-மேகலா இராமமூர்த்தி

bangles

தளிர்க்கர மழலைக்குத் தகவோடு வளையலிடும் பெரியவரையும், அணிஅணியாய்க் கண்ணைப் பறிக்கும் வளையல்களையும் கச்சிதமாய்ப் புகைப்படமெடுத்து வந்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், கவினான இந்தக் காட்சியைக் கவிதைப் போட்டிக்குத் தேர்தெடுத்துத் தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள்!

பெண்களின் எழிலைப் பேரெழிலாக மாற்றும் மந்திரவித்தை கற்றவை  வளையல்கள். விலையுயர்ந்த பொன் வளையல்களைவிட விலைமலிவான கண்ணாடி வளையல்களும் இரப்பர் வளையல்களும் கூடுதல் பொலிவைக் கரங்களுக்குத் தரவல்லவை.

பார்த்தவுடனேயே மனத்தில் வண்ண வண்ணக் கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் சிறப்பான புகைப்படம்! எனவே கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தயாராகியிருப்பார்கள் என எண்ணுகிறேன். 

இதோ போட்டியை ஆரம்பித்துவிடுவோம்!

*****

”ஆடம்பர விளக்கொளியில் மின்னும் பெருங்கடைகளில் வாங்கியணியும் வளையல்களைவிடக் கீற்றுவேய்ந்த எளிய திருவிழாக் கடைகளில் கிடைக்கும் வளையல்களின் அழகே அழகு!” என உளம் பூரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

எளிமை அழகு…

அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
அழகு விளக்குகள் ஒளியினிலே
எடுத்துக் கொடுக்கும் காப்புகளின்
எண்ணிலா வகையிலே இன்பமில்லை,
தடுத்து வைத்தே கீத்துகட்டிய
திருவிழா வளையல் கடையினிலே
எடுத்துப் போட்டே அழகுபார்க்கும்
எளிய வளையலுக் கீடிலையே…!

***** 

வளையோசையின் சிறப்பை மெட்டியோசையோடு சேர்த்துக்கட்டித் தன் பாட்டில் ஒலிக்கவிட்டிருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

நன்மனத்துடன் வளையல்களை அணிவிக்கக் கையை நீட்டச்சொன்னார்
கைகளின் அளவிற்குக்கேற்ப வளையலைப் பெண்ணிற்கு அணிவித்தார்
என்றுமே வண்ணக் கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு
இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!
வண்ண வளையல்களைக் கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு
அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு
அந்த வளையோசையுடன் பிறர்க்குக் காண்பிப்பதில் பெருமையுண்டு
வளையோசையும், மெட்டிஓசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!
ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம் மகிழ்விக்கும்
வளையோசையும், மெட்டி ஓசையுமே ஈர்க்கும் தன்மை அதிகம்
பெண் வளையல்களை அணிவதன் காரணம்தான் ஏனோ?
கணவன் தன்னை வளைய வளைய வருவதற்குத்தானோ?
தாய்மையின் சிறப்பை வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே
வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற தாயும் மகிழ்ச்சி அடைந்ததே
தானும் அணிந்து, பிறர்க்கும் அவை வெகுமதியாய்க் கொடுக்கப்படுதே
வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே!

 *****

”பெண்மணிகள் அணியும் அழகான அணிகலன் இந்த வளையல்; வாழ்ந்தால் இணையாகவே வாழவேண்டும் எனும் இணையற்ற பாடம் சொல்லும் அணியிது! மெட்டியும் கொலுசும் பயன்பாடின்றிப் பெட்டிக்குள் போனதுபோல் வளையலும் கைநழுவிப்போகும் காலம் வந்திடுமோ?” என்று கவலுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

வளையலோ வளையல்..!
நலமுடன் வாழமஞ்சள் குங்கும் வரிசையில்..

நற்பொருளாய் நடுவே வளையலும் உண்டாம்.!

மணிக்கட்டின் மேலே அழகு சேர்க்கும்..பெண்
மணிகள் மட்டுமே அணியும் அணிகலனாம்.!

வட்டமாய் அமைந்ததால் அது வளையலாகும்
எட்டவிரட்டும் சக்தியால் எதிர்வினை யகலும்.!

காதல் வலையில் மயங்கும் காளையர்கள்தன்
காதலிக்குப் பரிசாக இதைக் கொடுப்பதுண்டு.!

கலைநயம் கொண்ட தங்கம்வெள்ளி முத்தென
வளையலும் வரலாறு பல சொல்லுமணிகலன்.!

வளைந்து வருகின்ற வயிற்றின் ரகசியத்தை
வளையல்கள் சேர்ந்து வருமுன் அறிவிக்கும்.!

வகை வகையாய்ச் செய்தபல வண்ணங்களில்
வளைகாப்பு எனும்பெயரில் ஓரிடத்தில் கூடும்.!

வளையலின் உரசலில் எழும் மெல்லிசையை
வயிற்றுளே இருக்கும் குழந்தை கேட்டுமகிழும்.!

வாழ்ந்தால் ஜோடியாகத்தான் வாழ முடியுமென
வாழ்வியல் பாடம் சொல்லும் அற்புதணிகலன்.!

பத்திரமாக அணியும் வளையலுக்குக் புகழான
உத்திரப்பிரதேச மாநிலத்தை உலகம் அறியும்.!

அன்னமிடும் கையில் வளையலிருக்க வேணும்
சொன்னது சாஸ்திரம்தான் யார் கேட்கிறார்கள்.?

மெட்டியும் கொலுசும் காணோம்..வளையலும்
எட்டியே தூரமாகக் கைநழுவிப் போய்விடுமோ.!

*****

ஆகா…எத்தனை வண்ண வண்ண வளையல்கள்! நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்! மாலைச்சூரியன்போல் மஞ்சள் வளையல்கள்! என வியக்கும் திரு. பழ.செல்வமாணிக்கம், வளையல்கள் பேசும் வன்னமொழி (வன்னம் – அழகு) கேளுங்கள்! வளத்தோடு வாழுங்கள்! என்று வாழ்த்துகிறார்.

வண்ண வண்ண வளையல்கள்:

வளையல் வியாபாரி வந்து விட்டார் வாருங்கள்!
 வண்ண வண்ண வளையல்கள் இங்கே பாருங்கள்!
சின்னக் கை பிடித்து வளையல் மாட்டுகின்ற அழகைப்
பாருங்கள்!
நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்!
கடலின் நிறம் கொண்ட ஊதா வளையல்கள்!
கார் மேக நிறம் கொண்ட கறுப்பு வளையல்கள்!
மாலைச் சூரியன் போல் மஞ்சள் வளையல்கள்!
வானவில் நிறமுள்ள வண்ண வண்ண வளையல்கள்!
பிள்ளை பிறந்தவுடன் கறுப்பு வளையல்கள்!
பிள்ளளை கருவில் வளர்கையில் சீமந்த வளையல்கள்!
ஆடிப் பூரத்தில் அம்மனுக்கும் வளையல்கள்!
ஆதி முதல் அந்தம் வரை கூட வரும் வளையல்கள்!
ஒரு முறை வளையலை அணிந்து பாருங்கள்!
வளையல்கள் பேசுகின்ற அழகு மொழி கேளுங்கள்!
வளை நிறை கை தரும் வளத்தோடு வாழுங்கள்!

***** 

கிராமத்துத் திருவிழாவில், மக்கள் கூடிவாழும் ஒருவிழாவில், வண்ண வளையல்களை எண்ணம்போல் அணிந்துகொண்டு சுற்றிவரும் கிராமத்து மின்னலைப் பிடித்து நம்முன் நிறுத்துகிறார் திருமிகு மா. பத்ம பிரியா.

கிராமத்து மின்னல் இவள்
கிராமத்து திருவிழாவாம்
கூடி வழும் ஒருவிழாவாம்
பெரியவர் மகிழ்வுடனே
சிறியவர் மகிழ்வு தான் சிந்தை மயக்குதடி
பல்லாங்குழியாடி பாண்டி விளையாடி
அல்லியிதழ் பறித்தாடி
ஆலவிழுதுகளில் குதித்தாடி
கூட்டாஞ்சோறு கதைபேசி
குதூகலிக்கும் பிள்ளை மனம்
பெண்ணவளின் கிள்ளைமொழி
பேதமையைச் சுட்டுதடி

கோயில் திருவிழாவில்
கோதையவள் ஒய்யாரம்
கோயில் சிலை ஊர்வலமாய்
வீதியெல்லாம் சுற்றிவர
கடை கடையாய் வலம் வரும்
கன்னியவள் விழிகளிலே ஆனந்தம் பரவுமடி
வண்ண வண்ண வளையல்களை
வளைக்கரத்தில் அணிந்து கொண்டு
விருந்தினர் கைப்பிடித்து
விருந்திடுவாள் விந்தை மகள்
பரிமாறும் அழகினிலே
பந்தபாசம் மனம் நாடுமடி
பூலோகம் சுற்றினாலும்
பேரின்பம் கிட்டாது
கண்டுகொண்டேன் கிராமத்தில்
இயற்கையெனும் தாய்மடி.

***** 

வண்ண வளையல்கள் கிறங்கவைக்கும் கவிதைகளை நமக்குப் பரிசாய்ப் பெற்றுத் தந்துள்ளன. கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்! 

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து…

வண்ண வண்ண வளையல்களை
வகைவகையாய் அடுக்கி வைத்து
பெண்ணவளின் கைப்பிடித்து யாவாரி
அண்ண அண்ண நோகுதென்று
அவள் இழுத்தும் போகுதென்று
இன்னுமின்னும் போடுகிறான் யாவாரி

அறியாப் பெண் அவள் கேட்க அதையே சாக்காய் வைத்து
அடுக்கடுக்காய் போடுகையில் யாவாரி – அட
புரியாமல் போடுறியே போதுமினி யென்று தந்தை
பொக்கட்டைப் பார்த்துரைப்பான் தடுமாறி –

‘காப்புக் காப்புக்காப்பாய் எடுத்து அவள்
கையினிலே மாட்டுகிறாய்
சேப்புக் காலியாகுதடா தம்பி – ஊர்போய்
சேர்ந்திடவும் காசுவேணும் தம்பி
ஆப்பிழுத்த குரங்கானேன்
அவளையிங்கு கூட்டிவந்து
கூப்புகிறேன் கையுனக்குத் தம்பி – சேரும்
கோடிபுண்ணியம் நிறுத்து தம்பி.‘

சிறுவியாபாரிகளுக்குப் பெரிய வருமானம் எப்போதுமில்லை. ஆகவே, திருவிழாக் காலங்களில் தம் கடைகளுக்கு வருவோரிடம் தம் சரக்குகள் அனைத்தையும் விற்றுத் தீர்த்துவிடவேண்டும் எனும் பேரார்வம் அவர்களிடம் இருப்பது இயல்பே. அப்படித்தான் இந்த வியாபாரியும் தன் சேப்பு (pocket) காலியாகும்வரை சிறுமிக்குக் காப்புப் போடுகிறானே என்றஞ்சி, ”வளையல் போட்டது போதுமையா! நான் ஊர்போய்ச் சேரக் காசு வேணுமையா!” என்று கெஞ்சிநிற்கும் தந்தையைத் தன் கவிதையில் நகைச்சுவையாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகிறேன்.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி 130-இன் முடிவுகள்

  1. எனது கவிதையை இவ்வாரத்தின் நல்ல கவிதையாகத் தெரிவு செய்த மேகலா இராமமூர்த்திக்கும் வல்லமை குழுவினருக்கும் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *