திருமால் திருப்புகழ் (112)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————
வல்லாமை ஆகி, வடவரை தாங்கியோன்,
இல்லாமை தந்திங்(கு) இருப்பினை, -சொல்லாமல்,
உள்ளங்கை நெல்லி, உணர்தலாய் சொல்லுவான்,
உள்ளங்கை கூப்பி உணர்….(186)
வரையளவு வாழ்ந்து, தரையளவு தாழ்ந்து,
குறையுளத் தோடு குறுகி, -நரைமுளைத்து,
நாடி தளரும்முன், நந்தகோபன் மைந்தனை,
நாடித் துதிக்க நிறைவு….(187)
வரையனைய ஓங்கு, குறைகளைத் தாங்கும்,
திரையணையில் தூங்கும் பெருமாளை, -கரமிணைய,
கூப்பித் தொழுதிடுவாய், கோவர்த் தனமேந்தி,
காப்புக் குடைவிரித்தோன் கால்….(188)
வரையன்று தூக்கி, வ்ரஜபூமி காத்தோய்,
குறையொன்றும் இல்லையெனெக் கேட்டோய், -பறைவேன்,
நிறையொன்றும் இல்லையென, நீயெந்தன் நெஞ்சம்,
நிறைந்தென்றும் கோவிந்தா நில்….(189)
வேணு இசைக்கையில், வெண்ணை புசிக்கையில்,
வானில் வரைதூக்கி நிற்கையில், -ஊணும்,
ஒருகால் உதவ, மறுகால் தயாராய்,
ஒருகால் குரல்வருமுன் கேட்டு….(190)
வெண்ணை, தயிர்பால், மண்ணை, கோபியர்தம்,
கண்ணை, உண்ட கிருஷ்ணா, -உன்னையென்,
வாக்கிலெட்ட வைத்திடுவாய், வையம்காண் நாடகமாய்
சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(191)
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://bhagavatham.blogspot.in/