பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன், இங்கிலாந்து

முனைவர் சுபாஷிணி

உலகின் மிகப் பிரசித்தி பெற்ற பத்து அருங்காட்சியகங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்திருக்கின்ற பிரித்தானிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தினுள் நுழைந்ததும் நமக்கு ஏற்படும் முதல் எண்ணம், ஒரு நாள் போதுமா? என்பதுதான். போதாது என நம் மனம் சொன்னாலும், சில வேளைகளில் நம்மை வேறு அலுவல்கள் இழுப்பதால் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வருவது நிகழகத்தான் செய்யும். லண்டனுக்கான பயணங்களில் மூன்று வெவ்வேறு சமயங்களில் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் கண்களுக்கு அங்குள்ள பொருட்கள் தெரியாத கேள்விப்பட்டிராத செய்திகளைத்தான் சொல்கின்றன. மீண்டும் சென்றாலும் இதுவரை நான் அறிந்திராதா ஏதாவது ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்வேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த அருங்காட்சியகம் மிகப் பழமையானது. சர் ஹான்ஸ் ஸ்லோன் (Sir Hans Sloane, 1660–1753) என்னும் மருத்துவர் ஒருவரது வாழ்நாள் சேகரிப்புகளான 71,000 அரும்பொருட்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அருங்காட்சியகம். தனது மறைவுக்குப் பின்னர் தான் சேகரித்த அரும்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இவர் விரும்பினார். அதனால் அன்றைய மன்னர் 2ஆம் ஜோர்ஸ் அவர்களை அணுகி இந்த அரும்பொருட்களை இங்கிலாந்து பவுண்டு £20,000 ஐப் பெற்றுக் கொண்டு கொடுத்தார். இது 1753ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்தது. அதிகாரப்பூர்வமாக அன்று பிரித்தானிய அருங்காட்சியகம் உருவானது.

asu1
ஆரம்பத்தில் இதில் ஏராளமான நூல்கள், ஆவணங்கள், காசுகள், பட்டயங்கள், வரைபடங்கள் தொடர்பான பொருட்கள் நிறைந்திருந்தன. 1757ஆம் ஆண்டு மன்னர் 2ஆம் ஜோர்ஜ் பழைய அரச நூலகத்தை இங்கிலாந்து அரசுக்கு தன் நினைவாகப் பரிசளித்தார். 1759ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆரம்பகாலகட்டத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இன்று நுழைவுக்கட்டணம் செலுத்தித்தான் உள்ளே சென்று காண முடியும். அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டாலும் முதலாம், இரண்டாம் உலகப்போர் காலங்களில் இது மூடியே வைக்கப்பட்டிருந்தது என்பதை அறியமுடிகிறது.

18ஆம் நூற்றாண்டிலும் அதற்கடுத்த நூற்றாண்டிலும் இந்த அருங்காட்சியகம் விரிவடைந்தது. இது விரிவடைந்ததற்கு முக்கியக் காரணம் இங்கே வாங்கி குவிக்கப்பட்ட அரும்பொருட்களே.

18ஆம், 19ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் இங்கிலாந்தின் தொல்லியல் துறையினர் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். இக்காலகட்டங்களில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் பல இங்கே கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல. இங்கிலாந்து தனது காலணித்துவ ஆட்சியை விரிவாக்கியிருந்த நாடுகளிலிருந்து ஏராளமான விலைமதிப்பற்ற பொருட்களைத்தன் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. அவற்றில் சில தனியார் சேகரிப்புகளும் அடங்கும். இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் தமது காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏராளமான வரலாற்று அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சற்று பார்ப்போம்.

1826ஆம் ஆண்டு சார்ல்ஸ் மேசன் என்ற ஆங்கிலேய சுற்றுப்பயணி ஒருவர் தனது பயணத்தின் போது ஓரிடத்தில் பழமையான அரண்மனை போன்ற ஒரு அமைப்பினைக் கண்டு அது பற்றி குறிப்பெழுதி வைத்தார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 1856இல் ரயில் பாதை அமைக்கும் வேளையில் பொறியியலாளர்கள் அங்கு மேலும் பல கட்டுமான அமைப்புகள் இருப்பதைக் கண்டனர். 1920ஆம் ஆண்டில் ஆங்கிலேய தொல்லியல் அறிஞர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சியினை நிகழ்த்தத் தொடங்கினர். மறைந்து போன சிந்து சமவெளி நாகரிகம் உலகில் வெளிச்சத்திற்கு வந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டன. அந்த அகழ்வாராய்ச்சியில் ஏறக்குறைய 3,500 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முத்திரைகளை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்தின் ஆரம்ப நிலை என்ற வகையில் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் இன்று வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழ் மொழியின் திராவிட மொழிக்குடும்பத்தோடு தொடர்புடைய பண்டைய எழுத்து வடிவமாக இது இருக்கலாம் என்ற குறிப்பிடத்தக்க ஆய்வுகளும் மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பேசப்பட்டு வருகின்றன என்பதை அறிவோம். இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் இந்த அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய சதுர வடிவில் அமைந்த முத்திரைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இங்கே கண்ணாடி அலமாரியில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
asu2

எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துருவை வாசிக்க முடியாது ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ஆய்வுலக அதிசயமாகக் கிடைத்ததுதான் ரொசேட்டா கல் (Rosetta Stone). எகிப்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எழுத்து ஹீரோக்ளிப்ஸ். ஓவியங்களே எழுத்துக்கள் என்ற வகையில் இவை அமைந்திருக்கும். எத்தனையோ ஆண்டுகளாக ஹீரோக்ளிப்ஸ் எழுத்துகளை வாசிக்க முடியாமையினால் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்றே அறியமுடியாமல் ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு வடிகாலாக அமைந்தது இந்த ரொசேட்டா கல். பார்ப்பதற்கு அது ஒரு பெரும் பாறை போன்ற கல் தான். ஆனால் அதில் இருப்பதோ உலகின் மிக முக்கிய ஆவணம். இதில் உள்ள செய்தி மிக சாமானியமானதுதான் ஆனால் அதில் உள்ள எழுத்துருதான் சிறப்பு பெற்றது. ஏனெனில் மூன்று மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே கல்லில் ஒரே செய்தியை வழங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 196இல் 5ஆம் தாலமி முடிசூடிக்கொண்ட நிகழ்வை இந்தக் கல் ஹீரோக்ளிப்ஸ், எகிப்திய டெமோட்டிக் எழுத்துரு, கிரேக்கம் ஆகிய மூன்று மொழி எழுத்துருக்களில் காட்டுகின்றது. இதில் உள்ள கிரேக்க, எகிப்திய டெமோட்டிக் எழுத்துருக்களைக் கொண்டு ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை ஆய்வாளர்கள் உடனே மொழிபெயர்த்து ஒலியை அறிந்தனர். இதுவே விடைகாணாது இருந்த பல எகிப்திய ஆராய்ச்சிகளுக்கு விடையளிக்கும் மந்திரக்கோலாக அமைந்தது. இந்த ரொசேட்டா கல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.

asu3
இறந்தோர் புதைக்கப்படுவர் அல்லது எரிக்கப்படுவர். ஆனால் எகிப்திய நாகரிகமோ அரச குடும்பத்தினரையும் முக்கியஸ்தர்களையும் பாடம் செய்து மம்மியாக்கி அவர்களது உடலை நீண்ட காலம் பாதுகாக்க வழி செய்தது. அந்த வகையில் இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் கி.மு 1250ஆம் ஆண்டில் எகிப்தில் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்த கத்தேபெத் (Katebet) என்ற பெண்மணியின் உடல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 3250 ஆண்டுகள் பழமையான இந்த மனித உடல் இந்த அருங்காட்சியகத்திற்குப் புகழ்சேர்க்கும் அரும்பொருட்களில் ஒன்றாக இருக்கின்றது.

asu4

கிரேக்க சிற்பக்கலை வியக்கத்தக்கது. மேற்குலகின் எல்லா பெரிய அருங்காட்சியகங்களிலும் கிரேக்க சிற்பங்கள் இல்லாத காட்சிப்பகுதி இருக்காது என உறுதியாகச் சொல்லலாம். ஆக, பிரித்தானிய அருங்காட்சியகம் மட்டும் விதிவிலக்கா என்ன? கிரேக்கத்தில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள், சிதைக்கப்பட்ட சிலைகளின் எச்சங்கள் ஆகியவற்றோடு, கட்டப்பட்ட ஒரு கோயிலையும் அருங்காட்சியகத்தின் உள்ளே நாம் காணலாம். கி.மு.5ஆம் நூற்றாண்டில் ஏதன்ஸ் நகரின் அக்ரோபோலிஸ் பகுதியில் சிதைந்த பார்தேனோன் (Parthenon) கோயிலின் சுவர்களும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரான கிரேக்க மனிதர்களின் தத்ரூபமான வடிவங்களை இந்த சுவர் சிற்பங்கள் நமக்கு வழங்குகின்றன.

asu5

மேலே குறிப்பிட்ட அரும்பொருட்கள் மட்டுமன்றி இந்திய, சீன, கிழக்காசிய, ஐரோப்பிய, தென் அமெரிக்க அரும்பொருட்கள் ஏராளமாக இந்த அருங்காட்சியகத்திற்குள் உள்ளன. வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு சுவர்க்கலோகம் தான். ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல. பொது மக்களுக்கும் ஏராளமான தகவல்களை வழங்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இது திகழ்கின்றது. என்றென்றும் மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திகழும் ஒரு அருங்காட்சியகம் இது. நுழைவுக்கட்டணம் பெருவதற்கு நிற்கின்ற நீண்ட வரிசையைப் பார்த்தாலே நமக்கு தலைசுற்றிவிடும் என்றாலும் வரிசையில் நின்று கட்டணம் கட்டி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும்போது உலக நாகரிகத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டு வந்த மன திருப்தி நிச்சயம் ஏற்படும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *