இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (248)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

நானிங்கு நலம், நீங்களனைவரும் நலமா ? எனும் கேள்வியுடன் எனது இவ்வார மடலுக்குள் என் எண்ணங்களைப் புதைக்கிறேன். தனிமனித வாழ்வாகட்டும், சமுதாயமாகட்டும், நாடாகட்டும் சரித்திரம் என்பது கடந்து போன காலங்களில் நடந்து போன உண்மை நிகழ்வுகளின் தொகுப்பேயாகும். அச்சரித்திர உண்மைகளுடன் நாம் ஒத்துப் போகிறோமோ இல்லையோ அவை உண்மைகள் எனும் நிலைப்பாட்டில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் உலக மக்கள் இருக்கிறார்கள். சில இனிப்பவையாகவும், வேறு சில எமக்குக் கசப்பானவையாகவும் இருக்கலாம். அதற்காகக் கசப்பானவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பெருமையானவைகளைப் பற்றிப் பேசிப் பேசி மார் தட்டிக் கொள்வது உண்மைக்குப் புறம்பானது.

இந்த வகையிலே எனது இந்த 42 வருட இங்கிலாந்து அனுபவத்தில் இருந்து நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பலவற்றில் இச்சரித்திரம் பற்றியவை மிகவும் முக்கியமானவை. சரித்திர நிகழ்வுகள் அவை தமக்கு எவ்வளவு கசப்பூட்டுபவையாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் இங்கிலாந்து மக்களின் செயற்பாடுகள் எனது அறிவுக்கு தீனி போட்டிருக்கின்றன. நான் இப்போது ஓய்வூதியம் பெற்று வருடங்கள் மூன்றாகப் போகிறது. எனது மனைவி இன்னமும் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். நாம் வாழும் சறே (Surrey) எனும் பகுதியில் அமைந்திருந்த அவளது கம்பெனி சுமார் எட்டு வருடங்களின் முன்னால் இங்கிலாந்தின் வடபகுதியான ரக்பி(Rugby) எனும் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது ஆபிஸின் பலரும் கட்டாய ஓய்வில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது எனது மனைவிக்கு முக்கியமான நிர்வாகப் பொறுப்பையளித்து அவ்வடபகுதி ஆபிஸைத் தளமாகக் கொண்டு இயங்குமாறு பணித்தார்கள். அதன் நிமித்தம் வாரத்தில் இருநாட்கள் எமது இல்லத்திலிருந்து சுமார் 120 மைல் தொலைவிலுள்ள அவளது ஆபிஸுக்குச் சென்று பணிபுரிவாள். அப்போது ஓரிரவு அருகேயிருக்கும் ஹோட்டலில் அவளது ஆபிஸ் அவளுக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

சரி எதற்காகச் சக்தியின் இந்த முன்விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா? அவசரப்படாதீர்கள் விஷயத்துக்கு வருக்கிறேன்.

sakthi1அப்படியாக என் மனைவி தன்னுடைய ஆபிஸுக்கு வரும் வேளைகளில் சிலசமயங்களில் அவளுடன் இணைந்து நானும் அங்கே செல்வதுண்டு. அப்படியான ஒரு பொழுதுதான் நேற்றைய பொழுது. காலையில் எமது இல்லத்திலிருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரங்களின் பின்னால் மனைவியை ஆபிஸில் இறக்கி விட்டு ஓட்டலை வந்தடைந்தேன். பின்பு இரவு உணவு உண்பதற்காக இருவரும் அருகிருந்த “டன்சேர்ச்(Dunchurch)” எனும் சிறிய கிராமத்திலிருந்த உணவு விடுதிக்குச் சென்றோம். இந்தக் கிராமத்திற்கு முன்பும் சில தடவைகள் எனது மனைவியுடன் வந்திருக்கிறேன். மிகவும் அமைதியான ஓர் இடம். இக்கிராமம் மிகவும் சிறிய கிராமம்; இரண்டு மூன்று உணவகங்கள், ஒரு சிறிய வாசகசாலை, கிராமங்களுக்கேயுரிய தேவாலயமென ஓர் ஆங்கிலக் கிராமத்தை அடையாளைப் படுத்தும் அம்சங்கள் அமைந்திருந்தன. மையத்திலே அழகாக “விலேஜ் கிறீன் (Village Green)” அதாவது கிராமத்துப்பச்சை எனப்படும் அழகிய பச்சை புற்தரை அமைந்திருந்தது.

இத்தகைய அழகிய, அமைதியான ஆங்கிலக் கிராமம் தன்னுள் ஒரு முக்கிய சரித்திர நிகழ்வின் அங்கமொன்றை உள்ளடக்கியுள்ளது என்று கேள்வியுற்றதும் நான் ஆச்சரியப்பட்டேன். அது என்ன என்கிறீர்களா?

அது 1605ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை “கிங் ஜேம்ஸ்sakthi2 1” எனும் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிவுற்ற “புரட்டஸ்டண்ட்( Protestant) “ மதத்தைச் சேர்ந்த அரசன் ஆண்டு கொண்டிருந்த காலம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சில தீவிர கத்தோலிக்கர்கள் இந்த அரசனை வீழ்த்தி அடுத்த முடிசூட்டும் தகுதிக்கான “எலிஸபெத்” எனும் இளவரசியை இராணியாக்குவதற்கு முயற்சித்தார்கள். அதற்கான திட்டத்தில் அவர்கள் இங்கிலாந்தின் யோக் நகரைச் சேர்ந்த Guy Fawkes என்பவனைத் தேர்ந்தெடுத்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவன் தனது தாய் மறுமணம் செய்து கொண்ட கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவனால் தீவிர கத்தோலிக்க மதப்பற்றுடையவனாக வளர்க்கப்பட்டான். தனது வாலிபப் பருவத்தில் ஐரோப்பா சென்று அங்கே ஸ்பானிய கத்தோலிக்க படையில் இணைந்து எண்பதாண்டு யுத்தம் எனும் பெரும் யுத்தத்தில் போரிட்டு விட்டுப் பின் இங்கிலாந்து திரும்பியிருந்தான்.

அவர்களது திட்டத்தின்படி இங்கிலாந்து பாராளுமன்றத்தை வெடிமருந்துகளைக் கொண்டு தகர்ப்பதாகும். திட்டப்படி பாராளுமன்றத்துக்கு கீழுள்ள கட்டிடத்தில் வெடிமருந்துகளுடன் Guy Fawkes முதல் நாளே தங்கியிருப்பது என்றும் சரியான நேரத்தில் வெடிமருந்துகளைப் பற்ற வைத்து பாராளுமன்றத்தை தகர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் அவனது திட்டம் இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்து அவன் வெடிமருந்துகளுடன் கைதாக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டான். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவனுக்குத் தூக்கு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக அவன் மாடிக்கட்டத்திலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான். அதுவே இந்நாள்வரை இங்கிலாந்து முழுவதும் Guy Fawkes day நவம்பர் மாதம் 5ஆம் திகதியொட்டி வரும் சனிக்கிழமை ஒன்றில் வாணவேடிக்கைகள் நடத்திக் கொண்டாடப் படுகின்றது.

சரி அதற்கும் இனி போன டன்சேர்ச் எனும் கிராமத்துக்கும் என்ன தொடர்பு ? கேள்வி எழுகிறது அல்லவா?

இந்த டன்சேர்ச் கிராமத்தில் பல விடுதிகள் இருக்கின்றன. அந்நாளில் இங்கிலாந்தின் வடக்கிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் தபால் கொண்டு செல்லும் குதிரை வண்டிகள், மக்கள் பிரயாணம் செய்யும் குதிரை வண்டிகள் அனைத்தும் இவ்விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்துப் பிரயாணம் செய்வது வழக்கமாம். இத்தகைய விடுதி ஒன்றிலேயே 1605ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ௸ Guy Fawkes இன் முயற்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக அவனுடன் சேர்ந்த சதிக்கும்பல் தங்கிருந்தார்கள். அந்த விடுதி இன்றும் Guy Fawkes House என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது அவனது முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்தின் சரித்திரமே மாற்றியமைக்கப்பட்டிருக்கும். இந்த விடுதியில் தங்கிய பல பிரபலங்களில் இங்கிலாந்தின் பழைய மகாராணி விக்டோரியாவும் அடங்குகிறார். இத்தகைய ஒரு சிறிய அழகிய கிராமம் தன்னுள் இத்தனை பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் ஓர் அம்சமாகத் திகழ்ந்த உண்மையைப் புதைத்து வைத்துள்ளது என்று எண்ணும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

அது சரி பயங்கரவாதிகள் எல்லோருக்கும் முன்னோடிகள் இவர்கள் தானோ ?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.