வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் …
— கவிஞர் காவிரிமைந்தன்
அன்பின் பரிபாஷையை உள்ளம் எப்போதும் வரவேற்கும். அது கண்களால் பேசினாலும் சரி, இமைகளால் அசைக்கப்பட்டாலும் சரி, புன்னகையால் பூத்திருந்தாலும் சரி, படைப்பியிலின் நியதிப்படி ஒன்றை ஒன்று நாடும், தேடும், திரைப்படமாக இருந்தால் பாடும்! சரிதானே!! என்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் உஷா நந்தினி இணைந்து வழங்கிய ஒரு காதல் சித்திரம் இப்பாடல்! சந்தங்கள் நர்த்தனமாடும் இசை அதற்கு ஏற்ப வளைந்து கொடுக்க, மெல்லிசை மன்னரின் இன்னிசையில் உருவான காதல் சங்கீதமிது! டி.ஆர்.ராமண்ணா அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் பதிவான இன்பகீதம், வரைந்தளித்திருக்கிறார் காவியக்கவிஞர் வாலி அவர்கள்!
பாடலைக் கேட்போர் மனதில் எழும் பெருத்த சந்தேகம் இது கண்ணதாசன் பாடலா? வாலி பாடலா? ஆம், அத்தகு ஐயம் எவருக்கும் எழத்தான் செய்யும், பிறகென்ன, இது கண்ணதாசன் பாணி என்று அடித்துச் சொன்னால், அட இது வாலியின் பாடல் என்று பதில் வந்துவிழுகிறது! வாலியின் பாடல் என்று சொன்னால் கண்ணதாசன் என்று மாறிவிடுகிறது. இந்தப்பாடல் அந்த ரகம்தான்! வாலி வார்த்தைகளை வைத்து ஆடியிருக்கும் விளையாட்டு கண்ணதாசனின் சாயல் என்று சொல்ல வைக்கிறது!
பட்டு சேலையில் மின்னும் பொன்னிழை
பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
கட்டுக் காவலை மீறும்
இந்த தாள ஜதிக்கட்டு திருவருட்செல்வரில் “மன்னவன் வந்தானடி”யை நினைவூட்டும்!
ராஜபார்ட் ரங்கதுரையில் ” மதனமாளிகையில் மன்மதலீலைகளாம்” பாடலை நினைவூட்டும்!
தங்கச் செங்கனி அங்கம் உன்னுடல்
சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
பொங்கும் நாடகம் என்று
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
தத்தைக்கே தரும் என்று
சித்தம் சொன்னது வேகம் வந்தது
நித்தம் ஆயிரம் உண்டு
இந்த வரிகளும், வார்த்தைச் சரங்களும் முத்து முத்தானவை, இசையோடு அவை தரும் சுகராகங்கள் இதயங்களை மீட்டும் இன்பவீணைகள்! மலர்மேனி ஒன்று கண்முன்னே சதிராடக் கண்டு அலைமோதும் இளமனங்களில் எழும் இன்பங்களை சுகவரிகளில் தருகிறார் பாருங்கள்!! கேளுங்கள்!! தமிழ்ச்சுவையின்பம் என்னவென்று கேட்போருக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு!!
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
படம்: என்னை போல் ஒருவன்
பாடல்: வாலி
இசை: எம். எஸ். வி
குரல்: டி. எம். எஸ்., பி. சுசீலா
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
ஆ ஆ ஹா ஆ ஆ ஓ ஹோ ஹா
சீரோடு தானாடும் தேரோடும் திருநாள் எங்கே
மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய பூ போன்ற மங்கை இங்கே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ,,, பூ போன்ற மங்கை இங்கே
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
பட்டு சேலையில் மின்னும் பொன்னிழை பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம் கட்டுக் காவலை மீறும்
ஆ ஆ ஆ ஆ ஆ
கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஆடும்
சிட்டு கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்
பூ வண்ணக் கூந்தல் என் மஞ்சமானால்
நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
தங்கச் செங்கனி அங்கம் உன்னுடல் சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன் பொங்கும் நாடகம் என்று
ஓ ஓஓ ஓஓ ஓஓ
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம் தத்தைக்கே தரும் என்று
சித்தம் சொன்னது வேகம் வந்தது நித்தம் ஆயிரம் உண்டு
பாடுங்கள் இன்னும் தாளங்கள் சொல்லும்
கூடுங்கள் என்று பெண் உள்ளம் சொல்லும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
ஆ ஆ ஹா ஆ ஆ ஓ ஹோ ஹா
காணொளி: https://www.youtube.com/watch?v=tRrgeh802Pk
மெல்லிசை மன்னரின் திரிபிள் பாங்கூஸ், தபேலாவும்,கிடாரின் ஆள்மையும்
டி எம் எஸ்ஸின் கமகமும் அந்தகாலத்தின் ஹிட்டிங் பாணி.
நானும் நடையை வைத்து கண்ணதாசனின் வரிகள் என்றுதான் நினைத்தேன்
நடிகர்கள் பிறரைப் போல் நடித்து நக்கல் அடிப்பது போல் கவிஞர்களும்
கைதேர்ந்தவர்கள் காவிரி. “மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் ”
“தங்கச் செங்கனி அங்கம் [……] நித்தம் ஆயிரம் உண்டு ” இது
கண்ணதாசனின் கலக்கல்