பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் (பாகம்-4)

0

தொகுப்பு-புவனா கோவிந்த்

 

மழலைகளுக்காக

பிறந்த குழந்தைக்குப் பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்ட நாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்துக், காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக் கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக் கூடும். ஆகவே புதிய தேனையே அளவோடு உபயோகப் படுத்துவது மிகவும் ஆரோக்கியமானது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டுகிறது. ஆகவே அடிக்கடி சாப்பாட்டுக்குப்பின் ஒரு வாழைப்பழம் சாப்பிடக் கொடுங்கள்.

குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கப் படுகிறது.

தாய்ப்பாலைச் சேமித்து வெகு நேரம் வைத்திருந்து, பின் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்க முடியாத பட்சத்தில், அதற்கென்று இருக்கும் முறைப்படி உபகரணங்களை உபயோகித்து சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். அலுவலுக்குச் செல்லும் தாய்மார்களுக்கு இந்த முறை உபயோகமானது.

தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு.

குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

குழந்தைகளின் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால் வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உடல் நலக்குறைபாடுகள் 30 வயதிலேயே வந்து விடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *