் பூவின் தேனை வண்டு சுவைப்பது போல் இந்தக் காயம் என்பதன் வழியாகப் பிரபஞ்சத்தின் தேனை ருசிக்க (இரகசியத்தை அறிய) முடியும்.
பிண்டத்தை ஆராய்ந்தால் அண்டத்தின் செய்திகள் தெரியவரும்.

பிண்டம் என்பது நம் உடல். இதுதான் மையப் புள்ளி. இதற்கு உள்ளே இருப்பது பிண்டம் இதற்கு வெளியே இருப்பது அண்டம். நம் உடலுக்கும் (நமக்கு வெளியே இருக்கும்) அண்டத்துக்கும் ஏதாவது ஒப்புமை, தொடர்பு … இருக்குமா? இருக்க முடியுமா! இருக்கிறது என்று அறுதி இட்டுக் கூறுகிறது (அக்காலச்) சைவ சமயம். இக்கால அறிவியல் இது பற்றி என்ன சொல்கிறது? நீங்களே பாருங்கள் :

– அளவிடற்கரிய அண்டம் (இது பற்றிப் பின்னர் பார்ப்போம்) மூடிய வடிவு (closed form) உடையது.. நம் உடலும் அப்படியே!!

– கோடி கோடிக் கணக்கான விண்மீன்கள் அண்டத்தில் உண்டு. உடலில் கோடி கோடிக் கணக்கான உயிரணுக்கள் (cells) உள்ளன (ஏறக்குறைய 100 டிரில்லியன்)

– அண்டம் சதா அசைந்துகொண்டே இருக்கிறது … மூலக்கூறுகள் அளவிலும் அணுத்துகள்கள் அளவிலும் (in motion on a molecular, cellular and atomic scale). உடலும் அப்படியே .

– அண்டம் வளர்ந்துகொண்டே, விரிவடைந்து கொண்டே போகிறது.கருவிலே உருவான நாள்தொட்டு இறக்கும் வரை உடலும் வளர்கிறது, விரிவடைந்துகொண்டே போகிறது.

– அண்டத்துக்கு ஆயிரம் ஆயிரம் (கருந்) துளைகள் (black-holes) ; உடலுக்கு? எலும்பு, தோல்… முதலியவற்றில் எத்தனை எத்தனை துளைகள்! குறிப்பாக ஒன்பது ஓட்டைகள் என்று சித்தர்கள் கேலி செய்வார்கள். (இஃது ‘ஓட்டை வீடு ஒன்பது வாயில்’ என்று கண்ணதாசன் பாடுவார்).

– அண்டம் முழுக்க மின்துடிப்புகள் (electrical implulses) ;உடலிலும் அப்படித்தானே!

– அண்டத்தில் உள்ள கருந்துளைகள் பொருளையும் ஆற்றலையும் (matter & energy) விழுங்கிக்கொண்டே உள்ளன ; உடலும் பொருளை (உணவை) யும் ஆற்றலையும் விழுங்கிக்கொண்டே இருக்கின்றது.

– ஆற்றல் படுகைகளால் (interwoven in energy layers called the fabric of space ) நெய்யப்பட்டுள்ளது அண்டம். ; உடலோ என்பு, தசைகள் நரம்புகளால்
நெய்யப்பட்டிருக்கின்றது.

– அண்டத்தில் 70 விழுக்காடு நீரணுக்களே (hydrogen) ; நம் உடலில் அதே விழுக்காடு உள்ள நீர் (அணுக்கள்) உண்டு!

– ஒருமையில் இருந்து பல்கிப் பெருகி உருவானது அண்டம் ; ஒற்றை உயிரணுவில் இருந்து உருவானதுதானே உடலும் .

எனவே நாமும் திருமூலரைப் பின் பற்றி முதலில் பிண்டத்தைப் பார்ப்போம்.

பிண்டம் என்பதற்கு ‘உடல்’, ‘கருப்பம்’, ‘சோறு’ என்று பொருள் தருகிறது நா.கதிரைவேற்பிள்ளை தொகுத்த தமிழ் அகராதி. இந்தப் பிண்டம், இந்த உடல் இந்தக் கருப்பம் (கரு) எப்படி உருவாகிறது? இதற்கு உரிய அறிவியல் விடையை, விளக்கத்தை அறியாதவர்களே அதிகம் பேர். கரு உருவாகும் அற்புதத்தை, வித்தையை அறியவேண்டுமானால் அறிவியல் துறைகள் பலவற்றின் அடிப்படை அறிவு மிகத் தேவை! அறிவியல் படித்தவர்களுக்கு இவை தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு? அந்த மற்றவர்களுக்காக இங்கே அடிப்படை விளக்கங்கள் சில தரப்படுகின்றன.ஏற்கனவே அறிந்தவர்கள் இப்பகுதிகளை விடுத்து மேலே செல்லலாம். சரி, தேவைப்படும் அறிவியல் துறைகள் எவை? உயிரியல் (biology),சினையியல் (embriology), மகப்பேற்றியல் (Obstetrics.)…போன்றவை. தேவையான அளவு மட்டுமே இவை பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.

பருப்பொருள்களுக்கு அடிப்படையாக அமைவன அணுக்கள் ; உயிர்ப் பொருள்களுக்கு அடிப்படை : செல்கள். உயிரணுக்கள் எனத் தமிழில் சொல்லலாம். மனித உடம்பில் 100 trillion (10 to the power of 18=1018 = 1,000,000,000,000,000,000 அதாவது ஒன்றுக்குப் பிறகு 18 சுண்ணங்கள் இட்டு எழுதவேண்டும்) உயிரணுக்கள் (செல்கள்) உண்டாம்.

பல வகை உயிரணுக்கள் இருக்கின்றன. ஒவ்வோர் உயிரணுவும் முக்கியமான மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

உயிரணு மென்சவ்வு (Cell Membrane) – வெளியுறை
குழியுருவு (Cytoplasm) – பாய்பொருள்
கரு – (nucleus) – உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். (மரபுத்தகவல்கள் அடங்கியுள்ள பகுதி).

பல வகை உயிரணுக்கள் இருக்கின்றன. உயிரணு ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில் புரிகின்றன. தசைத் திசுக்களை ஒருவகை உயிரணு உருவாக்கினால் வேறொரு வகை உயிரணுக்கள் மூளைத் திசுக்களை உருவாக்கும் ; எனவே என்புத் தோல் போர்த்த இவ்வுடம்பின் நரம்பு, இரத்தம், சதை, உள்ளுறுப்புகள்… என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை உயிரணுவால் உருவாக்கப்பட்டவையே என அறிக! இவை யாவற்றிலிருந்தும் வேறுபட்டு மாறுபட்டு இருப்பவை இனப்பெருக்கத்துக்கான செல்கள். இவற்றை ஆங்கிலத்தில் ‘gametes’ என்பர். ஆணில் உள்ள இந்தச் செல், விந்து (sperm, spermatozoa) எனப்படும் ; பெண்ணில் உள்ள இந்த இனப்பெருக்கச் செல்லுக்குச் சினை அல்லது ‘முட்டை (ova, ovum, oozite) என்று பெயர். ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும்போது இவ்விரண்டு செல்களும் தம்முள் இணைந்தால் ‘கரு’ உருவாகும். இந்தக் கருவை ஆங்கிலத்தில் ‘zygote’ என்று அழைப்பர். இவ்விரண்டு செல்களுக்கும் ஏனைய உயிரணுக்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என மேலே பார்த்தோம். அப்படி என்ன பெருத்த வேறுபாடு, மாறுபாடு?

எல்லாச் செல்களுக்கு உள்ளும் குரோமோசோம் (chromosomes) எனப்படும் நிறவணுக்கள் உண்டு. இவை செல்லின் நடுக் கருப்பகுதியில் (nucleus) பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். (இக் குரோசோம்களின் உள்ளே ‘genes’ – தமிழில் ‘மரபணுக்கள்’ உள்ளன. நம்மைப் பற்றிய தவல்கள் – நம் நடை, குண நலன்கள், பாவனை, பழக்க வழக்கங்கள்…- அடங்கிய பெட்டகம் இவை.)

நிறவணுக்களில் இரண்டு வகை உண்டு : ஒன்று X வடிவு உடையது ; இது பெண்மை ; மற்றது y உருவில் இருக்கும் ; இஃது ஆண்மை. ஒவ்வொரு செல்லுக்கு உள்ளும் நிறவணு இணைகள் 23 ஆக மொத்தம் 46 குரோசொம்கள் இருக்கும். எல்லாச் செல்களுக்கும் இது பொருந்தும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 22 இணைகளின் குரோசொம்கள் ஒரே மாதிரிதான் ; இவற்றை ‘autosommes’ என்பர். 23 -ஆவதாக இருக்கும்.குரோமோசொம்தான் பால் நிர்ணயிக்கும் குரோமோசோம் (sex chromosome) ஆகும். இஃதில் உள்ள இரண்டு குரோசோம்களில் இரண்டுமே XX ஆக இருப்பின் அதுதான் பெண் ஆகும் ; மாறாக, XY ஆக இருந்தால் அஃது ஆணாகும்.

Chromosomes X Y

பெண்ணின் சினை (முட்டை)க்குள் உள்ள 23 குரோமொசொம்களோடு ஆணின் விந்துவில் உள்ள 23 குரோமொசொம்கள் இணையும் போது செல் உருவாகத் தேவையான 46 குரோமொசொம்கள் எண்ணிக்கை நிறைவாகின்றது.. செல்லும் முழுமையாக உருவாகிறது. பின்னர் கருவாகிறது.

ஆணின் பருவ காலத்தில் குமரப் பருவத்தில் உருவாகத் தொடங்கும் விந்தணுக்கள்
கிழப் பருவம் வரை கூடத் தொடருகிறது.ஆண் தன் வாழ் நாளில் பலப் பல கோடி விந்தணுக்களை உருவாக்குகிறான். ஆனால் பெண்ணுக்கு இப்படி இல்லை!
ஒன்று முதல் இரண்டு மில்லியன் முட்டைகளோடு பெண் பிறக்கிறாள். காலம் செல்லச் செல்ல முட்டைகளை இழக்கிறாள்! பூப்பெய்தும் போது அவளிடம் இருக்கும் முட்டைகள் நாலு லட்சம்தான். பூப்புப் புறப்பாட்டில் இருந்து மூப்படைந்து மாதப் போக்கு நிற்கும் வரை மாதம் தோறும் ஆயிரம் முட்டைகளை அவள் இழக்கிறாள். இந்த ஆயிரம் முட்டைகளில் ஒன்றுதான் முதிர்ச்சி அடைந்து முழு முட்டை ஆகிறது. சூல் பையில் இருந்து வெளி வரும் இந்த முட்டையை பலோப்பியன் குழாய் வரவேற்கிறது.இந்தச் சமயத்தில் கலவி நேர்ந்தால் கருத் தரிக்கும். இல்லையானால் அந்த முட்டை சிதைவுற்று வெளியேற்றப்படும். இதனைத்தான் மாதப் போக்கு என்கின்றனர். ஆண்களிடம் பல கோடி விந்தணுக்களை உருவாக்கும் இயற்கை பெண்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்வது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை காண்பவர்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது.

முட்டையில் X என்ற ஒற்றை நிறவணு மட்டுமே இருக்கும். விந்தணுவிலோ X அல்லது Y என்று ஒற்றையாகவே நிறவணு இருக்கும். முட்டையில் உள்ள X உடன் விந்தணுவில் இருந்துவரும் X நிறவணு சேர்ந்தால், உருவாகும் கருவில் எல்லா நிறவணுக்களும் XX ஆக அமைந்து பெண் குழந்தை உருவாகும்.; அப்படி இல்லாமல் Y சேர்ந்தால் XY என ஆகி அது ஆணாக வளரும்.chromosomes_1 எனவே குழந்தை ஆணா பெண்ணா என நிர்ணயிப்பது ஆணில் உள்ள குரோமோசோமே தவிரப் பெண் இல்லை. இதை உணராத மூட ஆண்கள், தம் மனைவியர் பெண் பிள்ளை பெறும் போது அவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதும் வதைப்பதும் அவர்கள் மனத்தைச் சிதைப்பதும் எவ்வளவு கொடுமை! X நிறவணுதான் முழுமையானது ; ஆகவே முழுக்க முழுக்க X நிறவணுவால் உருவான பெண்ணே முழுமையான படைப்பு ஆகிறாள். ஆண்தான் அரைகுறை படைப்பு. அறிவியல் புகட்டும் அருமையான பாடம் இது. ஆண்கள் மட்டும் இதனை முழுமையாக உணர்ந்து முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை குறையும் ; நாளடைவில் முற்றாக மறையும்.

இனி அடுத்த கட்டத்தைக் காண்போம் : பருவம் அடைந்த பெண் மாதம் தோறும் ஒரே ஒரு முட்டையை உருவாக்குகிறாள். கருப்பையின் இரு புறமும் கைகளை விரித்தால் போல் குழாய்கள் இரண்டு உள்ளன. இவற்றைப் பலோப்பியன் குழாய்கள் என்பர் (Fallopian tubes). இவற்றின் இறுதியில் சூலகங்கள் உள்ளன. முட்டை உருவாவது இங்கேதான். சூலகத்தில் உருவாகி முதிர்ச்சி பெறும் முட்டை, பலோப்பியன் குழாய் ஓரம் (விந்தணு வரவு நோக்கிக் காத்து) நிற்கும்,
வாயிற் படியருகே கணவன் வரவுக்குக் காத்திருக்கும் மனைவி போல. அந்த நேரத்தில் கலவி ஏற்படுமானால் என்ன நேரும்?

Vaginaஆண் வெளிப்படுத்தும் விந்து – நீர்மத்தில் (seminal fluid) நீச்சல் அடித்தபடி, வாலாட்டியபடி, ஆர்வமுடன் ஓடிவரும் பல்லாயிரக் கணக்கான விந்தணுக்கள் பெண் உறுப்பு வழியாகக் ‘கடை திறப்பு’ப் பாடியபடி, பாய்ந்தோடி முட்டையைத் தேடி வரும், கோட்டையை முற்றுகை இடும் போர் வீரர்களைப் போல. உண்மையிலேயே பொருத்தமான உவமை இது. பல்லாயிரக் கணக்கான விந்தணுக்கள் படைஎடுத்தாலும் முட்டையை நெருங்குபவை மொத்தமே 50, 60 விந்தணுக்கள் மட்டுமே. மற்றவை ? போரில் புறங்கொடா வீரர்களாய் மடிந்து போகும்.

விசித்திரக் கோட்டை இது! இதற்கு வாயில் ஏதும் இல்லை! முட்டையை நெருங்கிய விந்தணுக்கள் எல்லாமே உள்ளே புக முடியாதபடி முட்டையின் (கோட்டைச்) சுவர் காத்து நிற்கும். விந்தணுவின் தலைப் பகுதியில் வேதியல் பொருள் ஒன்று உள்ளது, (nuclear war-head ஏந்திய இராக்கெட் போல). இப்பொருள் கோட்டைச் சுவற்றில் துளை இட்டு வழி செய்து தரும். இதன் வழியாக ஏதாவது ஒரு விந்தணு மட்டுமே வெற்றி வீரனாய் உள்ளே நுழையும். அதன்பின், எந்த விந்துவும் உள்ளே புகமுடியாதபடிக் கோட்டைச் சுவர் மாறிவிடும். எத்தனை அற்புதமான, நுட்பமான கோட்டை இது!

இவ்வளவு நேரம், இவ்வளவு தூரம், விந்தணு வீரனை உந்தித்தள்ளி வர உதவிய வால் வெட்டுப்படும். உள்ளே நுழைந்த விந்தணுவில் உள்ள செல் ஒன்று ; முட்டையில் இருக்கும் செல் மற்றொன்று ; இவை இரண்டுமே நிறவணுக்களின் எண்ணிக்கை நிறைவடையாதவை. இவை இரண்டும் தம்முள் கலக்கின்றன. ஆண் விந்தணு தாங்கி வந்த X அல்லது Y நிறவணு முட்டைச் செல்லில் உள்ள X நிறவணுவுடன் இணையும் போது 23+23 =46 என்ற எண்ணிக்கை நிறைவாகிறது. இந்தக் கலப்பினால் ஒரே செல் உருவாகிறது.

இந்த ஒரு செல் இரண்டாகப் பிரிகிறது ; பிறகு அவை நாலாக , எட்டாக, பதினாறாக , முப்பத்திரண்டாக …. பெருகுகின்றன . அதாவது 1>2>4>16>32>64….. இந்த நிலையில் அது கருவாக மலருகிறது. அதன் உள்ளே புதிய உயிர் துளிர்க்கிறது. (கவனிக்க : இதுவரை இருந்த முட்டைக்கு உயிர் கிடையாது! அஃது உயிர் இல்லாதது! ஆகவே அது நகர இயலாது!) இப்படி உருவான கரு, உயிர் பெற்றிருப்பதால் மெல்ல நகரும் ; பெருகிக்கொண்டே நகரும் அல்லது நகர்ந்துகொண்டே பெருகும். இப்படி நகர்ந்து நகர்ந்து வந்து கருக் குழியில் (கருப் பையில்) விழும். அப்பையின் சுவற்றில் ஒட்டிக்கொள்ளும். அக்கருவைச் சுற்றிப் பனிக்குடம் உருவாகத் தொப்புள் கொடி பிடிக்கத் தொடங்கும் அந்தக் கரு, வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. முதுகெலும்பு, கை கால்கள், மூளை, இதயம்… என உறுப்புகள் உருவாகி வளர முழுக் குழந்தையாக வளர்ச்சி பெற்று வளர்ந்து… குழந்தையாக வந்து விழுகிறது. பிறந்து அழுகிறது!. கருவாக உருவாகிக் குழந்தையாக உருமாறி வந்து பிறப்பதன் வித்தை, விந்தை இதுதான் என இன்றைய அறிவியல் விளக்குகிறது.

இக்கால அறிவியல் விளக்கும் இந்த வித்தையை, விந்தையை அக்காலத் திருமூலர் எப்படி விளக்குகிறார் ?

அடுத்த கட்டுரையில் படிக்கத் தவறாதீர்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *