சந்தக் கவி
எழுவதுகளில் சொல்லையும் கொடுத்து சொல்லியும் கொடுத்த
சந்தக் கவி சு.ரவி உந்தப் புனைந்தது….
—————————————————————————-
தானதான தந்ததந்த தானதான தந்ததந்த
தானதான தந்ததந்த -தனதான
”சூரனோடு சண்டைகொண்டு வீரவேலெ றிந்தஅந்த
வேலனார் அருந்துகின்ற -அமுதூறும்
பாரமான கொங்கைதங்கு மேனியோட சைந்துயிங்கு
வேகமாய்ந டந்துவந்து -அருள்வாயே
கோரமாக வந்துநின்ற மாலிநீலன் சண்டமுண்டன்
மேனியாவை யும்பிளந்த -திரிசூலி
ஆலகாலம் உண்டசம்பு மேனிபாதி தங்குகின்ற
ஆதிகாளி உன்னையென்றும் -மறவேனே
மாறனோடு தொந்திகொண்ட வேழநாய கன்வளர்ந்த
மாலனோட யன்வணங்கு -மகமாயி
வாசமாலை தங்குகின்ற வேதனார்உ டம்பணைந்த
வாலைநீலி தஞ்சைதங்கு -சிவகாமி
நேரகால மின்றியுன்னை நாளும்நாடும் அன்பர்நெஞ்சை
நாடியோடு கின்றமங்கை -மகராணி
ஆசைநாய கன்பரந்த மேனியோடி டும்குளிர்ந்த
ஆலவாய மர்ந்தஅன்னை -அபிராமி
————————————————————————————————————————
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன -தனதான
முத்துநகை மொட்டுயிதழ் பொற்சிலையை ஒத்தவுடல்
முக்கனியும் வெட்கும்மொழி -அமுதூறும்
கச்சைமுலை சிற்றிடையி ணைத்தவுடை பட்டுவுடல்
உற்றஅணி பத்துவிரல் -கணையாழி
கொத்துமலர் உற்றகுழல் அத்தனையும் புத்தியினில்
வைத்துருகும் பித்தனவன் -உமையோளே
நித்தம்குற தத்தையவள் முத்தணித னத்தையிறு
கத்தழுவு வெற்றிகுகன் -குணமாதா
சித்தமொரு மித்துவுனை பத்தியொடு முத்திபெற
வைத்திடும்ம னத்தைவுடை -அடியார்கள்
வெற்றிபல பெற்றுபிற விப்பிணிஅ கற்றிவுயர்
நற்கதியி லுற்றுபுக -ழடைவாரே
சத்திதரு மத்திமவு னத்தியிள கச்சணிமு
லைச்சிகரு ணைச்சிசிவ -சுகுமாரி
பச்சைநிற முற்றபவ ளக்கொடியி டைச்சிபதி
சொக்கருடன் கச்சியுறை -அபிராமி….கிரேசி மோகன்….!