நான் அறிந்த சிலம்பு – 217
மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை
மலர்சபா
புகழ்மிக்க அரசன் கரிகாலன் மகள் ஆதிநந்தி.
வஞ்சி நகரத்தின் தலைவன்
அவள் கணவன் ஆட்டனத்தியைக்
காவிரி நீர் அடித்துச் சென்றது.
ஆதிமந்தி ஆறு ஓடும் வழியாகத்
தானும் ஓடிச்சென்று,
“கல்லைப்போன்ற தோள்உடையவனே!
நீ எங்கே இருக்கிறாய்?”
எனக் கூவிப் பலமுறை அரற்ற,
கடல் உடனே ஆட்டனத்தியை
அவள் முன் நிறுத்தியது.
காதலனைத் தழுவிக்கொண்டு
பொற்கொடி போல வந்த
அவளும் ஒரு பத்தினிப் பெண்.
மணல் நிறைந்த கடற்கரைச் சோலையில் தங்கி,
பொருள் ஈட்டி வரக்
கலம் ஏறிக் கடலில் சென்ற கணவன் வரும்வரை
அவன் மனைவி கல்லாய் உருமாறிக்
கரைவரும் கலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கணவன் திரும்பி வந்ததும்
கல் உருவம் நீங்கிப் பழைய உருவம் பெற்ற
அவளும் ஒரு பத்தினிப் பெண்.
தன் குழந்தைக்கு நிகரான
மாற்றாளின் குழந்தை கிணற்றில் விழுந்தது.
அபோது அம்மாற்றாள் வீட்டில் இல்லை.
அப்பழி தன்மீது வருமே என அஞ்சித்
தன் குழந்தையையும் கிணற்றில் தள்ளினாள் ஒருத்தி.
பின், தன் கற்பின் திறத்தால்
இறந்த இரு குழந்தைகளையும்
உயிருடன் கிணற்றில் இருந்து எடுத்தாள்.
வேல் போன்ற கண்களையுடைய
அவளும் ஒரு பத்தினிப் பெண்.