சென்னையில் சத்யம் சினிமாஸின் 8 புதிய திரையரங்குகள்
திரைப்படம் பார்ப்பதைப் புதிய அனுபவமாக்குபவை திரையரங்குகள். அந்தப் பணியைக் கடந்த பல ஆண்டுகளாகச் சத்யம் சினிமாஸ் குழுமம் செவ்வனே செய்து வருகிறது. திரையரங்குகளைச் சர்வதேச தரத்துக்கேற்ப மாற்றியமைத்த இந்த நிறுவனம், திரையரங்கத் தொழில்நுட்பத்தில் அவ்வப்போது ஏற்படும் நவீன மாறுதல்களை உடனுக்குடன் தங்கள் திரையரங்குகளிலும் புகுத்தி, ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளது. திரையரங்குகளைச் சுத்தமாகப் பராமரிப்பது, தரமான ஒலி – ஒளி அமைப்பு, வசதியான இருக்கைகள், சரியான கட்டணம் போன்றவை சத்யம் சினிமாவின் சிறப்புகள்.
ஏற்கெனவே 6 திரையரங்குகளுடன் செயல்பட்டு வரும் சத்யம், இப்போது சென்னையில் மேலும் 8 புதிய திரையரங்குகளைத் திறந்துள்ளது. 2010 ஆகஸ்டு 23ஆம் தேதி, திங்கள்கிழமை முதல் இவை செயல்படத் தொடங்குகின்றன.
சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே உள்ள எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான எக்ஸ்பிரஸ் அவென்யூவில்தான் இந்த புதிய திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்கேப் சினிமா (http://www.escapecinemas.com) எனப் பெயரிடப்பட்டுள்ள இவற்றில் இரு திரையரங்குகள் தலா 300 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வசதி கொண்டவை. மற்ற 6 திரையரங்குகளிலும் தலா 120 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.
இதுகுறித்து சத்யம் சினிமாஸின் தலைவர் டான் நராங்கோ கூறுகையில், காலத்தின் அவசியம் கருதி, இந்த மாதிரி சிறிய திரையரங்குகளை அதி நவீன வசதியுடன் அமைத்துள்ளோம். சத்யம் தியேட்டரில் நீங்கள் வசதியாகப் படம் பார்க்கலாம். ஆனால் எஸ்கேப் சினிமாவுக்கு வந்தால், காலை முதல் மாலை வரை பொழுதுபோக்கத் தேவையான அத்தனை அம்சங்களும் உள்ளன, என்றார்.