“கண்டேன் அனுமனை’’….
கிரேசி மோகன்
————————————————-
குரங்கெண்ணம் காக்க மருந்துண்ண வைக்க
விரைந்தோடிக் கண்டாய் வரையை -திருந்தேன்
மலைநிகர்த்த நீயிருக்க மற்றெதையோ நாடினேன்
தலையிருக்க வாலாடும் தீங்கு….(25)
அறிவில் கதிரொளி ஆற்றலில் ஈசன்
திருவில் ஜனகமகள் தாசன் -உறவில்
குகனோடு ஆறானான் காகுத்தன் நட்பில்
நிகரில்லா மாருதியை நண்ணு….(26)
அறிவிலோ ஆசானாம் ஆற்றலில் ஈசன்
திருவிலோ ஜானகிக்கு தாசன் -உறவில்
குகனோடு ஆறாம் ரகுநாதன் தேர்வு
நிகரில்லா மாருதியை நண்ணு….(27)
வானரம் ஆயிரம் வாயைப் பிளந்திட
வானுற ஓங்கிநீள் வாரிதி -ஜாணுற
தாவி இலங்கைக்கு மேவிய மாருதியை
சேவிக்க சித்திக்கும் சத்து….(28)
உரம்கொடுக்கும் ஓங்க, கரம்கொடுக்கும் தாங்க
அரன்படைத்த அம்சன் அனுமான் -வரம்கொடுக்கும்
காலில் சிரம்கிடக்க, ஏழு மரம்தடுத்தும்
வாலி திறன்முடித்தோன் வாழ்த்து….(29)
பகுத்தறி வாளன் பரமராம பக்தன்
அகத்துறை ஆன்மன் அனுமான் -மகத்துவம்
பாடு ,மலர்ப்பதம் நாடு இகத்துடன்
வீடும் இணைந்திடும் வாழ்வு….(30)….கிரேசி மோகன்….