அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 65

0

அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம், லுக்ஸம்பர்க்

முனைவர்.சுபாஷிணி

லுக்ஸம்பர்க் ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஜெர்மனியோடு, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளையும் எல்லையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1940ம் ஆண்டில் மே10ம் தேதி ஹிட்லர் தலைமையிலான நாஸி படைகள் லுக்ஸம்பர்க் நாட்டிற்குள் ஊடுருவின. ஒரே நாளில் லுக்ஸம்பர்க் நாட்டைக் கைப்பற்றியது ஜெர்மனியின் அப்போதையை நாஸி அரசு. 1944ம் ஆண்டின் இறுதி வாக்கிலும் 1945ம் ஆண்டில் 2ம் உலகப்போரின் முடிவிலும் நாஸி அரசிடமிருந்து லுக்ஸம்பர்க் விடுதலை பெற்றது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன்னர் லுக்ஸம்பர்க் நாட்டில் ஏறக்குறைய 3500 யூதமக்கள் குடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கே வந்து குடியேறியவர்கள். நாஸி அரசு லுக்ஸம்பர்க்கை கைப்பற்றிய பின்னர் அங்கு குடியிருந்த யூத மக்களை அருகாமையில் இருக்கும் பிரான்சுக்கு சென்று விடும்படி கட்டாயப்படுத்தியது. ஏறக்குறைய 2500 மக்கள் அந்த வகையில் பிரான்சுக்கு குடிபெயர்ந்து விட்டனர். எஞ்சியவர்கள் கதி தான் பரிதாபம். எஞ்சிய ஏறக்குறைய 800 யூதர்களை நாஸி அரசு ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்ட கெத்தோக்களுக்கு கொண்டு வந்து விட்டனர். கெத்தோ என்பது ஜெர்மனியின் அப்போதைய நாஸி அரசுக்கு எதிரானோரை வைத்து சித்ரவதை செய்யும் வதை முகாம்.

மறைந்தும் ஒளிந்தும் சில யூத மக்கள் இருந்தவர்கள். ஆயினும் எஞ்சிய 800 யூதர்களையும் கெத்தோக்களுக்கு கொண்டு சென்ற பின்னர் ஜெர்மனியின் நாஸி அரசு லுக்ஸம்பர்கை யூதர்கள் வெளியேற்றப்பட்ட தூய்மை செய்யப்பட்ட நாடாக பிரகடனப்படுத்தியது.

தூய்மைவாத, இனவாத சிந்தனையின் எத்தனைப் பெரிய கொடுங்கோலாட்சியின் சிந்தனை இது என்று நினைக்கும் போதே மனிதம் தொலைத்த மக்கள் சிந்தனையின் கொடூர சிந்தனைப் போக்கினை காண முடிகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு மதவாதமும் இனவாதமும் தூய்மைவாதமும் என்றுமே நன்மை செய்ய முடியாது. அது எத்தகைய தன்மை உடையதாக இருப்பினும் தூய்மை வாதம் மக்கள் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் ஒரு சிந்தனை தான். பொதுமைப்பண்பிலிருந்து மக்கள் விலகும் நிலை ஏற்படும் தருணம் அது சமூகச் சீரழிவுக்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.!

1s

இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் நாள் முதன் முதலில் ஒரு தற்காலிக இடுகாடாக அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த போர்ப்படை வீரர்களில் சிலரது உடல்கள் இங்கே அச்சமயம் புதைக்கப்பட்டன. இங்கே புதைக்கப்பட்டோரில் 116 யூத இனத்தைச்சார்ந்த போர்ப்படை வீரர்களும் அடங்குவர். இவர்களது கல்லறையின் மேல் நட்சத்திர வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

2s

தற்சமயம் இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி 33.5 ஏக்கர் காடுகள் சூழ்ந்துள்ளன.

இந்த மயானப் பகுதிக்கு முன்னர் வாகனம் நிறுத்தும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் உயர்ந்த இரும்புக் கம்பிகள் பூட்டப்பட்ட நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் நமக்குத் தென்படுவது இந்த மயானத்தை மையப்படுத்தும் வகையில் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் ஆண் பெண் போர்ப்படை வீரர்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம். இதற்கு முன்னர் வலது புறத்தில் சிறிய அலுவலகமாக அருங்காட்சியகப் பகுதி அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தினுள்ளே, அமெரிக்க சான்றிதழ்கள், கொடிகள், புகைப்படங்கள், கடிதங்கள் என அரும்பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மிகச் சிறியதொரு பகுதி தான்.

3s

இந்த அறையை விட்டு வெளியே வந்தால் வலது இடது என இரு புறங்களிலும் பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்ட சுவரில் இரண்டாம் உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் அமைந்த விளக்கக் குறிப்புகள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விளக்கப்படங்களும் குறிப்புகளும் போர்ப்படைகள் மேற்கு ஐரோப்பாவில் போரின் போது சென்ற வழித்தடங்களை விவரிக்கும் வகையில் உள்ளன. ஒரு பகுதியில் இந்தப் போரின் போது காணாமல் போன 371 போர்ப்படை வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

4s

இந்த இடத்திலிருந்து மையப்பகுதியில்தான் உயர்ந்த கோபுரம் போன்ற நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தினுள் விளக்கு எறிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அமெரிக்கக் கொடி பிரம்மாண்டமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கத்தோலிக்க தேவாலயம் போன்ற அமைப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தால் பச்சைக் கம்பளம் விரித்தார் போல இருக்கும் புல்வெளியில் வெள்ளை நிறச் சிலுவைகள் நிறைந்த மயானக் காட்சியைக் காணலாம். இங்கே 5076 இறந்து போன போர் வீரர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பளிங்கு சிலுவைபோன்ற அமைப்பிலான கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆர்டென் (Ardennes) என அழைக்கப்பட்ட, 2ம் உலகப்போரின் போது மிக முக்கிய போர் நடைபெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இறுக்கமான காடுகள் நிறைந்த ஒரு பகுதி. லுக்ஸம்பர்க் நாட்டின் தலைநகரான லுக்ஸம்பர்க் நகரம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தின் போர்ப்படை தலைமையகமாகத் திகழ்ந்தது. இங்கே பணியில் இருந்த ஜெனரல் ஜோர்ஜ். எஸ்.. பாட்டர்ன் அவர்களது உடலும் இங்கேதான் புதைக்கப்பட்டது.

5s
கல்லறைகள் நிறைந்த இந்தப் புல்வெளியில் அங்குச் சென்றிருந்த போது உலகப்போரின் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தேன். மனிதர்களின் சுயநலமே பல சமூகக் கோளாறுகளுக்கு மூல காரணமாக அமைகின்றன. இது பெறுமளவில் அரசியல் ஆதரவும் பெறும் போது பெரும் சமூகப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. சுயநலத்தோடு இனவாதமும் தூய்மைவாதமும் பேசிய எவரும் இன்று இந்த உலகில் நிலைக்கவில்லை.

உலகமே பல இயற்கைப் பொருட்களின் கலவையில் தான் புதுப்புது பரிணாம மாற்றத்தையும் வளர்ச்சியும் பெற்றுள்ளது. மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. சுயநலப்போக்கை விட்டு பொதுநலப்பண்பை வளர்த்து மானுடம் தழைக்க அனைவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதை நினைவுறுத்துவதாகவே இந்த வகைச் சின்னங்கள் நம் முன்னே காட்சிப்பொருளாய் நிற்கின்றன. அதனைப் புரிந்து அன்பையும் நேசத்தையும் வளர்க்கும் மனிதர்களாக நாம் இருப்போம்.

அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.