திருமால் திருப்புகழ் (70)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-

”கண்ணனை நெஞ்சே கருது’’
——————————————–

கடவுள் மடியில் கிடக்கும் வரையில்,
அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே,
பன்னகத்தில் யோகம் பயிலும் பரம்பொருளாம்,
கன்ணனை நெஞ்சே கருது….
சிந்தை வெளிகடந்து, மந்தை வெளிபுகுந்து,
கந்தல் உடையணிந்து, கன்றுகளைத் – தந்தையாய்,
அன்னையாய்க் காத்து, அறுகம் அளித்திடும்,
கண்ணனை நெஞ்சே கருது….
கும்பிடுதல் கர்மம், குதூகலம் கோவிந்தன்,
தென்படுதல் ஆத்ம தரிசனம், – பண்படுஇவ்,
வண்ணமந்த, வாரிதி வண்ணனுடன் வாழ்ந்திடக்,
கண்ணனை நெஞ்சே கருது….
உன்னை அறிதல் உனக்கெதற்கு, உள்ளிருக்கும்
பொன்னுக்(கு) அணிகலப் போர்வையே, – தொன்னையில்,
வெண்ணெய் இருக்க, விழுதுநெய்க்(கு) ஏங்குவதேன்,
கண்ணனை நெஞ்சே கருது….
கழல்தொழுது கைகூப்பி கும்பிட்டு, செய்யும்
தொழிலுறங்கும் தென்னரங்க தேவன் – சுழல்திகிரி,
மின்னனைய நந்தகி, வெண்ணிற சங்குற்ற,
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….
———————————————————————————————————–
படத்திற்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html