சதா பாரதி
………………………………………………

நெகிழ்வான தருணமே …

Man on top of mountain. Conceptual design.

“தம்பி உனக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அவ்ளோ சந்தோசமா இருக்கேன். நேத்துல இருந்து எப்பவுமே எரிஞ்சு எரிஞ்சு விழும் என் பேத்தி நேத்து சாயந்திரம் வந்ததும் கட்டி பிடிச்சு அழுதா …அப்புறம் தான் நேத்து நீ வகுப்புல தாத்தா பாட்டி பத்தி பேசுனத சொன்னா. உன்னை இத்தனை நாள் புரிஞ்சுக்கல நான் னு பெரிய மனுசியாட்டம் பேச ஆரம்பிச்சுட்டா ..” என்றவாறு தொடர்ந்தது அந்த அன்பு பாட்டியின் பேச்சு …அதன் பின்பு அவள் பேசிய எதுவும் கேட்கவில்லை …என் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. பேசியது என் மாணவியின் பாட்டி …

இது போன்ற அழைப்புகள் எனக்கு புதிதல்ல. முன்னரே நம்பிக்கை நிமிடங்களிலே இது போன்ற பதிவு ஒன்றை எழுதியுள்ளேன் .ஆனால் ஒவ்வொரு அழைப்பும் எனக்கு முக்கியமே. வகுப்பறைகளை தாண்டி மாணவர் மனதில் அமர்வது அத்தனை எளிதல்ல. வகுப்பறைகளில் உறவுகள் பற்றி அடிக்கடி பேசிவருகிறேன். இயந்திர உலகில் பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் இயந்திரங்களாக எனது மாணவர்களை உருவாக்க விரும்பவில்லை. எனது மாணவர்களிடம் மட்டுமல்லாமல் நான் போகும் மேடைகளில் எல்லாமே உறவுகளின் உன்னதங்களை பேசி வருகிறேன். அது எத்தனை வலிமையானது என்பது உணர்ந்தவர்களுக்கே புரியும். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் நமக்கு ஆறுதலளிக்கவோ நாம் ஆறுதல் படுத்தவோ உறவுகள் அவசியம். அதுவும் தாத்தா ,பாட்டி போன்ற உறவுகள் இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்றே.

வன்முறைகளைகளையும் வக்கிரங்களையும் வரைமுறை இல்லாமல் இளம் தலைமுறையினரிடையே விதைக்கும் சற்றே மோசமான கலாச்சாரம் மாற வேண்டுமெனில் மாணவர்கள் மனதில் நல்ல செய்திகள் பகிரப்பட வேண்டும். நீங்கள் அவர்களை வழிநடத்த தேவையில்லை. வழிகாட்டவும் வேண்டாம். தடுமாறும் சமயங்களில் தாங்கிப் பிடித்தாலே போதுமானது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களோடு பேசினாலே போதும்.

ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்கள் என்பார்கள். மிகப்பெருமையோடு இந்த பணியினைச் செய்து வருகிறேன். நல்ல மாணவர்களை உருவாக்குவதோ தயாரிப்பதோ எனது வேலையில்லை. அவர்களுக்குள் இருக்கும் நல்ல மனிதர்களை அடையாளம் காட்டினாலே போதும். அதையே நான் செய்தும் வருகிறேன்.

என் இரண்டு தாத்தாக்களுமே ஆசிரியராக இருந்ததால் அவர்களின் ஆசியே என்னை வழிநடத்துகிறது என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன் என் அன்பு மாணவர்களோடு …

சில தருணங்களே
நம் வாழ்வினை அர்த்தப்படுத்திவிடுகின்றன …
சதா பாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *