அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களுடன் எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல கோடிகளுக்கு அதிபதியான செல்வந்தர் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தன்னிடம் கோடி, கோடியாகக் கொட்டிக்கிடக்கிறது எனும் இறுமாப்பில் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் சஞ்சலமில்லாமல் தனது இருப்பில் இருக்கும் பணத்தைக் கண்மூடித்தனமாகச் செலவு செய்து வருகிறார். தன் கையிருப்பிலிருக்கும் செல்வம் குறைவற்றது; ஆழியைப் போன்று அடிகாணமுடியாதது. எனவே தனது கண்மூடித்தனமான செலவீனங்கள் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தப்போவதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டு வாழ்கிறார். ஆனால் நிதி நிலைமைகள் பற்றிய நன்கு அறிவுபெற்ற அறிஞர்கள் இப்போது அவர் தனது செலவீனங்களைக் கட்டுபடுத்தி வாழாவிட்டால் விரைவில் அவரது நிதிநிலைமை சீர்செய்ய முடியாத அளவுக்கு மோசமாகிவிடும் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் அச்செல்வந்தரோ அவர்களைப் பொருட்படுத்தாமல் இதுவெல்லாம் வீண்புரளியைக் கிளப்பும் ஆதாரமற்ற செய்திகள் என்று கூறி அனைத்தையும் புறக்கணித்து நடக்கத் தலைப்படுகிறார்.

மேலே குறிப்பிட்டது ஓர் ஒப்பீட்டுக்காகக் கூறப்பட்ட ஒரு புனைவுச் சம்பவமாகும்.  ஆனால் அப்புனைவுச் சம்பவத்தின் பல நிகழ்வுகள் எமது இன்றைய வாழ்வின் நடைமுறைகளுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. இப்பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் அதிலே நடமாடும் உயிரினங்களின் உற்பத்திக்கும் காரணம் விஞ்ஞானத்தினால் ஓரளவு விளக்கப்பட்டிருக்கிறது. தனது தோற்றத்திலிருந்து பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகி இவ்வுலகம் இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

காட்டினிலே வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் இன்று நவீன வசதிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே உலகின் ஒரு பகுதியில் மனிதன் இன்னமும் அதே முன்னேற்றமில்லாத, வசதிகளற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்கப்படமுடியாத உண்மை. இந்த மாறுதல்களின் காரணம் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்குப் பல விஞ்ஞான வளர்ச்சியின் கூலியாக உலகின் இயற்கை வளங்களின் அழிவும் நிகழ்ந்திருக்கிறது என்பதும் உண்மையாகிறது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதனின் ஆக்கபூர்வமான வளர்ச்சிகள் பலவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் அதேவேளையில் வசதிகள் எனும் போர்வையில் மனிதனின் அத்தியாவசியமற்ற ஆடம்பரத் தேவைகளின் பெருக்கத்திற்கும் காரணமாக்க இருந்திருக்கின்றன, இன்னமும் இருக்கின்றன. மனித இனத்தின் இந்தத் தொடரும் தேவைகளுக்கான தேடல்கள் உலக இயக்கத்திற்கு ஒரு பெரும் காரணியாக இருப்பினும் கூட, அத்தேடல்களுக்காக அழிக்கப்படும் இயற்கைவளங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட முடியாத ஒன்று என்பதும் மனவருத்தத்திற்குரிய ஒரு பக்கவிளைவு என்பதும் உண்மையே. 

இன்றைய உலக்கின் முன்னணி நாடுகள் பல குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தமது பொருளாதாரத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்து விட்டன. இன்றைய அவர்களது தேவை அம்முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதே! ஆனால் எமது பின்புல நாடுகள் குறிப்பாக ஆசிய முன்னணி நாடுகளான இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா என்பன பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நேரமிது என்பது பொதுப்படையான கருத்தாகும். இம்முன்னேற்றம் அந்நாடுகளின் சமுதாய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியமானதாக இருப்பினும் அதற்காகக் கொடுக்கப்படும் விலை நியாயப்படுத்தப்படக்கூடியதொன்றா என்பது கேள்விக்குறியே! உகநாடுகளில் ஏறக்குறைய அனைத்தையும் பிரதிநிதிப்படுத்தும் ஜக்கிய நாடுகள் சபையின் இயற்கைவளப் பாதுகாப்புக்கான இலாகாவின் அறிக்கைகள் இன்றைய நாடுகளின் துரித முன்னேற்றத்துக்குக் கொடுக்கப்படும் இயற்கைவளங்களை உள்ளடக்கும் விலையைப் பற்றிச் சஞ்சலம் அடைகின்றன.

இக்கருத்துகளின் ஒருகோணப்பார்வையாக ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் தமது நாட்டினையும், தமது பொருளாதார வளத்தினையும் முன்னேற்றும்போது இன்று கூறப்படும் இயற்கைவளப்பாதுகாப்புப் பற்றிய ஆய்வுகள் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. இன்று தாம் முன்னேற்றமடைந்துவிட்ட நிலையில் முன்னேற்றப்பாதையில் வேகமாக முன்னேறும் கீழைத்தேச நாடுகளின் மீது இக்கட்டுப்பாடுகளை விதிப்பது எவ்வகையில் நியாயமாகும்? என்பதுவே அது.  ஒருவகையில் பார்த்தால் இக்கேள்வி நியாயமானதுவே! ஆனால் இவ்விவாதத்தினை முன்வைத்து முன்னணி ஆய்வாளர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்து நாம் எமது நாட்டின் செல்வ வளங்களைப் பெருக்குவதற்காக இயற்கை வளங்களை அழித்து எம்மையும் உள்ளடக்கிய இவ்வுலகத்தின் காலநிலைச் சீரழிவினையும் அதனால் உருவாகப் போகும் உலக அழிவுகளையும் எதிர்கொள்வது நியாயமானதா?

இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்றைய உலகப் பொருளாதார அணியில் முன்னணியில் திகழ்கின்ற அதேவேளையில் இப்பொருளாதார வளர்ச்சி இந்நாடுகளில் சமுதாயத்தின் அடிமட்டத்தில் அல்லலுறும் மக்களைச் சென்றடைகிறதா? அவர்களது வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறதா? என்பதுவே கேள்வியாகிறது. இங்கேதான் இன்றைய அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அரசியல் கண்ணோட்டத்தின் மாற்றம், அம்மாற்றம் அரசியல்வாதிகளல்லாத வியாபார மூலதாரர்களைத் தமது நாடுகளின் தேர்தல்கள் மூலம் தலைவர்களாக்குவது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகிறது. இந்த ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற ஜக்கியநாடுகள் சபையின் உலகக் காலநிலைச்சீர்கேட்டினைப் பற்றி ஆராயும் மகாநாட்டில் முதன்முறையாக ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆமாம்… முதன்முறையாக ஜக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் மனிதர்களின் இயற்கைச் சீரழிப்பினை தடுக்காவிட்டால் உலகம் அழிவை நோக்கி அவசரவேகத்தில் போவதைத் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டன. இப்புரிந்துணர்வின் அடிப்படையில் அவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர்.

உலகநாடுகள் அனைத்தும் தமது நாட்டின் காலநிலை சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் உலகின் காலநிலையைப் பாதிக்கும் வகையிலான உத்திகளைக் கையாளக்கூடாது என்றும் அதற்காக CO2 எனும் விஷவாயுவைக் கக்கும் வகையிலான இயந்திரங்களின் பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றும், இதற்கான கட்டுப்பாடு இப்போது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்குக் கொஞ்சம் தளர்வான வகையில் அமைக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வுடன்படிக்கை ஒரு இரண்டுவாரகாலத்தின் முன்னால் தான் அமுலுக்கு வந்தது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் நாடான அமெரிக்கா இவ்வுடன்படிக்கைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த டொனால்ட் ட்ரம்ப் அவர்களை தனது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இவ்வுடன்படிக்கையை நோக்கிய அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியின் நடவடிக்கையை உலகநாடுகள் மிகவும் அவதானமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.

“கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா?“ எனும் கேள்வி உள்ளத்தின் ஓரத்தில் எழலாமலில்லை.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *