அனுமன் அறுபது – (ஒரு கவிதை மாலை) (3)
க.பாலசுப்பிரமணியன்
மூன்றாம் பத்து
கண்ணிரண்டில் நீர்மல்கும் காகுத்தன் பெயர்கேட்டால்
காதிரண்டும் சொல்கேட்ட இன்பத்தில் சுவைகூட்டும்
கணநேரம் மனமெல்லாம் மெய்மறந்து மலர்தூவும்
மாதவனின் மனம்கவர்ந்த மாருதியே ! மனமிரங்கு !
பூப்போன்ற மனம் கொண்டவனே புதியோனே !
பூங்குன்றம் போதாது பொழுதும் போற்றிடவே !
பூவுலகில் புதிராக இருக்கின்ற பூம்பொழிலே
புதிதாக மொழியொன்று இனியில்லை போற்றிடவே !
பொல்லாத தீவினைகள் பொடியாக்கும் பார்வை
பொருந்தாத நினைவுகளை பொசுக்கிவிடும் கூர்மை
போர்முனையில் வாழ்வுக்குக் கவசம் உன்மேன்மை
போதாதுபோதாது புகழாரம் உனக்கென்றும் பல்லாயிரம் !
பணிவோடு நீயிருக்கும் பாவனை கண்டு
பயம்கூட பயம்கொண்டு பாதைகள் மாற்றும்
பலம்தந்து நலம்தந்து மனம்நின்ற மாருதியே
பணிவோடு சரணடைந்தேன் பாதைகள் காத்திடுவாய் !
மனத்துள்ளே நீயிருந்தால் மலமெல்லாம் நீங்கிவிடும்
மங்காத ஒளியாக, மாருதியே, மனம் நிறையும்
மடிந்திட்ட நம்பிக்கைகள் மறுபடியும் தலைதூக்கும்
மனக்கோவில் படைத்திட்டேன் மறுக்காமல் வந்துவிடு.!
மார்கழி மூலத்தில் மாதவத்தால் வந்தவனே
மாதங்கள் பன்னிரண்டும் போற்றிடும் ஆதவனே
மாறாத சிந்தையுடை மங்கள மூர்த்தி
மாநிலங்கள் போற்றிடுமுன் மங்காத கீர்த்தி !
போகின்ற இடமறியாத புள்ளாகப் பறந்தேன்
போதனைகள் கேட்காமல் புல்லாக வளர்ந்தேன்
போதுமென்ற மனமின்றி புவியெல்லாம் அளந்தேன்
புகலிடமே உன்பாதமென புரிந்தபின்னே வந்தேன் !
புலனெல்லாம் தந்தது புதுச்சுமைகள் பூபாரம்
பொல்லாத உணர்வுகளின் போர்க்கள ஆரவாரம்
புரியாத வாழ்விற்குப் போக்கிடம் வேறில்லை
போற்றிடுவேன் காத்திடுவாய் புலன்வென்ற நாயகனே !
ஸ்ரீராமன் போற்றுமிடம் செவிசாய்த்து நிற்பவனே
சீதா மணாளன் தாள்போற்றித் தவம் செய்பவனே
சிறுதேனும் தவறின்றி ரகுகுலம் காத்தவனே
சிரஞ்சீவி! உன்னருளைச் சிறுதேனும் தந்திடுவாய் !
வெற்றிலை அணிந்தாலும் வெற்றியைத் தருபவனே
வெற்றிடம் ஏதுமின்றி நினைவெல்லாம் நிறைந்தவனே !
வேகத்தில் வினைமுடித்தும் விவேகத்தை அறிந்தவனே !
வேதனைகள் நீக்கிடவே விரைவாக வந்திடுவாய் !

