அரசின் அதிரடியும், மக்களின் சிரமங்களும்

0

பவள சங்கரி

தலையங்கம்

கருப்புப்பணத்தை வெளியில் கொண்டுவரும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய உரூபாய் நோட்டுகள் 1000, 500, செல்லாது என அரசு அறிவித்து 38 நாட்கள் ஆன நிலையில், 500, 1000 உரூபாய் நோட்டுகள் உபயோகத்திற்குரிய கடைசி நாள் இன்று. அரசின் எந்தவொரு திட்டமும், அது எத்தகையதாயினும் மக்களின் முழுமையான ஆதரவில்லையென்றால் அது வெற்றியடைவதில் சாத்தியமில்லை. ஆயிரம் உரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக புழக்கத்தில் வருவதில்லை என்றாலும் ₹500 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. வங்கிகளின் அறிவிப்பின்படி இதுவரை ₹ 12.5 இலட்சம் கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கிறது. ₹ 12.5 இலட்சம் கோடி புழக்கத்திலிருந்து நீக்கிய பிறகு அதே அளவுத் தொகையை அரசு இன்னும் புழக்கத்தில் விடவில்லை.

மேலை நாடுகளில் உள்ளதுபோன்று பணம் இல்லாத பரிமாற்றங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் அன்றாட சிறு சிறு செலவுகளுக்குக்கூட வங்கி அட்டைகளைப் பயன்படுத்த முடியாது என்பது நம் இந்தியா போன்று பலதரப்பட்ட மக்களும், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழும் நாட்டில் தவிர்க்க முடியாத நிலைப்பாடு ஆகும். பணப்பரிமாற்றத்திற்குப் பதிலாக வங்கி அட்டைகள் உபயோகப்படுத்துவதற்கு மக்கள் தானாகவே முன் வரக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கோவையிலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் செல்லும் பயணச்செலவிற்கு வங்கி அட்டைகள் உபயோகப்படுத்தும்போது பரிவர்த்தனை கட்டணமாகவே சுமாராக ₹250 செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதுபோன்று அனைத்து விதமான அன்றாட செலவினங்களுக்கும் வங்கி அட்டையை உபயோகப்படுத்தினால் மாத இறுதியில் கணக்கு பார்க்கும்போது அதுவும் செலவுக் கணக்கில் கூடிவிடும். வங்கி அட்டையை பயன்படுத்துவோர் குறிப்பாக உயர் மத்திய வகுப்பினரும், மத்திய வகுப்பினருமே. அதாவது சுமாராக 60% மக்கள் மட்டுமே வங்கி அட்டையை சரளமாக பயன்படுத்தக் கூடியவர்கள். அரசு அறிவிப்பின்படி சேவை வரியை மட்டும் குறைப்பது பெரும் பயனளிக்காது. வங்கி அட்டையின் பரிமாற்றத்திற்குரிய கட்டணத்தை வெகுவாகக் குறைப்பதோ அல்லது கட்டணமில்லா சேவையை ஏற்படுத்துவதோ பயனளிக்கக் கூடும். ஒரு ஆயிரம் உரூபாயை வங்கி அட்டை மூலம் பயன்படுத்தும்போது அந்த நிறுவனங்களுக்கு சுமாராக 1 இலட்சம் உரூபாய் பெறப்படுவதாக சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு பெரு நகரங்களிலும் அனைத்து வங்கி ஏடிஎம் களும் பணம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் வங்கி ஏடிஎம் கள் மட்டும் செயல்படுகின்றன. அதுபோல ஸ்டேட் வங்கியில் மட்டும் அனைத்து நாட்களிலும் மக்களுக்கு சிறிய அளவேனும் பணம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கி வாசலிலும் நுற்றுக்கணக்கான மக்கள் பல மணி நேரம் இந்தத் தொகையைப் பெறுவதற்காக மழை, வெய்யில் பாராமல் காத்துக்கிடப்பது வேதனைக்குரிய விசயமாகும். இதைத் தவிர்க்க அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தி அந்தப் பண அட்டைகளுக்கு பணம் எடுக்கக்கூடிய அளவையும் காலத்தையும் குறிப்பிட்டு பதிவு செய்துவிட்டால் இந்தப் பிரச்சனை குறையுமல்லவா. பொது மக்கள் வங்கியிலிருந்து பெற்ற ₹2000 நோட்டுகள் மறு சுழற்சிக்கே வந்துவிட்டன என்பதும் ஆறுதலான விசயம் . அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுக்கக்கூடிய சூழல் வந்துவிட்டால் வங்கிகளிலும், ஏடிஎம் களிலும் இருக்கக்கூடிய மிகப்பெரிய கூட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். இல்லாவிட்டால் அரசு மேலும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாவதோடு இத்திட்டத்தின் வெற்றியே கேள்விக்குறியாகிவிடும்.

எந்த ஒரு திட்டமும் பிரதமராலோ, நிதி அமைச்சராலோ மட்டும் செயல்படுத்தப்படுவது இல்லை. வங்கிகளில் உள்ள உயர் அதிகாரிகள், அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோரால் செயல்படுத்தப்படுகிறது. இவர்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்பழுக்கற்றவர்களாக இருப்பதில்லை என்பதும் கண்கூடு. இவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கைகளும், அரசின் கடுமையான நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளுமே இன்றைய சூழலில் அத்தியாவசியமாகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.