திருமால் திருப்புகழ் (150)
கிரேசி மோகன்
பெருமாள் திருப்புகழ்….
—————————————–
’’கண்ணன் திருப்புகழ்’’(விருத்தம்)
————————————————————
தூங்க வருகவே
——————————-
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்
காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
தூளியில் ஆடித் தூங்க வருகவே….(1)
வானிடை சூரியன் காய்கின்ற வேளையில்
ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்
தூணிடை சிங்கன் எந்தன் துரும்பு
மேனியில் ஒளிந்து தூங்க வருகவே….(2)
பாரதப் போரில் பார்த்தனின் தேரை
சாரத்யம் செய்து சோர்ந்துக் களைத்தவன்
நாரத மாமுனி நாவிருப்போன் என்
மாரதில் புரண்டு தூங்க வருகவே….(3)
மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே….(4)
மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டிய
தாம்புக் கயிறால் உரலை இழுத்து
கூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்
பாம்பை அடக்கத் தூங்க வருகவே….(5)
படங்களுக்கு நன்றி: கேஷவ்
கிரேசி மோகன்