கடவுள் தந்த இரு மலர்கள் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கடவுள் தந்த இருமலர்கள் …
கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டு! கதையின் கருவை உள்வாங்கி கவிதையாக மொழிவதில் கைதேர்ந்த கவிஞர்கள் சிலரே! இதோ இருமலர்கள் … ஒன்று பாவை கூந்தலிலே… ஒன்று பாதை ஓரத்திலே… நாயகனின் கைப்பிடித்த நாயகியையும் கைவிடப்பட்ட நாயகியையும் குறிக்கும் சொற்களாக! பத்மினி, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன் மூவரின் இடையே முகிழ்த்த பாடலை,
கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே
என்று பாத்திரம் பேசுகிறது. கவிஞரின் பா திறமும் பேசுகிறது. மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் வார்த்தைக் கோலம்! பி. சுசீலாவுடன் இணைந்து குரல் தருகிறார் எல்.ஆர். ஈஸ்வரி.
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
இதயம் என்றும் அமைதி பெறும்
இத்தகு காட்சியை வசனங்களால் வரைந்து காட்ட முடியுமென்றால் பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கும். பக்குவமாய்,அற்புதமாய், ரத்தினச் சுருக்கமாக உவமைகளிட்டு உள்ளம் தொடுகிற கவிஞர் வாலி அவர்களை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?
நல்லதோர் இனிய பாடல் என்றும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கும், காலங்களை வென்ற பாடலிது!
மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் உயிரோட்டம் அது கதையை அப்பட்டமாய்ச் சொல்கிறது! பண்பட்ட நடிப்பால் பத்மினியும் புன்னகை அரசி கே.ஆர். விஜயாவும் இணைந்து மிளிரும் இனிய பாடலை இன்னொருமுறை கேட்கலாமே!
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
[ கடவுள் தந்த இரு மலர்கள்]
காற்றில் உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன மலர்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
பாவைக் கூந்தல் சேர்ந்த மலர்
பருவம் கண்டு பூத்த மலர்
பாசம் கொண்டு வந்ததம்மா
பரிசாய்த் தன்னைத் தந்ததம்மா
[ கடவுள் தந்த இரு மலர்கள்]
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை மனம் கொண்டு
தலையில் இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனைச் சேர்த்துக்கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோயில் சேர்ந்த ஒரு மலரும்
இரண்டும் வாழ்வில் பெருமை பெரும்
இதயம் எங்கும் அமைதி பெரும்
[ கடவுள் தந்த இரு மலர்கள்]
காணொளி: https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA
https://www.youtube.com/watch?v=CH1eAJBQiwA
கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டுக்கு (கடவுள் தந்த இருமலர்கள்) அருமையான தொகுப்புரை வழங்கிய கவிஞர் காவரி மைந்தனுக்கு நன்றி , வணக்கம்