unnamed

மூவடி மண்கேட்க சேவடி பொற்சிலம்பு
மாவலி உச்சி மவுலியில் -தீவெடிக்க
திண்ணெனத் தாக்கும் திருவோணப் பிள்ளை
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

மூலம் -நாராயண பட்டத்திரியின் ‘’ஸ்ரீமத் நாராயணீயம்’’….!
——————————————————————————————————–

வாமனாவதாரம்….!
———————————-

யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
சக்கிர வர்த்தி சிறப்பு ….(1)

பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
ஓணத்தில் சேயாய் உதிப்பு….(2)

அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
தாவலில் நெஞ்சம் திளைத்து….(3)

தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
எச்சரித்தும் மாபலி ஏற்பு….(4)

அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
மண்டல வாயை மறைப்பு….(5)

உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
அக்கணம் வாமனன் அங்கு….(6)

ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
பாதாளம் செல்ல பலியை அழுத்திட
சேதாரம் இன்றியவன் சேர்பு….(7)

தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
மீனாமை சிம்ம மறுப்பு….(8)

ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
ஆவேச நானை அழிப்பு….(9)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *