ஒரு ஆடு மனம் திறக்கிறது
விசாலம்
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் வார்ப்பதும் , பல நேர்த்திக் கடன்களை , முடிப்பதுமாக எங்கும் கூட்டம் அலை மோதும் .அதுவும் எல்லையம்மன் , மாரியம்மன் , வீர மாகாளியம்மன் என்று பல பெயர்களில் அம்மன் அருள் புரிய தெய்வீக அலை வீசும் .ஆனால் மிருகங்களைப் பலி கொடுப்பது தடுக்கப்பட்டிருந்தும் சில கோயில்களில் ஆடு வெட்டுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது .
போன வருடம் ஆடி மாதம் ஒரு அம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். அங்கு ஒருவர் ஒரு ஆட்டை இழுத்துவர அது பரிதாபமாக அவருடன் நடந்து கொண்டிருந்தது . அதன் முகம் பார்த்தால் அதன் முடிவு நெருங்கி விட்டதை அது உணர்ந்து கொண்டது போல் இருந்தது அந்த ஆடு என்னிடம் கவிதை மூலமாகப் பேசியது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது எனக்கு.
ஆடி மாதம் வந்து விட்டால் ,
அம்மன் கோவிலில் கொண்டாட்டம்,
எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம்
எங்கள் இனத்திற்கும் திண்டாட்டம்
என் வயிற்றில் புளியைக் கரைக்க
என் மகனை நான் தேடுகிறேன்
இன்னும் எங்கே போனான் அவன்
புல் மேய இவ்வளவு நேரமா?
திண்டாடிப் போனேன்
மனம் தவித்தது.
ஓடி வந்தான் என் மகன்
க்ழுத்தில் பூ மாலையோடு.
நெற்றியில் மஞ்சள்
கொம்பின் ந்டுவில் குங்குமம்
அழகாக மின்னினான்
“அம்மா ,எனக்குப் பிறந்த நாளா?
ஏன் எனக்கு இந்த அலங்காரம்.? ”
மகிழ்ச்சியுடன் கேட்டான் அவன் .
மனதிற்குள் அழுதேன்
“மகனே உன் பிறந்த நாளில்லை இது
இன்று உன் மரண நாள்”
ஒன்றும் புரியாமல்.அவன் விழித்தான்
நான் மே…..மே… என்று அலறினேன்,
காந்தியை அழைத்தேன்
கேட்டேன் அவரிடம்
பார்த்தாயா? உன் அஹிம்சைக் கொள்கையை
கீழே இறங்கவில்லை காந்திஜி.
மேலிருந்தே வேதனைப்பட்டார்,
புத்தர் , மகாவீரர் அன்னை தெரசா
என்ற பலபேர்
என் கண் முன்னே.
அவர்கள் பரப்பிய அஹிம்சை எங்கே?
ஜீவ காருண்ய தத்துவம் எங்கே ?
மனிதனின் சுய நலத்திற்கு
எங்கள் கழுத்தில் கத்தியா?
உங்கள் விரதம் நிறைவேற்ற
எங்கள் உயிர் தேவையா?
பலி கொடுக்கும் மக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
போன உயிர் திரும்புமா?
அதைக் கொடுக்கத்தான் முடியுமா?”
அந்த ஆடு கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்ல?
கேள்வி கேட்பது சுலபம்.. பதில் சொல்வதுதானே கஷ்டம்ன்னு ஒரு வாக்கியம் நினைவுக்கு வருது.. கவிதையைப்படிக்கையில்.