சங்க இலக்கியத்தில் மொழிசார் வன்முறை

0

-பா.சிவக்குமார்                                                                                   

கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் வாழும் மக்களிடையே முல்லைப் பெரியாறு அணைநீரைப் பெறுவதற்கும், காவிரிநீரைப் பெறுவதற்கும் வழக்குமன்றத்தை நாடவேண்டியுள்ளது. மேக்கே தாட்டு (மேகதாது) எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகத்தினர் அணைகட்டத் தீர்மானித்த நிலையிலேயே தமிழ், கன்னடம் என இருவேறு மொழி பேசுவோர் என்ற அடிப்படையில் கடையடைப்பு, பேருந்து நிறுத்தம் போன்ற அமைதியான வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொழுதுகூட பல நேரங்களில் கல்லெறிதல், கடை உடைப்பு, பேருந்தை எரித்தல், இருவேறு மொழி பேசுபவர்கள் அடித்துக் கொள்ளல், போன்ற வன்முறைகள் நிகழ்ந்துள்ளதைக் காணநேரிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனையின்போது சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மலையாள மக்கள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் இடையே இன்றும் ஒற்றுமை ஏற்படாமல் ஆளும் வர்க்கம் அதிகாரத்தால் அடக்கியாளும் நிலையினையே கண்கூடாகக் காண்கிறோம். இது போன்ற மொழிசார் வன்முறை சங்கச் சமூகத்திலும் ஊடுருவி இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

tamil

                சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இம்மூவரின் நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ்மொழியாகும். ஆனால், இம்மூவேந்தர்களும் வேற்றுமொழி பேசும் நாட்டினரைப் போர் வன்முறையால் அழித்து, மிரட்டி அவர்களிடம் திறை பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. இதனை,

“………………………………வென்றியொடு
வில்லலைத் துண்ணும் வல்லான் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே
”         (அகம்.31:12-15)                             

எனும் அகநானூற்றுப் பாடல் சான்று பகர்கின்றது. பிறமொழி பேசும் மக்களின் உழைப்பால் வந்த பொருட்களையும், அவர்களின் உரிமைகளையும் சுரண்டும் வன்செயல்களில் மூவேந்தர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

                வேற்றுமொழிப் பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்க வேலேந்திச் சென்றதனை,

விலங்குஇருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறுபல் மொழிய தேஎம் முன்னி,
வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி
”                                       (அகம். 215:1-4)    

என்ற பாடல் எடுத்தியம்புகின்றது. வேற்றுமொழி பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்கும் பொருட்டுத் தமிழ்அரசர்கள் கரிய கேடயத்தை ஏந்திப் படைநடத்திச் சென்றுள்ளதை அகம். 67:12-14ஆம் பாடல் வெளிப்படுத்துகின்றது.

மொழி அடிப்படையில் வேற்படையையுடைய ’கட்டி’ என்பவனுடைய நாட்டை ‘நல்லநாடு’ என்றும், வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர் நாடு என்றும் புலவர்கள் பதிவு செய்துள்ளமையை,

குல்லைக் கண்ணி வடுகர் முனாஅது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
”                                 (குறுந்.11:5-7)                               

என்ற பாடல் வழி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு புலவர்களும் வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலையினைச் சங்கப்பாக்களின் வழி அறியலாம்.

ஐ.நா.சபை போன்ற உலக சமாதான அமைப்பு, இந்திய தேசம் என்ற ஒருமைப்பாடு உள்ள நிலையிலேயே மொழிசார்  வன்முறைகள் நிகழ்கின்ற பொழுது சுமார் இருபது நூற்றாண்டுகளுக்குமுன் எத்தகைய வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்பதனைக் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவில் இருந்திருக்கும் என்பது உண்மை. அதனையே மேற்கண்ட பாடல்கள் வழி உணரமுடிகின்றது.

***

பா.சிவக்குமார்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோவை, 641 046.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *