சரஸ்வதி வெண்பாக்கள்
கிரேசி மோகன்
சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்….’’வெண்பூ வெண்பா’’ என்ற தலைப்பில் தேவி சரஸ்வதி மீது எழுதிய வெண்பாக்களும், 70துகளில் ரவிவர்மா சரஸ்வதியைப் பார்த்து வரைந்த வாட்டர்-கலர் ஓவியமும்….
மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்
“படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….
வெண்பூ வெண்பா
————————
(சரஸ்வதி வெண்பாக்கள்)
————————————
சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
—————————————
எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் -உன்நுதல்
குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
தங்கிய மூக்குத்தி தூள்….(1)
நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(2)
நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)
ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(4)
வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(5)
பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருள்வாய் நீ….(6)
தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(7)
வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
சராசரங்கள் சேரும் சபை….(8)
கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)
சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
பெண்பாவாய் பாடிப் பற….(10)
நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)
மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
தாயே எனக்குமதைத் தா….(12)
சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)
வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
காரியின்கண் பார்க்கக் கவி….(14)
காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
தாவி அளிப்பாள் தமிழ்….(15)
துமியென்ற கம்பன் தவறில்லை என்று
சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)
காளிதாச கம்ப குமர குருபரர்கள்
தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
கைக்குட்டை யாய்கையில் கட்டு….(17)
படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)
வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
ஞானத்தை நானுற நல்கு….(19)
அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது….(20)
கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)
வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)
துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….13-08-2011
சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)
கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
கிரகங்கள் கூப்பும் கரம்….(25)
வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
முளைத்திடு முண்டக மா….(26)
உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
ஓசை சதங்கையொலி ஓம்….(27)
நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)
கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
எண்ணல் அயன்கை எழுத்து….(29)
பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
கூறநா கிட்டிடும் காப்பு….(30)
எண்ணமவள் நேற்று எழுத்தவல் இன்றுநாம்
பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)
கீரன் திருமுரு காற்றுப் படையவள்
மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)
வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
நல்கிடுவாள் யாழில் நலம்….(33)
என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)
பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)
வேசிவரக் காத்தவடை தோசை வரதனை
ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)
பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
காவியம் கொட்டும் களிப்பு….(37)
சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)
பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்
மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
காளியின் தாஸன் கதை….(39)
வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
முற்றும் துறக்கவும்அம் மாது….(40)
கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)
பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)
கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)
காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
கட்டாலப் போறவனே கொள்….(44)
தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
காடென் கடைசிவரை காப்பு….(45)
கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
ஏற்றி விடுவான் எமன்….(46)
தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)
கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
வந்திரும்பார் வாணி வகுத்து….(48)
போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)
உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
மெச்சிடும் ஆசார மேன்மையை -த்ச்சமாய்
எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)
வீணை படிகமணி வேதக் கரத்தளை
பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
விளையும்வெண் பூவை வணங்கு….(51)
பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
இத்தரைதர் மத்தில் இவள்….(52)
காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
ஆ!சிரி அப்பா அவள்….(53)
தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)
ஈரெட்டு ஆறெட்டை ஈன்றவள், நான்மறையை
சீராட்ட வந்த செவிலித்தாய் -பாரேட்டுப்
பாக்கள் பதிகங்கள் பாசுரங்கள் யாவையும்
ஆக்கி சமைத்திடும் ஆய்….(55)
அஞ்சிலே சம்பந்தர்(கு) ஆரா அமுதளித்து
பிஞ்சில் பழுக்கவைத்த பார்வதி -கஞ்சியை
கல்வி ‘நகரேஷு காஞ்சி’யாய் ஆக்கினள்
செல்விகா மாட்சியில் சேர்ந்து….(56)
பொற்றா மரைக்குளமே, போட்ட பதிகங்களை
சற்றும் முழுகாது சேர்த்தவளே -கொற்றவள்
மீனாட்சி பிள்ளைத்த மிழ்சொல் குருபரர்
நாணாச்சு வில்லம்பு நீ….(57)
எண்ணென் கலைகளை ஏழு சுரங்களில்
பண்ணென யாழில் பயின்றிடும் -அன்னத்து
வாகனன் பத்தினி வெண்தா மரைவாணி
மோகனென் வாக்கினில் முந்து….(58)
வேதயிதி ஹாசபு ராண உபநிடதம்
யாதுமுன் மூச்சில் இழையும்சங் -கீதமாகும்
கோத்த படிகமாலை யோடுகூத்த னூர்வாழும்
ஆத்தாளே ஆசுகவி ஆக்கு….(59)
வித்தை சிறக்க விளைவுகள் மேன்மையுற
சித்தம் சிதறாது சீர்பெற -புத்தியில்
வாநீ அமர்ந்திட வாக்கு பெருகிட
வாணியின் தாளை வணங்கு….(60)
தன்னேரில் லாதவள் தானே தனக்குவமையாள்
பொன்னேர் முகமும் புலமையால் -மின்னேர்
வசீகர வாணி வழங்குவாள், ஞானப்
பசீகரம் ஏந்திப் பிழை….(61)
வெற்றிட மாய்விளங்கும் சிற்றிடையை, செந்தமிழ்ப்பால்
முற்றியத் தாய்மை முலையிரெண்டை -நெற்றியிடைக்
குங்குமப் பொட்டை, கமலத் தயன்பெட்டை
செங்கமல மொட்டை சரண்….(62)
வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
நான்மகன் அன்றோ நினக்கு….(63)
வாணி மஹாலதன் வாசலில் வீற்றிருக்கும்
ராணியே நாடக ஏணியே -நானினி
எப்போதும் நிந்தன் எழிலுருவை மாந்திட
இப்போதே நெஞ்சம் இரங்கு….(64)
கோபம் அகங்காரம் கர்வம் புறங்கூறல்
தாபம் தணியாதோர் தீவீரம் -பாபம்
வரிந்திடச் செய்திடும் வீணர்தம் தீங்கில்
இருந்திட மாட்டாள் இவள்….(65)
கம்பனின் இல்லத்து கட்டு தறிபாட
நம்புமென் வாயுண்ணும் நோன்பிற்கா -அம்பையே
உண்ணதான் வாயென்றால் ஊமையாய் ஆக்கிடு
பண்ணது பின்னேபெப் பே….(66)
தோப்பில் துரவில் தளும்பும் அடவியில்
மோப்பம் பிடிக்கும் மலர்வண்டில் -மேய்ப்புல்லின்
வண்ண மரகதத்தில் வெற்படி வாரத்து
மண்ணில் மழையின் மணம்….(67)
வாதாடல் வம்பிழுத்தல் வஞ்சித்தல் வைத்துமனை
சூதாடல் மாற்றான் மனைசுகித்தல் -தோதாக
வந்தவரை ஏய்த்து வழிப்பறி செய்தலிவை
அந்தவா ணிக்கு அவம்….(68)
சத்துவத்தில் சாந்தமாய், சாகசத்தில் ராஜசமாய்
சுத்தமன தாமசத்தில் சும்மாவாய் -அத்தனையும்
தாண்டி அனுபூதி தந்திடும் தாயிவளை
வேண்டிட வையத்தில் வான்….(69)
வலுவிவள் சேர்க்கை, வளமிவள் நூற்கை
புலியிவள் மான்தோல் போர்த்தி -எளிமையாய்
கோலம் கொடுத்தாலும், கூறக் கலம்பகம்
காலன் உயிருக்கே காவு….(70)
கற்பனை தந்து கவிதை களைத்தந்து
தற்பெருமை தந்துனைத் தாழ்த்திடுவாள் -அற்பனாய்
செய்வள் சரஸ்வதி, சிந்தைக்கப் பால்செல்ல
பெய்வள் திருஞானப் பால்….(71)
தனியானை வரும்முன் மணியோசை யாம்போல்
கனிவான சொல்முன் குரலில் -தணிவும்
உடையவர்கள் நாவில் சடையப்ப வள்ளல்
கொடையளிப்பாள் கம்பன் கவிக்கு….(72)
கோல மயிற்சாயல் கூவும் குயில்வாயள்
நூலை நிகர்த்துநெளி நுண்ணிடையாள் -பாலை
வனச்சோலை பாக்கள் விழையும் கவிக்கு
மனச்சோர்வை நீக்கும் மருந்து….(73)
எழுதா கிழவி, எழுதிப் பழக
பொழுதும் அணைத்துப் புணரும் -அழகி
துடியிடையில் பிள்ளைத் தமிழேந்தி, வேண்ட
பொடிநடை யாய்வருவாள் பார்….(74)
வெண்தா மரைமேனி, செந்தா மரைப்பாதம்
விண்தா மரைபூத்தோன் வல்லியே -கண்தா
மரைபாராய் பண்தா மறைவாணி என்தாய்
முறையன்றோ நீயிம் மகர்க்கு….(75)
பாழெனத் தள்ளாதிப் பாவியை உந்தன்கை
யாழெனக் கொண்டுமடி ஏந்திடு -ஊழெனை
வாட்டாத வண்ணம் வகைசெய்வாய் வாணி
பாட்டெழுதப் போகுமே பாடு….(76)
தேவாரம் வேண்டாம் திருவாய் மொழிவேண்டாம்
நாவோரம் நின்றென்னை நானறியும் -தீவீரத்
தேடலில் ஈடுபட்டு வீடான் மனிலென்றும்
நீடூழி வாழவைவா ணி….(77)
கூத்தன் சபாபதி கூடப் பிறந்ததால்
கூத்தனூர் கொண்டாயோ கோயிலாய் -வாத்தியார்
அம்மா எனக்களிப்பாய் ஆடா(து) அசங்காது
சும்மா இருக்கும் சுகம்….(78)
காளமேகம் வெண்பாவில், கம்பன் விருத்தத்தில்
காளிதாசன் கற்பனை கங்கையில் -ஏளுகின்ற
பார தியெனதுவெண் பாக்களில் சீராக
ஊர திசியக்க உய்….(79)
சங்கத் தமிழும், சதுர்மறையும், சாத்திரமும்
செங்கண்மால் நாம சகஸ்ரமும் -சங்கரியின்
ஆயிரம் பேரும் அதிகாரம் பெற்றது
தாயிவள் வாய்வந்த தால்….(80)
நாடகம், சங்கீதம், நாட்டியம், முத்தமிழ்
பாடும் பதிகங்கள் பாசுரங்கள் -நாடிடும்
தன்முத் திரைபதிக்க தேவி சரஸ்வதியின்
சின்முத் திரைக்கை சிறப்பு….(81)
சொல்லக்கேள் நெஞ்சே சகத்தில் பிறந்திறக்கும்
அல்லல்தீர் மாமருந்து ஆகுமிங்கு -வெள்ளத்தை
ஒத்து விரைந்துனக்கு ஓதுவிக்கும் ஓங்கார
வித்தைக்(கு) அதிபதியின் வாக்கு….(82)
மாதவம் செய்தும் மகாயக்ஞம் செய்துமுன்
தீதவம் தீராது, தாமரைப் -போதமர்
வாணியை, ஞான விசார உயர்வளிக்கும்
ஏணியை எந்நாளும் ஏத்து….(83)
நால்செல்ல நாள்செல்ல நாம்செல்ல வேண்டுமே
ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே -கேள்நல்ல
வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
பூர்த்தியா கும்பார் பிறப்பு….(84)
நாடுவாய் நெஞ்சே நளினம் அமர்வோளை
சூடுவாய் நெஞ்சே சரோருகத்தாள் -பாடுவாய்
நெஞ்சே பதுமத்தில் நல்லதோர் வீணையைக்
கொஞ்சும் கலையாள் கழல்….(85)
அறிவு அலுத்திடும், ஆன்மீக ஞானச்
செறிவு நிலைத்திடும் சான்றோர் -உறவாய்
நெறியை உணர்த்திடும் நான்முகன் பத்தினி
வெறிநான் அகந்தை விலக்கு….(86)
நாக்கில் நரம்பின்றி நாணாது பேசுவோர்
வாக்கில் வராள்கலை வாணியவள் -தூக்கில்
இடப்படும் போதும் இனியன கூற
தடைப்படுமே தண்டனை தீர்ப்பு….(87)
கண்ணன் குழலில் கணபதி மோதகத்தில்
வண்ண மயிலூர்வோன் வேல்முனையில் -மின்னிம்
திருவில், மஹேசன் தவத்தில் திகழ்வாள்
உருவிலிவள் பாயும் ஒளி….(88)
“தும்பைவெண் பட்டுடுத்தி தாமரை வீற்றவளை,
நம்பிஊ டாடும்நன் நூலிழையும், -கம்பனில்லக்
கட்டுத் தறியில் கவியாகி நெய்துவெண்
பட்டளிக்கும் பாரதிக்கே பார்”….(89)
“கதிர்முகத்தாள் செந்நெல் கதிர்நகத்தால் யாழில்
உதிர்சுரத்தால் எண்எண் உரைப்பாள் -சதுர்முகத்தோன்
பத்தினி என்வாக்கில் பூத்திட நீயென்னைப்
பத்திநீ எண்ணு பரிந்து”….(90 )
“தொழுகைக்கும் , காலில் விழுகைக்கும் , கண்ணீர்
அழுகைக்கும் வாணி அசையாள் – கழுகைத்தன்
வாகனமாய்க் கொண்டோன் வயிறுதித்தோன் பத்தினி
நாகனமற் றோர்பால் நிலைப்பு”….(91)
“நாபிக் கமலத்தில் நன்கமர்ந்து நானிலம்
சோபிக்க ஓதும் சதுர்முகனை -தாபிக்க
வைத்தவளைப் போற்றிட , வையத்(து ) தளவுகல்வி
கைத்தல நெல்லிக் கனி”….(92)
”அண்டாது வெவ்வினைகள், ஆய கலைகளை
விண்டோதும் வீணை விரலாலைக் -கண்டோடும்;
கொண்டாடும் அன்பர் குடும்பத்து வாரிசாக
வெண்டா மரையாள் விருப்பு”….(93)
“விருந்தா வனக்கண்ணன் வேய்ங்குழல் வாக்கு,
கருந்தா மரைக்கண்கள், கூறைக்குள் -பொருந்தாத
இல்லா இடையை , இருத்துவோர் புத்தியில்
சொல்லாள் பதத்தின் சுவடு”….(94)
“சோதித்த பின்வாழ்க்கை சொல்லித் தரும்பாடம்;
வேதத் தயன்மணந்த வாணியோ -போதித்து
கூட்டுவாள் சத்சங்கம் ,காட்டுவாள் நன்னெறி
தீட்டுவாள் வைரமாகத் தேய்த்து”….(95)
“தலைஎழுத்தை மாற்றும் திருப்பட்டூர் அய்யன்
முலையழுத்த மோகிக்கும் மாதே -கலைஎழுத்தென்
மேடை வசனத்தின் மேன்மைக்கு ,வெண்ணிற
ஆடை அணிந்தோய் அரண்”….(96)
”ஆரா முதனாகம் ஆள்பவளும், வெள்ளிமலை
ஊரான் இடபாகம் உற்றவளும் -கூறார்
பதிலுனக்கு ஞானம் பொருத்து; ,சரசு
வதியே வினாவிடை வீடு”….(97)
“மகர யாழை மடியேந்தி மீட்டி
அகர முதல அளிப்பாள் -நுகர்வோர்
கவியிளங்கோ ,கம்பன், குமர குருபரராய்
புவிவிளங்க வாக்கன் பளிப்பு”….(98)
“சம்போ மகாதேவன் சோதரி, செவ்விதழ்
அம்போ ருகமமர்ந்தோய் ஆதரி -அம்பே
சகலகலா வல்லி, சரஸ்வதி வாணி
புகலெனக்குன் பாதாம் புயம்”….(99)
”பாத நமஸ்காரம், பூசை புனஸ்காரம்
ஏதும் புரிந்திலேன் என்றாலும் -ஆதுரம்
உற்றெனது வாக்கிலே உட்கார்ந்து வெண்பாக்கள்
பெற்றிட வைத்தாய்வெண் பூ”….(100)
“புத்தகம் , முத்துமணி பக்கயிரு கைபற்ற
மத்தயிரு கையால் மடியேந்தும் -சித்திர
யாழினை மீட்டிடும் ஏழிசைச் செல்வியே
வாழிய வாழிய வே”….(101)
—————————————————————————————————————
ஆஹா பக்தி மணம் வீசிய சரஸ்வதி வெண்பா பூக்கள்! (101) பாராட்டுகள்!