இல்லத்தரசன்
உமா சண்முகம்
இருபத்தியோரு வயதில் அரசு வேலை கிடைத்துவிட்டால் போதும் அப்படியே ஆணி அடித்தது போல் சென்ற தலைமுறையினர் அமர்ந்து விடுவார்கள். ஓய்வு பெரும் வரை அதே ஆபீஸ்தான். நாளொரு மேனி ஆபீஸ் போவதும் பொழுதொருவண்ணம் ரேடியோ கேட்டு, டிவி பார்த்து, சினிமாவை ரசித்து, எப்போது டிஏ ஏற்றுவார்கள், என்று பிஎஃப் எடுக்கலாம், தீபாவளி போனசில் என்ன வாங்கலாம் என்று கணக்கு போட்டு… மகன் மகளுக்கு திருமணம் முடிந்ததும், கோயில் கோயிலாக ஏறி இறங்கி… இந்த தலைமுறை அப்படி இல்லை. பட்டப்படிப்பு முடிந்ததும் வேலையில் சேர்ந்து லட்சங்களை சம்பாதிப்பது, அப்படியே ஒரு பாரின் ரவுண்ட் அடிப்பது, இல்லாவிட்டால் இங்கேயே வேண்டிய பணத்தை குவிப்பது, பிறகு 35 வயதிலேயே பிரேக் எடுப்பது, விரும்பிய ஹாபியை ரசித்து செய்வது… இதுதான் இன்றைய டிரெண்ட்.
இது கம்ப்யூட்டர் யுகம். ஆகவே, இப்போதுள்ள இளைஞர்கள் பழைய கதைகளை அப்படியே நம்புவதில்லை. உண்மையைத் தோண்டிப்பார்க்கின்றனர். எது நல்லது? எது கெட்டது? என்று ஆராய்கின்றனர். ஆண், பெண் என வேறுபாடு பார்பதில்லை. நம் கண்களுக்கு விவாகரத்துகள் தான் தெரிகின்றன. ஆனால் எத்தனையோ டீன் தம்பதிகள் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக அதுவும் திருப்தியாக வாழ்கின்றனர். வீட்டில் சமையல் செய்வது முதல் ஆபீஸ் வேலை பார்ப்பது வரை எல்லாவற்றையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளும் போக்கு சாப்ட்வேர் தம்பதிகளிடம் மட்டுமல்ல அனைவரிடமுமே வளர்ந்து வருகிறது. மனைவி மேற்படிப்பு படிக்க விரும்பினால், அவருக்காக கணவன் ஒர்க் அட் ஹோம் வசதியைப் பெற்று வீட்டில் இருந்தபடியே நெட்டில் வேலை பார்க்கிறார்.
காலை எழுந்ததும் வாக்கிங் அல்லது ஜிம். ஆபீசில் வேலை முடிந்ததும் ஏதாவது ஒரு விளையாட்டு. இதுதான் லேட்டஸ்ட் யூத் டிரெண்ட். இதற்கேற்ப பெரும்பாலான கம்பெனிகள் இப்போது வேலை செய்யும் இடமாக மட்டும் அல்லாமல் ஜிம் இண்டோர்,அவுட்டோர் மைதானங்கள், கபேக்கள், மால்கள், ஏடிஎம்கள் மல்டிபிளக்ஸ்களென்று எல்லா வசதிகளையும் கொண்டுள்ளன. இது இன்றைய தலைமுறை தம்பதிகளுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. பணத்தைப் பற்றிக் கவலைப்படாத இந்த யூத் ஜோடிகள் எதற்கும் தேடிச் செல்லாமல் வேண்டியவற்றை சுலபமாக பெற்றுக்கொள்ளமுடிகிறது. மொபைல் நெட் மூலம் எந்த பொருளையும் வாங்க முடிவதால் இவர்களுக்கு நேரமும் அதிகமாக கிடைக்கிறது.
12 மணி நேரம் வரை உழைக்கின்றனர் என்று யாராவது இன்றைய தலைமுறை குறித்துச் சொன்னால் நம்பாதீர்கள்.இப்போதுள்ள டீன்கள் படு கில்லாடிகள்.தங்களின் பொறுப்புகளை தட்டிக்கழிப்பதுமில்லை ஓபி அடிப்பதும் இல்லை. அதே சமயம் விழுந்து விழுந்து வேலைப் பார்பதுமில்லை. ஆமாம் பணம் வருகிறதே என்பதற்காக தங்கள் உடலை கெடுத்துக்கொள்ளஅவர்கள் தயாரில்லை.காற்றுளள போதே தூற்றிக்கொள் என்பதற்கேற்ப முப்பதுக்குள் வீடு, பேங்க் பேலன்ஸ் என்று சேர்த்து விடுகின்றனர். பிறகு சில ஆண்டுகள் பிரேக் அல்லது வொர்க் அட் ஹோம். 40 வயதிலும் வேறு கம்பெனிக்கு மாற முடியும் அல்லது பிரேக்குக்கு பின் வேலையில் சேர முடியும் என்ற நிலை இப்போது இருக்கிறது. இதை இளசுகள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் தகுதி தெரிந்ததும் 25கே (கே என்றால் ஆயிரம்) யில் இருந்து 30 கே-க்கு தாவுகின்றனர். அப்புறம் 40கே. ஃபாரின் வாய்ப்பு வந்தால் ஒரு லகரத்தை தாண்டி எங்கோ போகின்றனர்.
எனவே இனி ஒர்க்கிங் ஒய்ப்பையும் ஹவுஸ் ஹஸ்பெண்ட்டையும் (இல்லத்தரசன்) அதிகம் பார்க்கலாம்.