கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
கழுகில் வரும்நேரம் காப்பு….
தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
கீதா உபதேசா காப்பு….
கண்ணே கனியமுதே கற்கண்டே கார்முகிலே
என்னே பெயர்வைத்து ஏத்தினாலும் -அண்ணே!
டபாய்த்திடுவான் கண்ணன் உபாயமொன்று கேளாய்
அபாயமென்பாய் உண்டே (அ)பயம்….
தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
கரத்தியங்கும் புல்லாங் குழல்….
குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
விழலுக்(கு) இறைக்காதீர் வாழ்வை -தழலுக்குள்
வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
சாகாத அவ்வுணர்வே சத்து….
சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
உனையுண்ணத் தூக்கும் உறவு….
உறவும் பகையும் துறவும் தெளிவும்
வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
பெறுவீடு காணப் பயன்….
முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே!
தர்கத்தைத் தாண்டல் தவம்….கிரேசி மோகன்….!