இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (221)
என் இனிய அன்புள்ளங்களே!
அன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்தொரு மடலுடன் உள்ளம் திறக்கிறேன். உள்ளம் திறக்கிறேன் என்பதை விட எனது தமிழகத்து உறவுகளின் உள்ள உறுதியை நினைந்து வியக்கிறேன் என்று சொல்லுவதே பொருத்தமானது. கலதேவனின் கரங்களில் உருட்டி விளையாடப்படும் பந்தெனப் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிவரும் உறவுகளின் உள்ளத்துணிச்சல் அலாதியானது. பணத்தாள்களின் மாற்றத்தினால் வந்த நிதிநிலைத் தாக்குதலுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, அரசியல் சூறாவளியென முதலமைச்சரை இழந்து ஒரு அரசியல் தலைமை வெற்றிடத்தில் சிக்கி மீள முயற்சிக்கையில் “வர்தா” எனும் பெயரில் ஒரு பாரிய புயலின் மூலம் சென்னையை ஒரு மூன்று நாட்கள் முடக்கிய ஒரு இக்கட்டான சூழல். இத்தனையையும் தாங்கித் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றிவரும் உறவுகளின் தீரம் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.
இன்றைய உலகம் முழுவதுமே ஒரு ஸ்திரமற்ற நிலையை நோக்கி அவசர வேகத்தில் ஓடுவது போன்றதொரு நிலை தென்படுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் அதுவும் குறிப்பாகச் சிரியா நாட்டில் ஏற்படும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் அதனை நோக்கிய சர்வதேச உலகின் அலட்சிய போக்கும் உள்ளத்தின் ஓரத்தில் ஓரளவு கிலேசத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
ஒவ்வொருநாடும் தமது செயற்பாடுகளின் தாக்கம் தமது நாட்டின் மக்களின் அபிப்பிராயத்தை உள்வாங்கியே நடைமுறைப்படுத்தப் படுகிறது. ஆனால் அம்மக்களின் மனதில் உணர்வுகளை நிலைப்படுத்த அவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்வாதிகள் எத்தகைய வாதங்களை முன்வைக்கிறார்கள் என்பதும் அங்கே முக்கியமாகிறது. ஆனால் கடந்தகாலங்களில் இங்கிலாந்து அந்நியநாடுகளில் நடைப்பெற்ற போர்களில் தம்மை ஈடுபடுத்தியதின் பின்னால் உள்ள நோக்கங்களில் உள்ள சுநயலத்தின் விகிதம் எவ்வளவு எனும் விவாதம் கொடுத்த வில்லங்கங்களின் விளைவாக அடுத்தநாடுகளின் உள்நாட்டு யுத்தங்களுக்குள் தமது படைகளை ஈடுபடுத்துவதை மக்கள் முற்றாக விரும்பவில்லை.
இங்கிலாந்தின் சமீபத்திய “ப்ரெக்ஸிட்” சர்வஜன வாக்கெடுப்பின் முடிவும், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவும் எமக்கு ஒன்றைத் தெளிவாக விளக்குகின்றது. அதாவது இன்றைய மேலைதேய நாடுகள் தமது பரந்துபட்ட விசாலமான உலகளாவிய பார்வையினின்றும் விலகித் தத்தமது நாடுகளின் நலனை மட்டும் உள்ளடக்கிய உள்நோக்கிய பார்வையை முதன்மைப்படுத்தும் மனப்பாங்குடைய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுவே இன்றைய பல நாடுகளின் சமுதாயமாகக் காண்கிறோம். அதன் விளைவே இன்றைய பல இக்கட்டான சூழ்நிலைகளில் பலநாடுகள் தலையீடு செய்யாமல் ஒதுங்குவதற்கான காரணமாகின்றது. இன்றைய உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தெறிக்கும் வினாக்கள் பல விடையின்றித் தவிக்கின்றன. எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் இன்றைய சர்வதேச சமூகங்கள் பண்டைய காலத்துச் சமூகங்களை விட முற்றிலும் மாறுபட்டவை. அன்றைய சமுதாயங்களில் இன்றைய சமுதாயங்களில் காணப்படும் அளவுக்கு கலாசாரக் கலப்புக்கள் காணப்படவில்லை. வளர்ச்சியான காலகட்டங்களில் ஒரு முன்னேற்றப் பாதையாக,இக்காலாசாரக் கலப்புகள் உருவாக்கிய பல்லினக் கலாச்சாரம் ஒரு நாட்டின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்றோ ?
உலகநாடுகள் பொருளாதாரச் சிக்கல்களுக்குள் புதைந்திருக்கும் ஒரு காலகட்டம். அன்றைய வல்லின நாடுகளாகக் கருதப்பட்ட நாடுகளின் முக்கியத்துவம் குறைந்து விட்ட நிலை, அன்று வல்லின நாடுகளில் தங்கியிருந்த பல பின்புல நாடுகள் இன்று பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிலை. இத்தகைய நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் இப்பல்லினக் கலாச்சாரத்தை காரணமாகக் கொள்வதும், தமது அரசியல் கொள்கைகளின் பலவீனங்களை மறைப்பதற்காகவும்,தேர்தல்களில் தம்மை முன்னிலைப் படுத்துவதற்காகவும் இக்காரணத்தை முன்வைத்துப் பிரசாரம் செய்யும் பல சுயநலவாதிகளின் அரசியலினால் இன்று இந்த நாடுகள் பல ஒருவிதமான இனத்துவேஷ உணர்வுகளுக்குள் தம்மையறியாமல் இழுத்துச் செல்லப்படுகிறார்களோ எனும் ஒரு ஜயப்பாடு எழுகிறது.
இத்த்கைய ஒரு சூழலில் அந்நியதேசத்தை எமது நிரந்தர நாடுகளாகவும், நாம் அதன் பிரஜைகளாகவும் மாறிவிட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் காலத்தை மிகவும் அவதானிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். எமக்கும் எமது தமிழகத் தொப்புள்கொடி உறவுகளின் உறுதியும், துணிச்சலும் வேண்டும் என வேண்டிக்கொள்வோம்.
மீண்டும் அடுத்த மடலுடன்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
***
படத்துக்கு நன்றி: இந்தியா டுடே
http://indiatoday.intoday.in/story/cyclone-vardah-havoc-pictures-tamil-nadu/1/832736.html