இலக்கியம் எழுதாத நட்பு  (இரண்டாம்  பகுதி)

0

க. பாலசுப்பிரமணியன்

 

நண்பனே !

நமது அமைதியான பயணத்தில்

ஆயிரம் கேள்விகள்..

என் உள்ளத்தில் …

 

நண்பனே,

நீ எதை நேசிக்கிறாய்?

என் உடலையா ?

அல்லது உயிரையா?

 

உயிரின்றி இந்த உடலுக்கு

என்ன பொருள்?

உடல் என்றால் என்ன?

 

உடலுக்குள் உயிரா ?

உயிரால் உணர்வுற்ற உடலா?

 

உடல்…

எலும்புத் துண்டுகளை..

இசைவாய் காற்றினில் அடுக்கி..

ஈரக் காற்றில் ..

மிதக்க விட்ட மாளிகையா?

 

எங்கேயோ மிதக்கும் எண்ணங்கள்

இளைப்பாற இடமின்றி

களைப்பு நீங்க ஒதுங்கிவிடும்

உலகத்தின் பூங்காவனமா?

 

காதலென்றும் ..

காமமென்றும் ..

சுகமென்றும்..

சொந்தமெடுத்து ..

சுவைக்கின்ற  உணர்வுகளில்..

உடலுக்குச்  சொந்தமெது?

 

ஆணென்றும் பெண்ணென்றும்

அங்கங்களில் அலங்கரித்தாய் !

ஆசைகள் ஆர்ப்பரிக்க

அங்கமெல்லாம் எரிந்துவிட ..

அலைபாயும் மனதிற்கு

உடலை அடிமையிட்டாய் !

 

கூற்றுவனின் கொடும்பசிக்கு

நாற்றுநாட்டு ..

பயிர்வளர்த்து..

கதிர் அறுக்கும் ..

அறுவடையோ…

இந்த உடல்?

 

“உடலென்றும் உண்மையில்லை

ஓடுகின்ற பாம்பு ..

உறிக்கின்ற சட்டையது ..”

ஓதுகின்ற மாமுனிவர்…

உதடுகளில் உண்மையுண்டோ ?

 

இந்தக் கூண்டுக்குள்

எதைச் சிறை வைத்தாய்?

தமனிகளும் நரம்புகளும்

தானாக வந்தனவா?

அல்லது…

தரகுக்குத் தந்தாயா

ஒரு வாழ்வுக்கு?

 

ஜீவநதியாய் குருதிப்புனலை

ஓடவிட்டு..

உடலெல்லாம் கோலமிட

யார் கற்றுக்கொடுத்தது ?

 

பசியெடுத்தால் அறுசுவை..

பாலுணர்வுக்கு  ஒரு சுவை..

பாரமில்லா வாழ்வுக்குப் பணச்சுவை..

 

பகடையாய் உடலைப் படைத்தாய்…

பாம்பென்றும் ஏணியென்றும் படம்வரைந்து

பரமபதத்தில் ஆடவிட்டாய் !

 

ஒரு மூச்சுக் காற்றை நிறுத்திவிட்டு

உடலுடன்  உறவை நீக்கி

அழுகிவிடும் என்ற அச்சத்தில்

ஊரெல்லாம் தேரோட்டி

நடுக்காட்டில் சுட்டெரிக்க ..

ஏனிந்த அவலம் ?

யார் கேட்டது இந்த உடலை?

 

நண்பனே!

கதை அறியாமல்

நான் நடிக்கும் ..

இந்த  நாடகத்தில்

நான் கோமானா ?

அல்லது கோமாளியா?

நாடகத்தில் உன் வேடமென்ன ?

 

உடலுக்குப் பெயர்கொடுத்து

உயிரோட்டம் உள்ளவரை

உலாவ  விட்டது

நீயா அல்லது நானா ?

இந்த உயிரோட்டம் எதுவரை?

என் விருப்பமா?

அல்லது உன் விருப்பமா?

 

இந்த உடல்

உன் கட்டிடக் கலையின்

திறனுக்கு ஒரு பரிமாணமா ?

 

இதில் அழகு என்பது என்ன?

 

கண்ணுக்கும் முகத்திற்கும்

கட்டான உடலுக்கும்

கற்பனையில் அழகென்ற

பரிமாணம் ஏன் கொடுத்தாய்?

 

அழகையும் அருவருப்பையும்

எப்படிக் கற்பனை செய்தாய் ?

 

ஆயிரம் உள்ளுணர்வுகளை

அழகாகக் கோர்த்து ..

எப்படி இதயத்தின் உள்ளே வைத்தாய் ?

எதற்காக ?

 

நீ..

 

விஞ்ஞானியா?

விவேகியா?

விகடகவியா ?

 

யார் உன்னைப் படைத்தது?

உன் படைப்பில் என் பங்கு என்ன?

 

நண்பனே!! …

ஆலமரத்தடியில் அமர்ந்து

ஆனந்த தத்துவத்தை

சொல்லாமல் சொன்னவேனே !

உன் அமைதியின் பொருளென்ன ?

 

இந்த நெடிய பயணத்தில்

நிச்சயமாக…

நீ என்னோடு வருவாய்..

எனக்குத் தெரியும்…

ஆண்டுகள் தோறும்..

யுகங்கள் தோறும்…

நீயும் நானும்…

 

ஆனால்

ஏன் இந்த அமைதி?

என் கேள்விகளுக்கு

நான் எங்கே பதில் தேடுவது?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *