மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -11
க. பாலசுப்பிரமணியன்
திருக்கள்வனூர் – அருள்மிகு ஆதிவராகப் பெருமாள்
கள்வனாய்ப் பிறந்தாய் கம்சனே சிறையிட
கள்வனாய்ச் சென்றாய் காரிருள் நேரத்தில்
கள்வனாய் வளர்ந்தாய் கோபனின் வீட்டினில்
கள்வனே! கண்ணனே! கருணையின் மன்னனே !
கோபியர் வீடுகளில் வெண்ணையைத் திருடி
கோபியர் நெஞ்சங்களைக் குழலினால் திருடி
கோதையின் உள்ளத்தை அரங்கத்தில் திருடி
கோலங்கள் ஆயிரம் கொண்டாய் கள்வனே !
மண்ணுண்ட வாயினிலே மாயைகள் காட்டினாய்
மழலைப் பொழுதிலே மாமனை அழித்தாய்
மதுராவில் ஆயிரம் கண்ணனாய் ஆடினாய்
மாலனே! மாயனே ! மனங்கவர் கள்வனே !
அட்டமியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் காப்பவனே
நவமியில் பிறந்தாலும் நிறைநிலவாய் வந்தவனே
அடியார்கள் உள்ளத்திலே அனுதினமும் பிறப்பவனே
அழிவில்லா உனக்கெதற்கு பிறப்பெடுக்கும் கள்ளத்தனம்?
மறைந்திருந்து பார்ப்பவனே மறைந்திருந்து காப்பவனே
மறைவழியில் வாழ்ந்திடவே மறைசொன்ன சாரதியே !
மலைதன்னில் நின்றாலும் மடையெனவே அருள்பெருக்கி
மனமெல்லாம் நிறைந்தவனே மங்கலமே வளர்த்திடுவாய் !