திருமால் திருப்புகழ் (124)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————
எத்தனை நாளுனைக், கற்பனையில் காண்பது,
கத்தும் கடல்கிடக்கும் கார்முகிலே, -சித்தம்,
குளிர எதிரே, குதித்து வருவாய்,
ஒளிரும் இருளோய் உவந்து….(259)
அலையானை பச்சை, மலையானை, கீதைக்,
கலையானை, ராதைபேர் கேட்கச், -சிலையானை,
கஞ்சன் குலயானை, கொன்ற இளையானை,
நெஞ்சே நிலையாய் நிறுத்து….(260)
தீதண்டும் நேரம், திருவள்ளூர் செல்வோரை,
கோதண்டம் காக்கும் கவசமாய், -நீதெண்டம்,
இட்டு சரணம், இயம்ப வினைகளின்,
குட்டு வெளிப்படும் காண்….(261)
அறங்காக்க அன்று, குரங்கோடு சென்று,
திறங்காட்டிப் பத்தைத் துணித்தோய், -அரங்கேறி,
உள்ளூறும் யோக, உறக்கத்தில் கண்விழிக்கும்,
வள்ளூரின் ராகவா வா….(262)
யாப்புக் கயிற்றில், எதுகையும் மோனையாய்,
கூப்பிய கைகளில் கொண்டுவந்த, -பாப்பூக்கள்,
மாலை தொடுத்தந்த, மாலைத் தொழுவோர்க்கு,
மாலயம் வாழ்வில் மலர்….(263)
வாடிக்கை ஆனது, வேடிக்கை ஆகவரும்,
வாடிக்கை ஏந்தி விரையாதீர், -சூடிக்கை,
மாலை சுமந்தவள், மாலை மணந்தாற்போல்,
வேலை பொருத்து வேளை….(264)
————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி :
http://bhagavatham.blogspot.in/