இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
கவிஞர் காவிரி மைந்தன்
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
மா என்பார் பலா என்பார் வாழை என்பார்.. இவை அத்தனைக்கும் சவால் விடும் இக்கனிகள் எக்கனியோ என்று முன்பொரு நாள் எழுதிய தொடர் நினைவுக்குள் வரவைக்கிற பாடலிது!
பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் கதையின் நாயகி மட்டுமே கனவு காண.. கவித்துவத் தென்றல் பாடுகிறது! அசைவுகள் இனிமை சேர்க்கின்றன! குரலின் வளத்தால் குற்றலாத் தென்றலில் நடைபோடும் சுகம் கேட்கின்ற நமக்குக் கிடைத்துவிடுகிறது! புலவர் புலமைப்பித்தனின் விரல்களிலென்ன மூன்றாம் தமிழ் மூச்சுவிடுகிறதா? பிறகென்ன சொர்க்கத்தின் திறப்புவிழா நடக்கிறதே!!
இளமையின் சீதனங்கள் இன்பப் பாற்குடங்கள்! பருவத்தின் மோகம் காட்டி பல்லவி பாடுவதென்ன? உன்னிடம் நான் என்றால் என்னிடம் நீயென்னும் உரிமையில் பரிமாறும் இன்பக் கோலமென்ன? வண்ணங்கள் வாய்திறந்து வரவேற்கும் ராஜாங்கம் கனவுகளாய் கூடுவதென்ன?
கைபட்டு, மெய்பட்டு மேனி சிலிர்ப்பதென்ன? காதலின் மழைதன்னில் கவிதையும் நனைவதென்ன? மென்மையத் தந்திடும் பெண்மையின் மோகனம் கண்களில் காட்டுவதென்ன? சுகராகங்கள் தரும் நாதங்கள் தினம் இன்பம் சேர்க்கின்றன!
கே.ஜே.யேசுதாஸ் பி.சுசீலா குரல்களில் கொள்ளையின்பம் தவழும் தமிழ் கொட்டிக்கிடக்கும் அழகை எண்ணி எண்ணிச் சுவைக்க.. இதயங்கள் அங்கே மிதக்க.. காதல் நீலாம்பரி நம்மை இன்பக்கரை சேர்க்க வருகிறது!
http://www.youtube.com/watch?v=lwJN0EnetUg
சொர்க்கத்தின் திறப்பு விழா …
சொர்க்கத்தின் திறப்பு விழா
இங்கு சொக்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா
(இன்று சொக்கத்தின் )
மேகம் அசைந்தும் தவழ்ந்தும் விளையாடும் வானத்திலே
ஆடை கலைந்தும் சரிந்தும் உறவாடும் நேரத்திலே
தூங்காமல் நின்றேங்கும் மலர் விழிகள்
இன்பம் தாங்காமல் தள்ளாடும் இளங்கிளிகள்
உயிரோடு உயிராய் ஒன்றாகி நிற்கும்
உள்ளங்கள் பேசட்டும் புது மொழிகள்
புது மொழிகள் புது மொழிகள்
(சொர்க்கத்தின் திறப்பு விழா )
பூவை திறந்தும் நுழைந்தும் ஒரு வண்டு பாடியது
தேனில் நனைந்தும் குளிர்ந்தும் மலர் காற்றில் ஆடியது
இளவேனில் காலத்தில் திருமணமோ
இனி எப்போதும் வாராத நறுமனமோ
பூவென்ன பூவோ வண்டேன்ன வண்டோ
சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ
கதை இதுவோ ?கதை இதுவோ ?
(சொர்க்கத்தின் திறப்பு விழா )