ஏமாற்றமளிக்கும் புதிய நிதிநிலை அறிக்கை!
பவள சங்கரி
தலையங்கம்
நம்முடைய நிதியமைச்சர் அறிவித்துள்ள புதிய நிதிநிலை அறிக்கை மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துமா, ரூபாயின் மதிப்பையும் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்துமா. இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லுமா என்றால், அதற்கான பதிலாக முழு மன நிறைவுடன் ‘ஆம்’ என்று சொல்லும் நிலையில் இல்லை என்பதே நிதர்சனம்.
இன்றைய நிலையில், பெட்ரோல் விலையில் ரூ. 3 விலையேற்றம், மேலும் சரிந்துள்ள ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் மத்தியில் ‘இவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ’ என்ற சந்தேகம் வலுவாகிறது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணம் நாட்டு நலனுக்காக பல வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. இராணுவத்திற்கான செலவுகளை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வது நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையான ஒன்று என்றாலும், அதில் எத்தனை சதவிகிதம் தளவாடங்கள் உற்பத்திக்காகவும், வெளிநாட்டு கொள்முதலுக்காகவும் செலவிடப்படுகிறது என்பது தெரியவில்லை. வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களுக்காக நாம் செலவிடும் தொகையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தளவாடங்களுக்காக எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் எத்தனை இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது, என்பதைப் பற்றியெல்லாம் குறிப்புகள் இல்லை. கல்வி வளர்ச்சி, ஆய்வுப் பணிகள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்காக எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான பதிலுமே மிகப்பெரிய கேள்விக்குறிதான். பாரதப் பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ என்ற ஆக்கப்பூர்வமான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஒதுக்கீடும், அதன் பலாபலன்களும் கடைக்கோடியில் வாழுகின்ற இந்தியனுக்கும் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது இந்த நிதிநிலை அறிக்கையில் தெளிவாக இல்லை. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காகவும், சிறு முதலீட்டாளர்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ள ரூபாய் 20,000 கோடி அளவில் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள ‘முத்ரா’ என்ற இந்த வங்கி கடைக்கோடியில் உள்ள தாழ்த்தப்பட்ட சகோதரருக்கு சென்றடையுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘மகிளா’ என்ற மகளிருக்கான நலவாழ்விற்காக பெண்களால் நடத்தப்படும் வங்கி, ஏழை மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டம் போன்றவைகள் போல இதுவும் ஏட்டுச் சுரைக்காய் ஆகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.
பெரிய நிதி நிறுவனங்களும், மிகப்பெரும் தொழிலதிபர்களும் பயன் பெறும் வகையில் மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்பதே மறுக்கவியலாத உண்மை. மிகப்பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்த நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கீழ்த்தட்டு மக்களுக்கு அந்த நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதோடு, பத்தோடு இதுவும் ஒன்று என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டுகளை அள்ளி வழங்கி, கீழ்த்தட்டு மக்கள் நிரம்பியுள்ள நம் இந்திய நாட்டின் பொருளாதார நிலை நின்ற இடத்திலேயே நிலையாக நிற்பதற்கு வழியமைக்காமல் இருப்பதும் நமது முக்கிய கடமையாகிறது.
