க. பாலசுப்பிரமணியன்

திருமந்திரத்தில் ஒரு மந்திரம்

திருமூலர்-1

திருமந்திரம் நமக்குக் கிடைத்த ஒரு உன்னதமான  நூல். இதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகளின் சிந்தனையும் பயிற்சியும் தேவை. இருப்பினும் அதில் மேலோங்கி நிற்கும் சில கருத்துக்கள் நம்முடைய தற்போதைய சிந்தனைக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. உதாரணமாக இன்றய சமுதாயத்தில் மனிதர்களின் தன்னிச்சையான போக்கும் சுயநலத்தை மட்டும் வளர்க்கும் சிந்தனைகளும் சமுதாயத்தின் அடிப்படைகளை அரித்துக்கொண்டிருக்கின்றன. “நான்” “எனது” “தனது” என்ற மாயையினால் உந்தப்பட்ட பாச உணர்வுகள் உண்மை உறவுகளையும் இறைவன்பால் இருக்கின்ற அன்பையும் விலக்கி மனிதர்களைத் தனிமரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆசைகளின்வலையில் சிக்கிக்கொண்ட நாம் நம்மை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றோம். சிறிய ஆசைகள் கூட நம்மைக் கட்டிப்போட்டு வாழ்க்கையின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள முடியாமல் தடுத்துவிடுகின்றன.

இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகின்றது.

ஒரு அரசன் ஒரு நாள் தன்னுடைய மந்திரியை அழைத்து “நம்முடைய நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்களா? யாருக்காவது தேவைகள் ஏதாவது இருக்கின்றதா?” என்று கேட்டான்  அதற்கு பதிலளிக்கும் வகையில் “அரசே, நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். யாரும் ஏழ்மையிலோ பசியிலோ வாடவில்லை.” என்றுரைத்தார்.

மந்திரியின் கூற்றின் உண்மையைக் கண்டறிவதற்காக அன்றிரவு அரசர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்தார். அவ்வமயம் நள்ளிரவில் ஒரு இளைஞன் வேகமாக ஓடுவதைக் கண்டு அவனை நிறுத்தி :”நண்பா, இந்த நள்ளிரவில் நீ எங்கே ஓடிக்கொண்டிருக்கின்றாய்?” எனக் கேட்டார்.

அவனோ “நண்பரே. நான் ஒரு தொழிலாளி. இன்று மதியம் கோட்டையின் கதவின் அருகில் மன்னைத் தோண்டிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தங்கக் காசு கிடைத்தது. நல்ல வேளை, யாரும் அதை பார்க்கவில்லை. அதை நான் அந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டேன். அதை எடுக்கத்தான் போய்க்கொண்டு இருக்கின்றேன். அந்தக் காசு எனக்கு பல நாள்களுக்கு உணவு வாங்க உதவியாக இருக்கும்” என்றான்.

அவன் நிலையை உணர்ந்த அரசரோ ‘ நண்பா, ஒரு காசுக்காக நீ இவ்வளவு துன்பப்படுகின்றாயே. நான் ஒரு செல்வந்தன். உனக்கு நூறு தங்கக் காசுகள் தருகின்றேன். நீ திரும்பிச் சென்று நன்கு உறங்கு.” என்கிறார்.

பதிலுக்கு அவனோ “மிக்க நன்றி. நண்பரே. ஆனால் நீங்கள் கொடுக்கும் பணம் தீர்ந்தபின் இந்தக் காசை தேடி நான் வரும்பொழுது இது இங்கு இருக்குமா என்று சொல்வதற்கில்லை. எனவே அதையும் எடுத்து வந்து விடுகின்றேன். பின் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்கின்றேன். ” என்று கூறினான்அரசர் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தர நினைத்த [பணத்தை உயர்த்தியும் அந்த ஒரு தங்கள் காசின் மீது அவனது பற்று குறைவதாக இல்லை. மனம் நொந்து போன அரசர் கடைசியில் தனது உண்மை வடிவத்தை வெளிப்படுத்தி “நான் இந்த நாட்டு அரசன். எவ்வாறாவது உன் மனத்தை மற்ற நினைக்கின்றேன். ஆகவே இந்த நாட்டின் பாதிப் பகுதியை உனக்குத் தருவதாக முடிவு செய்து விட்டேன்.” என்று சொல்ல அந்தத் தொழிலாளியோ ” அரசே, என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். தங்களுடைய பரந்த மனதிற்கு என் நன்றி. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் கொடுக்கும் பாதி அந்தக் கோட்டையின் கதவு உள்ள பகுதியாக இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும். நான் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொள்ளலாம்.” என்றான்.

நம்மில் பலரும் இது போலத்தான்… சிறிய சிறிய ஆசைகளுக்காக இறைவனின் பெரும் கருணையை இழந்து விடுகின்றோம் நமது ஆசைகளே நமக்கு வினையாக அமைகின்றன.

இதிலிருந்து நாம் எப்படி மீளப்போகின்றோம்  பாசத்தை அறுக்க திருமந்திரம் காட்டிய வழியை விட மற்றொன்று சிறப்பாக அமைய முடியாது.

இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்

ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தமாமே

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற கூற்றிற்கேற்ப தன்னுடைய ஒரே பாடலிலே மொத்த நூலின் கருத்தை முன்வைத்துள்ளார் திருமூலர்.

ஆகவே மாயையின் வலைக்குள் சிக்கி ஆசைகளால் சூழப்பட்டு செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வாழக்கையை வாழும்போது நாம் இன்ப துன்பங்களுக்கு இரையாகின்றோம்.  இந்த மாயையிலிருந்து விலகி தெளிவு பெற்றால் வாழ்க்கையின் முடிவை அமைதியுடனும் மகிழ்வுடன் சந்திக்க நாம் தயாராகி விடுகின்றோம்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்.

தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே

திருமந்திரம் காட்டும் இந்த வழிகள் நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு நல்லதொரு பாடமாக அமைந்துள்ளது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *