-மேகலா இராமமூர்த்தி

சாலையின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளைத் தின்று நம்மைக் கழிவிரக்கம் கொள்ளவைக்கும் பசுவொன்றைப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. முருகானந்தன். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

cowonstreet

பசுவைக் கோமாதாவாய்க் கும்பிடும் நம் சமூகம், அதன் கறவை நின்றதும் அதனுடனான தம் உறவை முறித்துக்கொண்டு அதனை அடிமாடாய் ஆக்குகின்ற அவலம், பயனில்லா உயிரெதையும் தள்ளிவைப்பதும் அதன் வாழ்வுக்குக் கொள்ளிவைப்பதும் மாந்த இயல்பு என்பதை மன்பதைக்குச் சொல்லாமல் சொல்கின்றது.

சாலையில் உணவைத்தேடும் இந்த மாடு, நம் கவிஞர்களின் கற்பனைக்கும் நல்ல தீனி போட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

’செவிநுகர் கனிகளை’ நமக்குத் தரவிருக்கும் கவிகளை இனி வாழ்த்தி வரவேற்கின்றேன்!

***

தன் பாலை மட்டும் விரும்பும் மனிதன் தன்பால் அன்பின்றி நடந்துகொள்வதை உணர்வுபூர்வமாய்ப் பசு விவரிப்பதைத் தன் பாட்டில் காட்டியுள்ளார் திரு. ரா. பார்த்தசாரதி.

கோமாதா என் குலமாதா என்று சொல்வதில்தான் பெருமை
தனியே பசுவினை வீதியில் உணவுக்காக அலையவிடுவது சிறுமை
நான் பால் கொடுத்தால்தான் எனக்கு நல்ல உணவு
பாலை நிறுத்தினால் அலையவிடுவதோ நடைபாதைத் தெருவு !

வயிறுக்காக கண்டதை தின்று நான் உயிர் வாழ்கின்றேன்
என் உடம்பு பாழானாலும் ஊசி போட்டு பால் கறக்கின்றான்
தவிர, வைக்கோல் கன்றை வைத்தும் ஏமாற்றி பால் கறக்கின்றான்
ஏனோ, இன்று வரை காப்பாற்றியதற்கு நான் பாலை கொடுத்தேன்!

என் பாலிலும் தண்ணீர் கலந்து, கலப்படம் செய்து விற்கின்றான்
என் முதுமையை உணர்ந்து என்னை தெருவில் அலைய விடுகிறான்
என் கன்றுகளை சொத்தாக கொடுத்து அவனை மேம்படுத்தினேன்
என்னைச் சொத்தையாக நினைத்து அடிமாடாய் நினைக்கின்றான் !
 

நம் உயிரையும், உடலையும் வளர்ப்பது தாயும், பசுவுமே
பால் தரும்வரை அதனை தெய்வமாய் நினைக்கின்றோம்
முதிர்ந்த பசுவினை கோசாலையில் விடத் தோன்றவில்லை
தாயை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துவர மனமில்லை!

பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை
பணத்தால் ஏழை பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை
தாயாரையும் பசுவினையும் தெய்வமாகக் கருதவில்லை
ஆறறிவிற்கும் ஐந்தறிவிற்கும் இவ்வுலகில் மதிப்பில்லை!

***

”பசு பால்கொடுக்கும் என்று போதித்த நம் கல்வி, பசுவுக்கும் பசியெடுக்கும்; அது புசிக்க நல்லுணவை நாம் தரவேண்டும் என்று போதிக்கத் தவறிவிட்டதே!! கோமாதா என்று பசுவைக் கொண்டாடவும் வேண்டாம்; அடிமாடாய் (இறைச்சிக்கு) அதனைத் துண்டாடவும் வேண்டாம்” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

விதியோ?

பசு பால் கொடுக்கும்என்றுதான்
பள்ளியில் கற்றோம்.
பசுவின் பசி பற்றியும்
அதன் உணவின் ருசி பற்றியும்
பாடத்தில் இல்லை.

புல்லும், நெல்லும் விளைந்த மண்ணில்
கட்டிடங்கள் முளைத்துவிட்டன.
இந்த,
நகரப் பசுக்களுக்கு
ருசிக்க அல்ல, பசிக்குக்கூட,
எத்தனை தேடியும், பாவம்,
கழிவுகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

நெகிழியைத் தின்று கழிந்து சாக விதியோ?
கோ மாதாஎன்று போற்றுதலும் வேண்டாம்.
அடிமாடு என்று அழித்தலும் வேண்டாம்.
அது பற்றியதான
அரசியல் உரசல்களும் வேண்டாம்.

நம் போல்
ரத்தமும் சதையும் கொண்ட
இன்னொரு உயிர்.
வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.

(நெகிழி = பாலித்தீன் காகிதங்கள்)

***

”பயிர்த்தொழில் செய்து உயிர்வளர்க்க வழியின்றிப் பிழைப்புக்காகப் பட்டணம்வந்த உழவனுடன் அவன் வளர்த்த மாடும் வந்தது; புல் உணவு கிடைக்காது குப்பைகளைத் தின்று நொந்தது” என்று உளம் வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பட்டணந்தான்

கழனியில் இன்று பயிரில்லை
கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
உழவனும் இங்கே தங்கவில்லை
ஊரை விட்டே போய்விட்டான்,
பழகிய மாடும் அவனுடனே
பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே…!

***

”பட்டிக்காட்டிலேயே புல் இல்லாதபோது பட்டணத்தில் பசும்புல்லின் தலை காண்பதேது?  புல்முளைத்துப் பசு மேயும் பொற்காலம் பட்டணத்தில் வாய்த்திடுவ தெக்காலம்?” என்று ஏக்கத்தோடு வினவுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

பட்டணத்தில் புல் முளைக்காது!

கெட்டுப்
பட்டணம் போ !
பட்டி யெல்லாம் வெறும்
பாலை யானது !
ஆறெல்லாம் நீரின்றி
அழுது கொண்டி ருக்குது !
மழை யின்றிப்
பட்டியிலே புல் இல்லை !
பட்டணத்தில்
பச்சைப் புல் முளைக்குமா ?
கண்ணீர் வரவும்
தண்ணீர் இன்றி முகமும்
காய்ந்து விட்டது!
பட்டணத்தில் பட்டினிக்குப்
பஞ்சம் இல்லை!
லஞ்சம் வாங்கிய அரசினர்
லட்சாதி பதியாகிக்
கோடீஸ்வர ராகிச் சிறையில்
வாடி வதங்கித்
தேடுகிறார் தெய்வத்தை !
பால் கறந்த பசு மாடு
பட்டினியில்
தோலும் எலும்பு மானதில்
வியப்புண்டா ?
புல் முளைத்துப் பசு மேயும்
பொற்காலம்
புலர்வது எக்காலம் ?

***

”தன் உதிரத்தைப் பாலாக்கி மனிதருக்குத் தருகின்ற பசு, பெற்ற தாயினும் நனிசிறந்தது; பால் மட்டுமா தருகின்றது பசு? தன் தோலைக்கூட அல்லவா செருப்பாய்த் தருகின்றது! ஆதலால், பசு ’வதை’ தடுப்போம்; பசுவதைக் காப்போம்!” என்று கருணையோடு கழறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

பட்டணத்து மாடுகள் : மாடென்றால் செல்வம் என்று வான் மறை பேசும்!
மாடென்றால் தியாகம் என்று என் மன மொழி பேசும்!
அயராமல் உழைப்பவரை மாடென்று சொல்வதுண்டு!
அன்னைக்கு ஈடாய் , அவனியிலே பசுவன்றி யாருண்டு?
உதிரத்தை, அமுதாக்கித் குழந்தைக்குத் தருபவள் தாயன்றோ!
உதிரத்தை, பாலாக்கி, மனிதருக்குத் தருகின்ற. பசு மாடு தாய்க்கும் மேலன்றோ!
ஈசனைச் சுமப்பதும் மாடன்றோ!
நிலத்தை உழுவதும் மாடன்றோ!
தன் தோலைக் கூட செருப்பாய்த் தருவதும் மாடன்றோ!
தன்னைக் கொடுப்பதில், வாழைக்கீடு மாடன்றோ!
இத்தனைச் சிறப்புகள் இருந்தாலும் மாட்டின்
இன்றைய நிலையைப் பாருங்கள்!
வயிற்றுப் பசிக்குக் கண்டதை தின்னும்
கொடுமையை இங்கே பாருங்கள்!
காகிதம் தின்று, நமக்குப் பாலைத் தரும்
அவலத்தை இங்கே பாருங்கள்!
பசு வதை சட்டம். உண்மையாய் வரட்டும்!
பசியால் மாடுகள் பரிதவித்துப் போகாமல்!
உணவு தரும் உணர்வு, பட்டணத்து மனிதருக்கு ,உடனடியாய் வரட்டும்!
அன்ன தானம் மனிதருக்கு மட்டுமன்றி,
உணவு தானம் மாட்டிற்கும் நடக்கட்டும்!

***

”பண்ணை நிலமெல்லாம் பங்களாக்கள் ஆனது; பசுஞ்சோலைகளெல்லாம் தார்ச்சாலைகளாய்ப் போனது. எனவே, புல்உணவு கிடைக்காமல் செல்வழியினிலே கிடைப்பதையே உணவாகப் புசிக்கின்றோம். சொல்லெடுத்துப் பாப்புனையும் பாவலரே! என் பசி போக்கும் வழியொன்று புகலுங்களேன்!” எனும் ஆவின் குரலைத் தன் பாவில் பதிவுசெய்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

ஆவின் குரல்..!

நஞ்சையும் புஞ்சையும் நான்கு போகமும்..
……..
நலமாய் விளைந்திட்ட நன்னிலம் தான்!
தஞ்சைத் தரணியென்று போற்றிப் புகழ்ந்த
……..
தாரணி அறிந்த நெற்களஞ்சிய நகரம்தான்!
வஞ்சகர் கைக் குளிப்போது அடைபட்டே..
……..
வயல் நிலமெல்லாம் பாழ்பட்டுப் போனது!
தஞ்சமடைந்து தாழ்கிறோம் தரணியிலே இன்று..
……..
பஞ்ச முண்டானதால்பச்சைப் புல்லுக்கே.!

விண்ணை முட்டும் வானுயர் கோபுரம்தனை..
……..
வியந்து மனிதர்கள் மட்டுமே நோக்கமுடியும்.!
பண்ணை நிலமுழுதும் பங்களாக்கள் ஆனது..
……..
பச்சை வயல்களெலாம் சாலைகள் ஆனதே.!
கண்ணை முட்டும் கண்ணீர்க் காட்சியாக..
……..
கழினியும் காடுமெங்கே காணாமல் போனது?!
மண்மறைக்கும் தார்ச்சாலை யெங்கும் குப்பை..
……..
மலையால் பச்சைப் புல்லுக்குக் கூடப்பஞ்சம்.!

ஆறில்லை என்றாகிப் போனது எங்கும்..
……..
அனைத்தும் அறிவியல் ஆன பின்புதான்.!
சோறில்லை என்றாகிப் போனது எங்கும்..
……..
நீரில்லை நிலத்தடியில் என்றாகிப் போனதாலே.!
பாரிலிலை இதுபோல் கொடுமையெனப்பச்சை
……..
பசேலென இருந்த வயல்வெளி யழித்தசெயல்.!
ஊரிலில்லை பசுமைப் புல்வெளி இனிவாயில்லா..
……..
உயிர்களுக்குப் பசித்தால் குப்பைதான் உணவு.!

கோவின் ஆட்சியில் ஆவுக்கும் நிலத்துக்கும்..
……..
கோவிலுக்கும்குந்தக மென்றுமில்லை மகனே.!
நாவினை யடக்கி நாங்கள் இளைத்து விட்டோம்..
……..
நற்செயலாகப் பாலைக் கொடுத்தே பழகிவந்தோம்.!
ஆவின் பசிக்கு அறுகம்புல்லாவது கிடைக்குமா.?
……..
அம்மாவெனும் குரலில்..ஆவின்குரல் கேட்கிறதா.?
பாவின் துணையொடு புலவர்களே நீர்..ஆவின்..
……..
பசிக்கொரு உபாயமுந்தன் பாட்டிலே கூறுவீரே..!

***

மாடு படும்பாட்டை உள்ளம்தொடும் வரிகளால் பாட்டுக்களாக்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் கவனத்திற்கு…

ஒரு பசுவின் சுய சரிதை

‘கோ’ என்றால் குலமகளாகக்
கொண்டாடிய தேசம் ஒன்றில்
கன்றுக்குக் குட்டியாக நானும்
அன்றொரு நாள் அவதரித்தேன்!

பச்சைப்பசேல் கழனித் தோட்டம்
படுத்துறங்க மாட்டுத் தொழுவம்
பழகித் திரிய அத்துணைச் சொந்தம்
பண்ணை வீட்டில் நாளும் இன்பம்!

வளமை எல்லாம் வானில் மறைய
வந்ததன்றோ வறட்சியும் பஞ்சம்
நதி நீரைத் தடுத்க ஓர் கூட்டம்
எரிவாயு எடுக்க ஓர் கூட்டம்

அவரவர் செயும் அரசியல் சூதில்
பகடைக் காயானதினாலே
பல தூரம் நடந்து நடந்து
அபலை நான் நகரம் சேர்ந்தேன்

சிறு புல்லும் தென்பட வில்லை
சீண்டுபவர் எவரும் இல்லை
பெரு நகரின் பேருந்துக் கிடையில்
நடப்பதுவே தினம் ஒரு தொல்லை

அடைக்கலம் புகத் தொழுவமும் இல்லை
அணைத்துக் கொள்ள உழவனும் இல்லை
எஞ்சிய தென்றன் உணவாய் இன்று
எச்சில் குப்பை கழிவுகள் மட்டும்!!

தன் பழைய வளமான வாழ்வையும், இன்றைய அவல வாழ்வையும் அசைபோட்டுப் பார்க்கும் பசுவினை நம் கண்முன் நிறுத்தி நம்மைக் கலங்கச் செய்திருக்கும் கவிஞர் திருமிகு. இராஜலட்சுமி சுப்பிரமணியத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

0 thoughts on “படக்கவிதைப் போட்டி 123-இன் முடிவுகள்

  1. “ஒரு பசுவின் சுயசரிதை” – என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை
    இவ்வாரத்தின் “சிறந்த கவிதை”- யாக தேர்ந்தெடுத்தமைக்காக நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

    இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்வில் சற்று இளைப்பாற்றும் தருணங்களாய் திகழ்வன நான் எழுதும் தருணங்கள்தான். இது போன்ற அங்கீகாரங்கள் என் எழுத்தாற்றலை மேலும் தூண்டுபவையாக உள்ளன.

    என் போல தமிழார்வலர்களுக்கு விருந்தளிக்கும் களமாக இந்த “வல்லமை” இதழினை நடத்தும் அதன் ஆசிரியருக்கும் அதன் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி. வாழ்க உங்கள் பணி…. வளர்க உங்கள் தமிழ் தொண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *