எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்

அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்

மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

 

இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்

சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

 

வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து

மீதிப் பாதங்களை ஊன்றி

நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்

அதன் பார்வையில்

தயை கூறக் கோரும்

கெஞ்சல் மிகைத்திருக்கும்

 

அபூர்வமானவை
பூனைப் பார்வைகளற்ற

குடியிருப்புக்கள்

 

அரூபமான கண்களைக் கொண்ட
பூனைகள்

பூனைகள் மாத்திரமேயல்ல

 

 

– எம்.ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *