-செண்பக ஜெகதீசன் 

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். (திருக்குறள் -166: அழுக்காறாமை)

புதுக் கவிதையில்…

பொருள் கொடுத்துப்
பிறருக்குதவுதல்
பெருங்குணம்…

கொடுப்பவனைப் பார்த்து
பொறாமைப்படுபவனின் குடும்பம்
உண்ணவும் உடுக்கவும் ஏதுமின்றிக்
கெட்டழியும்…! 

குறும்பாவில்…

அடுத்தவர்க்குக் கொடுத்துதவுவோன் மீது
அழுக்காறு கொள்வோன் குடும்பம் கெட்டழியும்,
உண்ண உடுக்க ஏதுமின்றி…! 

மரபுக் கவிதையில்…

தன்னிட முள்ள பொருளதனைத்
     -தானே தந்து பிறர்க்குதவும்
உன்னத குணமது உடையோரை
     -உரிய முறையில் போற்றாமல்,
அன்னார் மீதே பொறாமைகொளும்
     -அசுர குணமது கொண்டார்தம்
அன்புடைச் சுற்றம் அழிந்துகெடும்
     -அன்னம் ஆடை கிடைக்காமலே…! 

லிமரைக்கூ..

பொறாமை கொள்வான் பொருள்கொடுப்போன் மீதே,
போயழிவான் சுற்றமொடு ஊணுடையின்றி யென்பதால்
பொறாமை கொள்ளுதலென்பது மாபெருந் தீதே…! 

கிராமிய பாணியில்…

கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
குடியழிக்கும் கொணமான பொறாமகொள்ளாத…

அடுத்தவனுக்குக் குடுத்தொதவுற
அன்பான மனுசன்மேல பொறாமகொள்ளுறவன்
அழிஞ்சிபோவான்,

அன்னந்தண்ணி யில்லாம உடுக்கத்துணி யில்லாம
அவந்தான் குடும்பத்தோட அழிஞ்சிபோவான்…

அதால,

கொள்ளாத கொள்ளாத பொறாமகொள்ளாத
குடியழிக்கும் கொணமான பொறாமகொள்ளாத…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.